இத்துடன் கிரி டிரேடிங் ரங்கனாதன் பாடிய , அடியேன் எழுதிய லிங்காஷ்டகத்தையும், பஜகோவிந்தத்தையும், குரு பஞ்சகத்தையும் இணைத்துள்ளேன்….லிங்காஷ்டகம் சுப்பு சாமிக்காக எழுதிக் கொண்டே வரைந்த பெரியவா ஓவியமும் இணைத்துள்ளேன்…கிரேசி மோகன்….

பஜ கோவிந்தம்….
—————————–

keshav1
வேறு
——-

சொல்கோவிந்தம் சொல்கோவிந்தம்
சொல்கோவிந்தம் புல்மனமே
வல்லான் காலன் வருகின்ற நேரம்
தொல்காப்பியமா துணையாகும்….?….(1)

வெல்வாய் மூடா செல்வம்சேர்க்கும்
வேட்கை அதற்கு மாறாக
ஈசன் விதித்த இயல்பாம் தொழில்சேர்
காசுபணம் கொள் சீராக….(2)

காமினி கொண்ட கவர்ச்சிகள் மாயை
மாமிசம் ரத்தம் இளக்காரம்
நாமினி வாழ்வோம் நல்லோர் சேர்க்கையில்
தூமணி மாட விளக்காக….(3)

தாமரை இலைமேல் தத்தளிக்கும் நீராய்
நாமுறை வாழ்க்கை நித்யமல்ல பாராய்
பாமரப் பற்றும் பிறவிப் பிணியும்
சாமரம் வீசும் சண்ட மாருதம்….(4)

கூட்டினுள் மூச்சு குடியுள்ள வரையில்
வீட்டினர் கேட்டு விசாரிப்பர்
மாட்டிய மேனி மண்விழத் தாலி
பூட்டிய மனையாள் பயமுறுவள்….(5)

பிள்ளையில் ஆட்டம் பருவத்தில் நாட்டம்
கொள்ளை அழகு கன்னியர் கூட்டம்
வெள்ளையில் சொள்ளையில் வாட்டமாய் மூட்டம்
உள்ளிறை தொட்டதில்
எவர்கிங்கு தேட்டம்….(6)

சோதரா சிந்திப்பாய் சீதனமாய் வந்த
மாதரசி மகன் யாரென்று
பூதலம் விசித்ரம் யாதுந்தன் சரித்ரம்
ஆதலால் ஆய்ந்து அதைத்தீர் நீயின்று….(7)

கற்றோர் சேர்க்கை பற்றினைப் போக்கும்
பற்றது போக பரம வைராக்யம்
உற்றிடும் அறிவால் மற்றவை பூஜ்யம்
பெற்றிடுவாய் நீ மோட்ச சாம்ராஜ்யம்….(8)

தேய்ந்தபின் தேகம் காமுறலாமோ
காய்ந்திடும் குட்டைக்கு காகம் வருமோ
பாய்ந்திடும் சுற்றம் பணமுள்ள வரையில்
ஆய்ந்திடத் தத்துவம் சேர்க்கும்அக் கரையில்….(9)

ஆள்படை செல்வம் இளமையின் கர்வம்
தூள்படும் இமைக்கும் காலத்தில் சர்வம்
நாள்பட அனைத்தும் மாயைஎன்(று) உணர்ந்து
தாள்கிட தெய்வத தத்துவம் நினைந்து….(10)

திடமாய் பொருள்சேர் உடலுள்ள வரையில்
கடல்போல் கூட்டம் அலைமோதும்
முடமாய் மூப்பில் ஜடமானவர்க்கோ
அடடா கூறிட ஆளேது….(11)

——————————————————————————————————————————————————————————————-

keshav

சங்கர லிங்காஷ்டகம்
—————————-

”பிரும்ம முராரி சுரார்ச்சித லிங்கம்”…. மெட்டில்….
—————————————————————-

சத்சிவ சித் தானந்தன லிங்கம்
சகுண உபாசக நிர்குண லிங்கம்
புத்தி அனுக்கிரக பாரதி லிங்கம்
சத் குரு சங்கர தத்துவ லிங்கம்….(1)

தொன்மையில் சிவமாய்த் தோன்றிய லிங்கம்
தென்முகம் நோக்கிய தெய்வத லிங்கம்
சின்மயமான சிதம்பர லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(2)

ஆழ்நிலை த்யானத் தசலன லிங்கம்
அண்ட சராசர மாயா லிங்கம்
ஊழ்நாள் ஊர்த்தவ தாண்டவ லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(3)

முப்புரம் கனலெரி மூட்டிய லிங்கம்
மன்மத தகன மகாதவ லிங்கம்
அப்புவிண் வாயுமண் அக்கினி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(4)

அயனரி அடிமுடி தேடிய லிங்கம்
அலைகலை தலைமுடி சூடிய லிங்கம்
நயன நுதலிடை நீறணி லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(5)

”கனக மகாமழை” காட்டிய லிங்கம்
குருநெறி ”மனீஷா பஞ்சக” லிங்கம்
அனுதினம் ”பஜ கோவிந்தன” லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(6)

ஷண்மத ஸ்தாபக சங்கர லிங்கம்
சத்திய சிவமய சுந்தர லிங்கம்
உன்னத அத்வை தாம்ருத லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(7)

இகபர சுகமருள் ஈஸ்வர லிங்கம்
இம்மையில் மறுமையை ஈன்றிடும் லிங்கம்
பகலென ஒளிர் பரமாத்மக லிங்கம்
சத்குரு சங்கர தத்துவ லிங்கம்….(8)

பலஸ்ருதி
————-
ஜயஜய ஹரஹர சங்கர லிங்கம்
ஜனன மரண நிலைநீக்கிடும் லிங்கம்
தயவொடு தாயெனத் தேற்றிடும் லிங்கம்
தந்தை சதாசிவ சங்கர லிங்கம்….
——————————————————————————————————————————————————————————————-

குரு பஞ்சகம்
————————–

ஒருநோயும் அணுகாத உடல் ஆரோக்கியம்
ஓகோ எனப்புகழ் , ஒரு மேரு திரவியம்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(1)

திருவொத்த மனையாள் திடமான பிள்ளைகள்
தங்கவோ மாளிகை தாயாதி உறவினர்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(2)

மறை சாத்திரங்கள் முறையோடு பயின்றாய்
உரைநடை பாட்டதில் கரைகண்டு வென்றாய்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(3)

அருகாமை அண்டை அசலூர் அனைத்திலும்
மருவிலா மதிப்புடன் மாசற்றிருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(4)

ஈற்றடியில் ஈரேழு உலகாளும் மன்னர்கள்
போற்றிடப் புலமையில் ஆற்றல் இருப்பினும்
குரு பத்மபாதம் மனம் குவியாதபோது
கண்ட பயனென்ன பயனென்ன பயனென்னவோ….(5)
————————————————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *