பயன்மிகு இணையவழிச் சேவைகள் – தகவல் தொடர்பு முறைகள்

0

சுரேஜமீ.

முகங்கள் பார்த்து கதைகள் பேசிக் களித்த காலங்கள் கடந்து, நாம் வெகுதூரம் வந்ததற்கான சாட்சியே, நாம் இன்றைக்கு இணையத்தை, உற்ற தோழனாகவும்; தொடர்பாகவும் கொண்டுள்ள காட்சி எனலாம்!   காலம் தன் வேகத்தைக் கூட்டவுமில்லை; குறைக்கவுமில்லை! ஏனோ நாம் மட்டும் இன்னமும், காலம் ஓடுகிறது என்ற சொல்லை; நம் இயல்புக்குத் தகுந்தவாறு பயன்படுத்தத் தவறுவதில்லை.  மனிதத் தொடர்புகள்  தூரமாகும்போது, அதனை நம் அருகே கொணரத் துணை புரியும் இணையத் தொடர்பு சாதனங்களையும், அதைக் கையாளும் முறைகளையும், சற்று உங்கள் மனதில் பதிய வைப்பதுதான், இந்தக் கட்டுரையின் நோக்கம்!

 

இந்தக் கட்டுரையில் மூன்று முக்கியத் தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும்; அதனைக் கையாளும் வழிகள் பற்றியும் குறிப்பிட முனைகிறேன்;

  1. முகநூல் (Facebook)
  2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp – இதற்குத் தமிழாக்கம் என் சொந்த முயற்சி; இணையான வார்த்தைகள் வரவேற்கப் படுகின்றன; அதே சமயம் இச்சொல்லே பழக்கத்திற்கு வந்தால் அதன் பெருமை என் தமிழ்த்தாய் தந்த எண்ணத்திற்கு)
  3. குறியீட்டுச் செய்தி (Twitter) – இத் தமிழாக்கமும் என் சொத்த முயற்சியே! குறியீடுகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால், ‘குறியீட்டுச் செய்தி’ எனப் பெயரிட்டுள்ளேன்.

 

முகநூல் (Facebook):

ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்களுள் ஒருவரான மார்க் சுக்கெர்பெர்க் என்பவரால், தன் சக மாணவர்களோடு ஒரு தொடர்பினை ஏற்படுத்த செய்யப்பட்ட ஒரு முயற்சி, இன்று உலகத்தையே தன் தொடர்பில் வைத்திருப்பதோடு, உலக அளவில் ஒரு ஒப்பற்ற தகவல் தொடர்பு ஊடகமாகவும், மொத்த இந்தியாவின் மக்கள் தொகையை விஞ்சும் அளவிற்கு, சற்றேறக் குறைய 130 கோடிக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டதாகவும், சுமார் 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டுவதாகவும் வளர்ந்திருக்கிறதென்று சொன்னால், அதன் வளர்ச்சியை உங்களின் மனக்கண் முன் கொண்டு வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி எனக்கு!

முகநூலின் பயன்

இற்றைக் காலங்களில், உலகம் ஒரு சின்ன உள்ளங்கைக்குள் அடங்குவது போன்று சுருங்கிவிட்டது.  சிறுவனாக இருந்த பொழுது, முகவையிலிருந்து சென்னை பெருந்தூரமாகத் தெரிந்தது என் போன்றோர்க்கு; ஆனால், இன்று படித்த குடும்பங்களில், வீட்டுக்கு ஒரு பிள்ளை வெளிநாட்டில் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது என்று சொன்னால், ஆச்சரியம் ஏதுமில்லை.  இத்தகைய சூழலில், தொலைவில் இருப்பவர்களோடு, அடிக்கடித் தொடர்பில் இருப்பதற்கு, நாம் தொலைபேசியையோ, அலை பேசியையோ உபயோகப் படுத்தினால், மிகவும் அதிகமான செலவு பிடிக்கும்.  அதே வேளையில், நமக்கு ஒரு முகநூல் கணக்கு இருந்தால், நம்மால், சுலபமாக நம் உறவுகளை அவர்களின் முகநூல் கணக்கோடு இணைத்து, தினமும் செய்திகளப் பகிர்ந்துகொள்ள ஏதுவாக இருக்கும்!  சரிதானே?

 எப்படித் துவங்குவது?

படித்தவர்களே சில நேரங்களில், முதன் முதலாக ஒரு செயலைச் செய்யும்போது, ஒரு தயக்கம்; ஒரு சிறிய அச்சம் அல்லது ஏன்? எதற்கு என்னும் கேள்வியால், அச் செயலைக் காலம் தாழ்த்துவதோ அல்லது தவிர்ப்பதோ உண்டு! அவர்களுக்கான ஐயப்பாடுகளை நீக்குவதும், என்ன செய்யவேண்டும் எனப் பகர்வதும்தான், இணைத்துள்ள நிழற்படமும் அதற்கான விளக்கமும்!

சுரேஜமீ

இணைத்துள்ள படத்தில் எண் வரிசைப் படி, நாம் கொடுக்கவேண்டிய தகவல்களைப் பார்க்கலாம்;

  1. தாங்கள் பெயர்.  இங்கே உங்களின் பயன்பாட்டுக்கேற்றவாறு, நீங்கள் தகவல்களைப் பகிரலாம்.  பயன்பாடு என்று சொல்லும்போது, கீழ்க்காணும் ஏதேனும் ஒன்றுக்கு ஏற்ப, உங்களின் சுய தகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்;
  • குடும்ப உறவுகள் மற்றும் துறை சார்ந்த நண்பர்கள் மட்டும்
  • நட்பு வளைய மேம்பாடு மற்றும் பொழுது போக்கு
  • திறன் வெளிப்படுத்தல்
  • இன்ன பிற

இங்கு நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியக் காரணியே, உண்மைத் தகவல் பகிர்வதா? அல்லது புனைப் பெயர் மற்றும் வெற்றுத் தகவல் பகிர்வதா என்பதே!

  1. இது தங்களின்  முதல் தகவலைத் தழுவியது.
  2. உங்களின் உண்மையான மின்னஞ்சல் கணக்கு ஒன்றைப் பகிர்தல் அவசியம். முகநூல் கணக்கு துவங்கிய பின், துவங்கிய நபரைச் சரி பார்க்கும் அஞ்சல், இந்த முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்க!

இதே தகவலை, இதற்கு அடுத்த தகவல் நிலையிலும் திரும்பப் பதிவிடுங்கள்

  1. உள் நுழை பாதுகாப்பு சொல்.
    1. தாங்கள் எளிதில் நினைவில் வைக்கத் தக்க ஒரு சொல்லைப் பயன்படுத்துதலும்;
    2. அச்சொல்லில்
      1. ஒரு தலைச் சொல்லும்(Capital Letter);
      2. ஒரு எண்ணும் (Number);
  • ஒரு அனுமதிக்கப்பட்ட சிறப்புக் குறியீட்டுச் சொல்லும் (Special Character) இருந்தால் நல்லது!
  1. இது தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!
  2. இதுவும் தங்களின் முதல் தகவலைத் தழுவியது.  ஆனால், கண்டிப்பாக ஒரு தகவலைப் பதிதல் அவசியம்!

மேற்கூறிய தகவல்கள் நிலையிட்ட பின், “Sign Up” அழுத்த, உங்களின் முகநூல் கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு உங்களுடையதுதானா எனச் சரி பார்க்கும் மின்னஞ்சல் உங்களுக்கு அனுப்பப்படும்.  மின்னஞ்லில் குறிப்பிட்டுள்ள தொடர்பானைச் சொடுக்க, உங்கள் முகநூல் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்!

என்ன முகநூல் கணக்குத் துவங்கலாமா?  இந்தியாவில் இதுவரை 10 கோடிக்கும், அதிகமானவர்கள், முகநூல் கணக்கு வைத்திருப்பதாக ஒரு செய்தி சொல்கிறது  கணக்குத் துவங்குவது சம்பந்தமாக, மேலதிகத் தகவலுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள, இணைப்பானைச் சொடுக்கவும்!

http://www.wikihow.com/Set-up-a-Facebook-Account

குறைந்த பட்ச பாதுகாப்பு

முகநூல் கணக்கு வைத்திருப்பதன் நோக்கமே, நாம் நினைக்கும் செய்திகளைத் தன் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதுதான்.  அத்தகைய சூழலில், நாம் பகிரும் தகவல்களில், பெரும்பாலும், நம்முடைய அல்லது குடும்பத்தாருடைய நிழற்படங்கள்; காணொளிக் காட்சிகள், பிற ஆவணங்கள் என நிரம்பி இருக்கலாம்!  ஆனால், மேற்கூறிய அனைத்தும், ஏதோ ஒரு வகையில், இன்றைக்கு இருக்கக் கூடிய விஞ்ஞான வளர்ச்சியில், திரித்துப் பகிரக் கூடிய வாய்ப்பு இருப்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம்!

அதற்கான சில பாதுகாப்பு குறித்த தகவலைப் பார்ப்போமா?

  1. உங்கள் சுய குறிப்புகளின் பாதுகாப்பு குறித்து, நீங்கள் முடிவு எடுக்க ஏதுவாக, எது மற்றவர்களுக்குத் தெரியவேண்டும்? எது தெரிய வேண்டுவது இல்லை என்பதைத் தீர்மானித்து, அதற்கேற்றார் போல, உங்கள் சுயதகவல் பரிமாற்றம் செய்யலாம். இதோ அதற்கான புரிதல் படம்;

சுரேஜமீ1

  1. நிழற்படங்களை யாருடன் நாம் பகிரவேண்டும் என்பதையும்; அதன் பாதுகாப்பை எப்படி உறுதிப்படுத்துவது என்பதையும் விளங்கிக் கொள்ள, கீழுள்ள படத்தைப் பார்க்க;

சுரேஜமீ2

பெரும்பாலும், நிழற்படத்தின் வலதுமுனையில், பூமிப் பந்து போன்ற உருண்டைச் சின்னத்தில், சொடுக்க, அது மேற்காணும் தகவல்களைப் பகிரும்!  அதற்கேற்றவாறு, உங்களின் நிழற்படம், யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம்.  குறிப்பாக, சில படங்களை நாம் சேமிப்பில் வைக்கவும் முகநூலை உபயோகிக்கலாம்.  அத்தகைய சூழலில், நிழற்படங்களை நாம் மட்டுமே பார்க்கக் கூடிய வகையில், பூட்டு சின்னம் (Only Me) அமைப்பில் சொடுக்க, அப்படம் மிகுந்த பாதுகாப்போடு, நாம் மட்டும் பார்க்க ஏதுவாக அமையும்.

என்ன உபயோகமான தகவல்தானே?

  1. அடுத்து, நம்மை யார் தொடுப்புச் செய்வது; நம் நிலைத்தகவலில் அடுத்தவரை தகவல் பதிய அனுமதிப்பதா? வேண்டாமா?

சுரேஜமீ3

  1. நமக்கு யார் நட்பு விண்ணப்பம் அனுப்புவது என, ஒவ்வொன்றையும், நேர்த்தியாக, நாமே தீர்மானிக்க முடியும்; அதற்கான விளக்கப் படம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது!

 

சுரேஜமீ4

 

  1. சிலவேளைகளில், நாம் நல்லவர் என நட்பு விண்ணப்பங்கள் வரவேற்கும்போது, போகப் போக, அவர் பகிரும் தகவல்கள், நமக்கு சில சங்கடங்களையோ, அல்லது கருத்து ஒவ்வாமையையோ ஏற்படுத்தலாம். அத்தகைய வேளையில், நீங்கள் அவருடனான தொடர்பைத் துண்டிக்க நினைக்கலாம்.  அதை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் சுட்டி, இதோ உங்களின் பார்வைக்கு;

சுரேஜமீ5

மேற்கூறிய இந்த ஐந்து தகவல்களும், உங்கள் முகநூல் கணக்கை நிச்சயம் ஒரு பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான மிக முக்கியக் கூறுகளாக இருக்கும் என நம்புகிறேன்!  மேலும் அதிகத் தகவல்களுக்கு, முகநூல் பக்கத்தில் உள்ள பாதுகாப்பு குறித்த விளக்கங்களைப் பார்க்கவும்!

 

ஏகிநிற்பது என்ன? (Whatsapp):

அடுத்து நாம் காண இருப்பது ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற தகவல் தொடர்பு முறை

இன்றைய அலைபேசி உலகில், அவரவர் கைகளை அலங்கரிப்பதில், நவீன கைப்பேசிகளின் பங்கை யாராலும் மறுக்க முடியாது.  அவற்றுள் இரு முக்கிய மென்பொருள்கள் உலகளாவி இருக்கின்றன.  அவை முறையே ஆன்ராய்டு மற்றும் ஆப்பிள் இயக்கிகள்!  இவற்றுள் ஆன்ராய்டு இயக்கி மிக எளிமையாக, அனைத்து பயன்பாட்டுக்கும் சாதகமாக இருப்பதாக எண்ணுகிறேன்.  சமீப காலமாக, “ஏகிநிற்பது என்ன” எனும் பயன்பாட்டில், ஆன்ராய்டு இயக்கி மூலமாக, ஒருவருக்கொருவர் பேசவும் முடிவதாக அறிகிறேன்.

மிகக் குறுகிய காலத்தில், மிகப் பரவலாக்கப் பட்ட மகத்தான ஒரு தகவல் தொடர்பு முறை ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்று சொன்னால் மிகையாகாது.  இது முதன் முதலில் புழக்கத்திற்கு வந்தது 2009ம் ஆண்டு.  கடந்த ஐந்து ஆண்டுகளில், இதன் அபரிமித வளர்ச்சி கண்டு, முகநூல் நிறுவனத்தார், இந்த தொடர்பு முறையை, அதன் உரிமையாளர்களிடமிருந்து, சற்றேறக்குறைய ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள், என்றால், இதன் வளர்ச்சி, எத்தகையது என்பதை வாசகர்களாகிய நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

கடந்த ஜனவரி 2015 வரை, சுமார் 70 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது! அதில், சுமார் 7 கோடி உபயோகிப்பாளர்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். (http://en.wikipedia.org/wiki/WhatsApp)

இன்று ஒவ்வொரு அமைப்பு சார்ந்த குழுமங்களும் பெரும்பாலும், தன் அங்கத்தினர்களுடனானத் தொடர்புக்கு, ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற முறையைத் தான் பயன்படுத்துகின்றன.

அவை பற்றிச் சில குறிப்புகள்!

  1. இதில் கணக்குத் துவங்குவதற்கு அடிப்படைத் தேவை ஒரு நவீன கைப்பேசி.
  2. ஏகிநிற்பது என்ன? (Whatsapp) என்ற பயன்பாட்டுத் தளத்தின் மூலம், நாம் செய்திகள், நிழற்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியும்.

குறைந்த பட்ச பாதுகாப்பு முறைகள்

1. பல நேரங்களில், நம்முடைய கவனக் குறைவின் காரணங்களால், மிகுந்த கன அளவுடைய காணொளிக் காட்சிகள் மற்றும் நிழற்படங்கள், தானியங்கிப் பதிவிறக்கம் (Auto download) செய்யப்படுகின்றன. அதனால் நமக்கு ஏற்படும் பொருட்செலவு மிகுதியாகும். இதைத் தடுப்பதற்கு, கீழ்காணும் சுட்டியைக் கவனிக்கவும்.

சுரேஜமீ6

2. நம்முடைய பயனீட்டு அளவுகளை அவ்வப்போது கண்காணிப்பது எப்படி என்பதை விளக்கும் சுட்டி

சுரேஜமீ7

3. சில வேளைகளில், விரும்பத்தகாத செய்திகளும், காணொளிப் படங்களும் வரும்போது, அத்தகைய செய்தி அனுப்பும் நபர்களைத் தடை செய்வது எப்படி என்பதை விளக்கும் படம்.

சுரேஜமீ8

 

4. பலருடைய அனுபவமே, நாம் விரும்பும்பொழுது, நம்முடைய கைப்பேசியில், தேவையான நிழற்படமோ, காணொளியோ எடுக்கப் போதுமான இடவசதி இல்லாமல் இருக்கும்.  இதற்குக் காரணம், நாம் அவ்வப்பொழுது அழிக்காமல் வைத்திருக்கும் சேமிப்புச் செய்திகளும்; படங்களுமே!  அதனை எவ்வாறு சுத்தப்படுத்தி கைப்பேசிக்கான சேமிப்புப் பகுதியை தகுதிப்படுத்துவது என்பதை விளக்கும் படம்.

சுரேஜமீ9

பெரும்பாலும் நாம் அறிந்த செய்திகளாகவே இருந்தாலும், சில வேளைகளில் அனைத்தும் ஒருங்கிணைத்து ஒரு தொகுப்பாகப் பார்க்கும்போது அது நம் மனதில் எளிதில் தங்கிவிட ஏதுவாக இருப்பதால், நிச்சயம் உங்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

குறியீட்டுச் செய்தி  (Twitter):

தகவல் பரப்பும் களமாக ஒரு குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்ததுதான் இந்தக் குறியீட்டுச் செய்தி(Twitter) என்று சொன்னால் மிகையாகாது.  2006ம் ஆண்டில் நான்கு நபர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய இந்தத் தகவல் பரிமாற்ற முறை, இன்று உலகில் ஏறக்குறைய 28 கோடி பயனீட்டாளர்களைக் கொண்டதாக உள்ளதாக ஒரு இணையச் செய்தி கூறுகிறது. (http://en.wikipedia.org/wiki/Twitter)

அவை பற்றிச் சில குறிப்புகள்!

  • இது பெரும்பாலும் செய்தியைத் துரிதமாக அனுப்புவதற்கு உதவுகிறது.
  • மிக அதிக பட்சமாக 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகிக்க முடியும்.
  • மிக அதிகபட்ச வாசகர்களைச் சென்றடையும் வல்லமை பெற்றது.
  • வணிக உபயோகத்திற்கு ஏற்ற உன்னதமான தகவல் பரிமாற்ற முறை!

 

முடிவுரை

இதுவரை நாம் பார்த்த இந்த மூன்று விதமான தகவல் பரிமாற்றக் களங்களையும், அதற்கேற்ற செயல் வடிவத்தில் பயன்படுத்த கீழ்க்காணும் விதத்தில் பிரிக்க முற்படுகிறேன்.

  1. உறவுகளோடு ஒட்டி இருக்க ‘முகநூல்’ (Facebook)
  2. குறுஞ்செய்திகள் மற்றும் காணொளிப் பரிமாற்றத்திற்கு ‘ஏகி நிற்பது என்ன? (Whatsapp)
  3. வணிக மற்றும் வாடிக்கையாளர் சேவைக்கு ‘குறியீட்டுச் செய்திகள்’ (Twitter)

ஆக, நம் வாழ்வில் அன்றாடம் பயன்பாட்டில் உள்ள மிக முக்கிய மூன்று தகவல் பரிமாற்று வழிமுறைகளைப் பற்றி எனக்குத் தெரிந்த வகையில், உங்களின் சிந்தனைக்குப் பகிர்ந்த இந்த விடயங்கள், உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *