நாகேஸ்வரி அண்ணாமலை

சென்ற வாரம் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.  நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லவிருந்த ஒரு பெண், விமானத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த நடைபாதைக்கு அருகில் இருந்த சீட்டில் உட்கார்ந்தார்.  அவர் சீட்டில் நன்றாக செட்டில் ஆகி இருந்த வேளையில் இன்னொரு பயணி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஜன்னலுக்கு அருகே இருந்த சீட்டிற்கு வந்தார்.  தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கப் போவது ஒரு பெண் என்று தெரிந்ததும் அந்தப் பெண் பக்கத்தில் தன்னால் உட்கார முடியாது என்றும் தன்னுடைய மதம் மனைவியல்லாத வெறொரு பெண்ணின் அருகில் உட்காருவதைத் தடை செய்கிறது என்றும் அதனால் தனக்கு இன்னொரு இடம் ஒதுக்கித் தருமாறும் விமானப் பணிப்பெண்ணைக் கேட்டாராம்.  அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்தப் பெண் முதலில் எரிச்சல் அடைந்தாலும் எதற்கு வம்பு என்று எண்ணி வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு போகச் சம்மதித்திருக்கிறார்.

இதே மாதிரி இன்னொரு தடவை நியூயார்க் வழியாக லாஸ் வேகஸிலிருந்து இஸ்ரேல் செல்லும் விமானப் பயணத்தின்போது ஒரு கணவனும் மனைவியும் பயணித்தார்கள்.  கணவனுக்கு நடைபாதைக்கு அருகில் இருந்த இருக்கையும் மனைவிக்கு நடு இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தன.  அதே வரிசையில் ஜன்னலுக்குப் பக்கத்து இருக்கை ஒரு யூதருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.  அவர் அவருக்கு அருகில் உட்காரப் போகும் தம்பதியை கணவனை நடு இருக்கைக்கும் மனைவியை நடைபாதைக்கு அருகில் இருக்கும் இருக்கைக்கும் மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டாராம்.  ஆனால் அந்தப் பெண் மறுத்துவிட்டாராம்.

Reb_Moshe_Feinsteinஅமெரிக்காவிலிருந்து இஸ்ரேலுக்குச் செல்லும் விமானப் பயணங்களின்போது இம்மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கின்றனவாம்.  பெண்களின் அருகில் உட்கார மறுப்பவர்கள் சநாதன யூதர்கள்.  இவர்கள் தங்கள் மதம் சொல்லும் எந்த போதனையையும் கண்ணை மூடிக்கொண்டு கடைப்பிடிப்பவர்கள்.  இவர்களால் அடிக்கடி இந்தப் பயணங்களின்போது சில சச்சரவுகள், காலதாமதம் ஏற்படுகிறதாம்.  சநாதன யூதர்களின் மதத்தலைவர் ஒருவர் மீடியாக்களில் பெரிதுபடுத்தப்படும் அளவிற்கு இது இல்லையென்று கூறியிருக்கிறார்.  பல சநாதன யூதர்கள் மதத்தலைவர் மோஷே ஃபெயின்ஸ்டைன் கூறியிருப்பதைப் பின்பற்றுகிறார்களாம்.  சிறிது நேர பயணத்தின்போது யூத ஆண்கள் பெண்களின் அருகில் அமர்ந்து பயணிப்பது தவறு இல்லையென்றும் ஆனால் தவறுதலாகப் பெண்ணைத் தொடும் சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டால் அதில் இன்பம் காண்பது தவறு என்று சொல்லியிருக்கிறார்.  யாரோ ஒரு பெண் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்வதில் என்ன நேர்ந்துவிடப் போகிறது என்கிறார் ஒரு பயணி.

சநாதன யூதர்கள் நிறையக் குழந்தைகள் பெற்றுக்கொள்வதால் அவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகிறதாம்.  அவர்களில் நிறையப் பேர் விமானத்தில் பயணம் செய்வதால் விமான கம்பெனிகளுக்கு அவர்களால் நிறைய வருமானம் வருவதால் அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தங்கள் கடமையாகிறது என்கின்றன விமானக் கம்பெனிகள்.

இப்படி சநாதன யூதர்கள் மனைவியரல்லாத பெண்களின் அருகில் உட்கார்ந்து பயணம் செய்வதில்லை என்று அறிந்தபோது நான் பல தசாப்தங்களுக்கு முன் மைசூரிலிருந்து தமிழ்நாட்டிற்குப் பேருந்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஞாபகத்திர்கு வருகின்றன.  அப்போது தமிழ்நாட்டு ஆண்கள் எல்லாம் சநாதன யூதர்களைப் போல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பதுகளில் மைசூரிலிருந்து மதுரைக்கு நேரடி பஸ் கிடையாது.  கோயம்புத்தூர் போய்தான் மதுரைக்குப் போக வேண்டும்.  அப்போது மைசூர்-கோயம்புத்துர் பஸ்கள் சொகுசு பஸ்கள் இல்லை.  அதனால் ஒரு பக்கம் இரண்டு இருக்கைகளும் இன்னொரு பக்கம் மூன்று இருக்கைகளும் அவற்றில் உண்டு.  நான் என் மகள்கள் இருவரும் சிறு குழந்தைகளாக இருக்கும்போது அதில் பயணம் செய்வதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன்.  என் மகள்கள் அரை டிக்கெட் எடுக்கும் வயதாக இருக்கும்போதே அவர்கள் இருவருக்கும் முழு டிக்கெட் வாங்குவேன்.  இதற்குக் காரணங்கள் இரண்டு.  ஒன்று வேறு ஆண் பயணிகள் எங்கள் சீட்டில் உட்கார்ந்து இடைஞ்சல் கொடுக்கக் கூடாது என்பது.  இரண்டாவது மூன்று பேர் சீட்டில் இடம் கொஞ்சம் தாராளமாக இருக்கும்.  குழந்தைகளுக்கும் முழு டிக்கெட் வாங்கினால் அந்த சீட் முழுவதையும் எடுத்துக்கொள்ளலாம்.  அப்படிப் பயணம் செய்யும்போது சில கிராமத்துப் பெண்கள் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பிரயாணம் செய்யக் கூடாதா என்று சண்டைக்கு வருவார்கள்.  நீண்ட தூரப் பயணம் எவ்வளவு களைப்படையச் செய்யும் என்பது அவர்களுக்குத் தெரியாது.  அவர்கள் இடையில் ஏறி இடையில் இறங்கிவிடுவார்கள்.  மேலும் குழந்தைகளுக்கு முழு டிக்கெட் வாங்கியிருக்கிறேன் என்று அவர்களிடம் விளக்க முடியாது.  ஏதோ நான் எல்லா சீட்டுகளையும் அடைத்துக்கொண்டு அவர்களுக்கு இடம் கொடுக்கவில்லை என்பதுபோல் குறை சொல்லிக்கொண்டே வருவார்கள்.

பின்னால் மதுரைக்கு மைசூரிலிருந்து நேரடி பஸ் விட ஆரம்பித்த பிறகு இன்னொரு விதமான கஷ்டம்.  பிள்ளைகள் இருவரும் பெரியவர்களான பிறகு தனியாகப் பயணம் செய்யும் தேவை ஏற்பட்டது.  இரண்டு பக்கமும் இரண்டிரண்டு சீட்டுகள் இருக்கும்.  ஆனால் பெண்களுக்கென்று தனி சீட்டுகள் ஒதுக்கி இருக்க மாட்டார்கள்.  எங்கு உட்கார்ந்தாலும் இன்னொருவர் அருகில்தான் உட்கார வேண்டும்.  அந்த இன்னொருவர் பெண்ணாக இருந்துவிட்டால் பிரச்சினை இல்லை.  ஆனால் ஆண் என்றால் பிரச்சினைதான்.  பத்து மணி நேர இரவுப் பயணத்தை எப்படித் தூங்கிவழிந்துகொண்டு ஒரு ஆணின் பக்கத்தில் கழிக்கப் போகிறோம் என்ற எண்ணமே தூக்கத்தைக் கெடுத்துவிடும்.  நடத்துனரிடம் சொல்லி ஒரு பெண்ணை அருகில் உட்கார வைக்குமாறு வேண்டுகோள் விடுப்பது அவ்வளவு எளிதல்ல.  எல்லா நடத்துனர்களும் உதவி செய்யும் மனப்பாங்கில் இருக்க மாட்டார்கள்.  அப்படியே உதவுபவர்களாக இருந்தாலும் பயணிகள் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.  அதிலும் குறிப்பாகக் கணவனோடு பயணம் செய்பவர்கள் கணவனை விட்டு வேறு இடத்திற்குப் போக விரும்ப மாட்டர்கள்.  இதற்கு மேல் முன் சீட்டிலும் பின் சீட்டிலும் இருக்கும் ஆண் பயணிகள் செய்யும் சில்மிஷங்கள் வேறு.

ஒரு முறை ஒரு பயணத்தின்போது ஒரு ஆணின் பக்கத்தில்தான் எனக்கு இடம் கிடைத்தது.  அதே பஸ்ஸில் பயணித்த ஒருவர் தன் ஏழெட்டு வயது மகளோடு எனக்குப் பின் சீட்டில் உட்கார்ந்திருந்தார்.  நான் நடத்துனரிடம் ஒரு பெண் பயணியை அருகில் உட்காரவைக்க முடியுமா என்று கேட்டுக்கொண்டதையும் அவர் எனக்கு உதவுவதற்கு சிரத்தை காட்டாததையும் பார்த்துவிட்டுத் தன் மகளை என் அருகில் உட்காரும்படி கூறினார்.  அந்தக் குழந்தைக்குத் தந்தையை விட்டுத் தனியாக உட்கார மனமில்லை.  அப்படியும் அவர் வலுக்கட்டாயமாகக் குழந்தையை என் அருகில் உட்காரவைத்தார்.  அப்படி அவர் செய்தபோது அழ ஆரம்பித்த அந்தக் குழந்தை ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அழுது, அழுது அசந்துபோய் தூங்கிவிட்டது.  நான்      அந்தக் குழந்தைக்கு என்னென்னவோ விளையாட்டுக் காட்டிப் பார்த்தேன்.  ஒன்றுக்கும் அந்தக் குழந்தை மசியவில்லை.  எனக்கே அந்தக் குழந்தையை அதன் தந்தையிடம் அனுப்பிவிடுவோமா என்றிருந்தது.  குழந்தை தூங்க ஆரம்பித்ததும் இனித் தேவையில்லை என்று எண்ணி நானும் நிம்மதியாகத் தூங்க ஆரம்பித்தேன்.  அந்தத் தந்தையை இன்றளவும் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.

இது பற்றிப் போக்குவரத்து அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினேன்.  ‘பக்கத்தில் பயணிக்கப் பெண் பயணி இல்லையென்றால் நான் இரண்டு டிக்கெட்கள் வேண்டுமானாலும் வாங்குகிறேன்’ என்று அவர்களிடம் சொல்லிப் பார்த்தேன்.  அதற்கும் அவர்கள் இணங்கவில்லை.  நான் கூறியவற்றிற்குப் பரிகாரமும் தேடவில்லை.  இந்தியாவில் தனியாக, அதுவும் இரவு நேரப் பேருந்துகளில், பயணம் செய்யும் பெண்கள் அரிது என்பதால் போலும்.

இந்தச் சமயத்தில் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது.  எங்கள் பாட்டி இறந்ததற்கு துக்கம் கேட்கவந்த உறவினர்களில் எங்கள் பாட்டியின் சகோதரரும், அவருடைய மனைவியும் இன்னும் இரு சகோதரர்களின் மனைவிமார்கள் இருவரும் அடங்குவர்.  இவர்கள் நால்வரும் காரில் வந்திருந்தனர்.  போகும்போது அதே ஊரைச் சேர்ந்த உறவுக்காரப் பெண் இன்னொருவரையும் (அந்தப் பெண் வயதான விதவை; வரும்போது பஸ்ஸில் வந்திருந்தார்.)  தங்களோடு அழைத்துச் சென்றனர்.  பெண்ணென்றாலும் அவரை என் பாட்டியின் தம்பியின் பக்கத்தில் முன் சீட்டில் உட்காரவைத்தனர்.  இவர் மேலே சொன்ன சநாதன யூதர் போல் நடந்திருந்தால் மனைவியைத் தன் பக்கத்தில் உட்காரும்படி வற்புறுத்தியிருப்பார்.  இந்தியாவிலும் பிற பெண்களை ஆண்கள் பக்கத்தில் உட்காரவைப்பதில்லை.  ஆயினும் அன்று ஏனோ அவருடைய மனைவியும் மற்றப் பெண்களும் அப்படி நடந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.  மனைவி வசதியாகப் பின் சீட்டில் வரட்டும் என்று நினைத்தும் இருக்கலாம். . முன் இருக்கைகளைவிட பின் இருக்கைகள் விபத்து நடந்தால் கொஞ்சம் பாதுகாப்பானவை என்றும் நினைத்திருக்கலாமோ என்னவோ.  முன்னால் உட்கார்ந்திருந்த என் பாட்டியின் தம்பி அந்தப் பெண்ணிடமிருந்து கூடியவரை தள்ளி உட்கார வேண்டும் என்று நினைத்து ஓட்டுனருக்கு மிக அருகில் உட்கார்ந்துகொண்டதாகக் கூறினார்கள்.  இதனால் ஓட்டுனருக்கு இடம் போதாமல் போய் அவர் ஸ்டியரிங்கைச் சரியாகக் கையாளாமல் எங்கள் வீட்டை விட்டுச் சென்ற பத்து மைல்களுக்குள்ளேயே ஒரு சிறு பாலத்தில் காரை மோதி அந்தக் காரில் பயணித்த மூன்று பேர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டு வெகு நாள் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.  அப்படி அடி வாங்கியவர்களுள் அந்த வயதான விதவைப் பெண்ணும் சேர்த்தி.

இந்தியாவில் எல்லா ஆண்களும் சநாதன யூதர்கள் போல் பெண்கள் பக்கத்தில் பயணம் செய்வதில்லை என்று அடம் பிடித்திருந்தால் எனக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் எந்தப் பெண்ணிற்கும் ஏற்பட்டிருக்காது.

அது போகட்டும்.  இன்னொரு சந்தேகம்.  பெண்கள் பக்கத்தில் உட்கார்ந்து பயணம் செய்ய விரும்பாத சநாதன யூதர்கள் எல்லோரும் ஏகபத்தினி விரதர்களா?  யூதர்களில் இத்தனை ராமர்கள் இருக்கிறார்களா?   சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒரு யூதமதத் தலைவர் தான் காதலித்த இன்னொரு பெண்ணை மணந்துகொள்ள வேண்டி தன் மனைவியையே அடியாட்கள் வைத்துக் கொலைசெய்தது ஞாபகத்திற்கு வருகிறது.  மனைவி இருக்கும்போதுதான் மற்றப் பெண் பக்கத்தில் உட்காரக் கூடாது.  மனைவியைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது தவறில்லையோ என்னவோ!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *