சு. கோதண்டராமன்.

வேதப் பொன் மொழிகள் சில

 

இயற்கை நியதி
இயற்கை நியதியைப் புரிந்து கொள்வது எளிதல்ல. 6.9 இல் வரும் பின் வரும் மந்திரங்களைக் கவனியுங்கள்.
நாளின் ஒரு பகுதி கறுப்பாகவும் மற்றொரு பகுதி வெள்ளையாகவும் உள்ளது. ஆடை போல் நெய்யப்பட்ட இந்தச் சிக்கலான அமைப்பில் எனக்கு நெடுக்கு நூலும் புரியவில்லை, குறுக்கு நூலும் தெரியவில்லை. தந்தை உதவி இல்லாமல் எந்த மகனாவது இதைப் புரிந்து கொள்ள முடியுமா? அழிவில்லாத இவ்வுலகத்தின் காப்பாளன் கீழிறங்கி வந்து தானே பார்ப்பதை எவன் அறிகிறானோ அவனுக்கே இந்த ரகசியம் தெரியும்.

விதி
நதிகள் தலைகீழாகப் பாய்கின்றன. புல் தின்னும் மிருகம் சிங்கத்தை எதிர்க்கிறது. நரி காட்டுப் பன்றியைக் குகையிலிருந்து துரத்துகிறது. இதன் மர்மம் என்ன? 10.28.4
பிறந்திருக்கும் அனைவரும் தங்களுக்குத் தாங்களே வகுத்துக் கொண்ட வழிகளிலே சென்று முன்னோர்கள் சென்ற இடத்தை அடைகிறார்கள். 10.14.2
குதிரை நுகத்தடியில் கட்டுப்பட்டிருப்பதைப் போல நான் கட்டுப்பட்டிருப்பதை நன்கு அறிகிறேன். எங்களுக்கு எது நன்மை செய்யுமோ அதைச் சுமக்கிறேன். நான் இதிலிருந்து விடுபட விரும்பவில்லை. திரும்பிப் போகவும் விரும்பவில்லை. எல்லாம் அறிந்த தலைவன் எனக்கு வழி காட்டுவானாக 5.46.1

வாழ்க்கை நிலையாமை
மனிதரில் எவனும் தன் ஆயுளை அறியான். 7.23.2
நேற்று இருந்தவன் இன்று இல்லை. தேவனின் அறிவைப் பாருங்கள்.10.55.5

ஒன்று பரம்பொருள்
அக்னி ஒன்றுதான். பல வகையாக மூட்டப்படுகிறது. சூரியன் ஒன்றுதான். பலவற்றின் மீதும் ஆட்சி செலுத்துகிறது. உஷை ஒன்றுதான். அனைத்தையும் ஒளியூட்டுகிறது. இருப்பது ஒன்றுதான் அனைத்துமாகப் பரவி நிற்கிறது. 8.58.2

பக்தி
அசையும் பொருள், அசையாப் பொருள் எல்லாவற்றிற்கும் தலைவனே, தெய்வீக ஒளியே, கன்றுக்குப் பால் சுரந்து நிற்கும் பசுப்போல உன்னை நினைந்து கதறுகிறேன். 7.22.32

தேவர்களின் சிறப்பு
ஆதித்யர்கள் பல கண் உள்ளவர்கள். மனதுக்குள் இருப்பதையும், நல்லது கெட்டது எதுவாக இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் அருகில் இருந்தாலும், அறிவார்கள். 2.27.3
தேவர்கள் எதைக் காக்கிறார்களோ அவை எல்லாம் நன்மையாகவே இருக்கும். 2.23.19
தேவர்கள் விரும்பியது தான் நடக்கும். வேறு யாரும் அதை மாற்ற முடியாது. 8.28.4
இந்திரன் கொடுக்க நினைப்பதை எவரும், தேவனோ, மனிதரோ, தடுக்க முடியாது. 8.14.4
இந்திரனை முழுமையாகப் புகழ வல்லார் யார்? கால்களை மாற்றி மாற்றி வைத்து நடப்பது போல அவன் முன்னால் இருப்பவரைப் பின்னாலும் பின்னால் இருப்பவரை முன்னாலும் கொண்டு வைக்கிறான். 6.47.15
அக்னியே, யார் உன்னிடம் பிரார்த்தனையுடன் வருகிறார்களோ, யக்ஞத்தின் தீவிரத்தையோ அல்லது துவக்கத்தையோ காட்டுகிறார்களோ அவருக்கு நீ வலிமையும் செல்வமும் தந்து காப்பாற்றுகிறாய். 6.15.11
மாயையில் வல்லவர்களோ வலிமையில் மிக்கவர்களோ எல்லோரும் தேவர்களின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் ஆகவேண்டும். 3.56.1
சூரிய கிரணங்கள் தலையிலிருந்து பாலைப் பொழிகின்றன. கால்களால் நீரைப் பருகுகின்றன. 1.164.7
தேவர்கள் பலனை எதிர்பார்த்துக் கொடுப்பதில்லை. நாம் ஒன்றும் கொடுக்காமலே கொடுக்கிறார்கள். நமது நாட்களை மகிழ்ச்சிகரமாக ஆக்குகிறார்கள். 5.49.3

தெய்வ வணக்கத்தின் அவசியம்
தேவர்களின் மனத்தை மகிழ்விப்பவன் அவ்வாறு மகிழ்விக்காதவனைத் தோற்கடிக்கிறான். 8.31.15
பலஹீனமானவனாயினும் மனதைத் தூய்மையுடன் (சூரியனுடன்) இணைத்துக் கொண்டுவிட்டால் அது பயத்தால் நடுங்காது. 5.44.9
நேர்மையைப் போற்றுபவன் பகைவரை வெல்வான். தேவரை வழிபடுபவன், வழிபடாதவரை வெல்வான். ஊக்கமுள்ளவன் வெல்லமுடியாத பகையையும் வெல்வான். யக்ஞம் செய்பவன் யக்ஞம் செய்யாதவனின் உணவை வெல்வான். 2.26.1

நமஸ்காரத்தின் சிறப்பு
நமஸ்காரம் வலிமையானது. நான் அதை மேற்கொண்டுள்ளேன். மண்ணையும் விண்ணையும் தாங்குவது நமஸ்காரம். தேவர்களுக்கு நமஸ்காரம். அது அவர்களை ஆள்கிறது. செய்த பாவங்களை நமஸ்காரம் போக்குகிறது. 6.51.8

யக்ஞத்தின் சிறப்பு
புத்தி உள்ளவன் யக்ஞம் செய்ய விரும்புகிறான், இல்லாதவன் மூழ்குகிறான். 9.64.21
யக்ஞம் செய்பவனும், சோமம் பிழிந்து தருபவனும், தேவர்களை வணங்குபவனும் அழிவதில்லை. 8.31.16
யக்ஞம் இந்திரனை வலுப்படுத்துகிறது. யக்ஞம் செய்பவன், வீட்டிலுள்ள நீர் தாகத்தைத் தணிப்பது போல, விருப்பம் நிறைவேறப் பெறுகிறான். பொய்யான மனதுடன் வஞ்சகமாக வழிபடுபவன், வழி தவறியவன் போல, நோக்கம் நிறைவேறாமல் போகிறான். 1.173.11

பிரார்த்தனை
ப்ரஹ்ம வர்ம மமாந்தரம். – பிரார்த்தனையே எனது கவசம். 6.75.19
அக்னியே, நாங்கள் குதிரைகளாலோ அல்லது பிரார்த்தனைகளாலோ மற்ற ஜனங்களின் மீது எங்கள் வலிமையைப் புலப்படுத்துவோமாக.2.2.10

சில பிரார்த்தனைகள்
அச்வின்களே, எங்கள் வழிபாடு இனிமையும் உண்மையும் கலந்ததாக இருக்கட்டும். 1.22.3
எங்கள் அறிவால் செல்வத்தை அடைய எங்களுக்கு உதவுக, இந்திரனே.8.4.15
வருணா, நாங்கள் ஒளியை விட்டு விலகாதிருப்போமாக. 2.28.7
ஸவிதாவின் சிறந்த ஒளியைப் போற்றுகிறோம். அவர் எங்களது அறிவினைத் தூண்டுவாராக. 3.62.10
தேவர்களுக்கு நலம் செய்யும் தூய கண்ணாகிய சூரியன் உதிக்கிறான். நாங்கள் அவனை நூறாண்டு காலம் பார்த்திருப்போமாக. நூறாண்டு வாழ்வோமாக. 7.66.16
சவிதாவே, கெட்டதெல்லாம் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடத்தில் தூண்டுக. 5.82.5
துன்பங்களைப் போக்கு. எது நல்லதோ அதை எங்களிடம் தோற்றுவிப்பாயாக. 5.82.5

குடும்ப ஒற்றுமை
கணவனும் மனைவியும் சேர்ந்து ஒற்றுமையாகத் தேவர்களைப் பூஜிப்பதால் வரும் பலன்கள்- துன்பங்களிலிருந்து விடுதலை, எதிரிகளின் அழிவு, குழந்தைச் செல்வம், உணவு, வலிமை, புகழ், முழு ஆயுள், ஆனந்தம், தர்ம வழியில் நடத்தல், தெய்வ வழிபாடில்லாதவர் மீது வெற்றி. 8.31

தவறுக்கு வருந்தல்
பாவத்தின் காரணங்கள்- மது, கோபம், சூது, அறியாமை, கனவு, விதி 7.86.6
மனித பலஹீனத்தால் நாங்கள் தவறு செய்கிறோம். அதற்காக எங்களைத் தண்டிக்காதே. 7.57.4

அமரத்வம்
நாம் அமரத்துவம் அடையவேண்டும் என்பதற்காகத் தேவர்கள் நமக்குப் பிரார்த்தனைகளை அமைத்திருக்கிறார்கள். 7.97.5

பேச்சு
கேள்வி கேட்பதிலோ, மீண்டும் மீண்டும் தெய்வத்தின் பெயரைக் கூறுவதிலோ, உரையாடலிலோ எவன் மகிழ்வதில்லையோ அவன் ஆபத்தானவன். அவனிடமிருந்து எங்களைக் காப்பாற்று. 8.101.4
பயனற்ற, அற்பத்தனமான, முடிவற்ற, குறைவான பேச்சினால் மக்கள் திருப்தி அடைவது இல்லை. 4.5.14

உழைப்பின் சிறப்பு
தேவர்கள் அளிக்கும் செல்வத்தை மனிதன் உழைப்பு என்னும் வருத்தத்தை அளிக்கும் வழியினாலேயே அடைகிறான். 8.47.6
தேவர்கள் எப்பொழுதும் கடுமையாக உழைப்போருக்கு நண்பர்களாக இருப்பர். 4.33.11
விழிப்புடன் இருப்பவனை ரிக், சாமம் புகழ்கின்றன. நான் உன் நண்பன் என்று சொல்லிக் கொண்டு சோமம் உடன் வசிக்கிறது. 5.44.14
சுறுசுறுப்புள்ளவனே வெல்கிறான், வளம் பெறுகிறான். கருமிகளுக்கு தேவர்கள் உதவுவதில்லை. 7.32.9

பரோபகாரத்தின் சிறப்பு
ஒருவருக்கும் தீங்கு செய்யாமல், மக்களுக்கு நன்மை செய்பவன் தன் வலிமையினாலேயே வளர்கிறான். நல்ல பாதுகாப்பான வீட்டில் இருக்கிறான். 7.74.6

தான மகிமை
கடவுளை வணங்காத, தானம் செய்யாத ஆணை விட பெண் உறுதியானவள், மேலானவள். 5.61.6
பெண் துன்பப்படுபவனையும், வறுமையாளனையும் எதையாவது விரும்புபவனையும் அறிந்து கொள்கிறாள். 5.61.7
அக்னியே, பிறருக்குத் தானம் செய்பவர்கள் சௌகரியமாக வாழட்டும். 7.16.10
அக்னியே, மற்றவர்களுக்கு மிகுதியாகத் தானம் செய்பவருக்கு மிகுதியாகச் செல்வத்தை அளிக்கவும். 6.10.5
கொடையாளியான இந்திரன் பிறருக்குத் தானம் செய்பவரையே ஆசீர்வதிக்கிறார். 7.32.8
பசியை மரணத்தின் காரணமாகத் தேவர்கள் விதிக்கவில்லை. நன்றாகச் சாப்பிட வசதி உள்ளவனுக்கும் மரணம் ஏற்படுகிறது. வள்ளல் மனம் கொண்டவனின் செல்வம் குறைவதில்லை. பிறருக்குக் கொடுக்காதவன் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.1
செல்வமுள்ளவன் பசியுடன் யாசகர் வரும்போது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டுவிட்டால் துன்பக் காலத்தில் தேற்றுவார் இன்றித் தவிக்கிறான். 10.117.2
ஏழைகளுக்கு உணவு அளிப்பவன் வள்ளல். அவன் போரில் வெல்கிறான். பகைவர்களும் அவனுக்கு நண்பர்கள் ஆவர். 10.117.3
உணவு நாடி வந்த நண்பனுக்கு உணவு அளிக்காதவன் நண்பனே அல்ல. அவன் இருப்பிடம் வீடு அல்ல. அவனை விட்டு நீங்கி, கொடுக்கக் கூடிய அன்னியன் ஒருவனை நாடுக. 10.117.4
பணக்காரன் ஏழை யாசகனைத் திருப்தி செய்விக்க வேண்டும். அவன் நீண்ட கால வாழ்வைச் சிந்திக்க வேண்டும். செல்வம் இன்று ஒருவனிடம் இருக்கும், நாளை இன்னொருவனிடம் இருக்கும். தேர்ச் சக்கரம் போல சுழலக் கூடியது இது. 10.117.5
அளிக்கத் தெரியாத அறிவிலி அடைந்த உணவு அவனுக்கு அழிவு தரும். நண்பனுக்கு உணவளிக்காமல் தனித்து உண்பவன் தனித்துத் துன்பப் படுகிறான். 10.117.6
கலப்பை தன் பாதையைக் கால்களால் கீறி உணவைத் தருகிறது. கொடையாளியான உறவினன் கொடுக்காதவனை விட மேலானவன். இந்த வேதக் கருத்தை சொல்பவன் சொல்லாதவனை விட மேலானவன். 10.117.7

சூது
சூதை நாடுபவனுடைய மனைவியைப் பிறர் அபகரிப்பர். அவனது பெற்றோரும், சகோதரர்களும், ‘இவனை எனக்குத் தெரியாது. கட்டி இழுத்துச் செல்லுங்கள்’ என்பர். 10.34.4
சூதாட்டக் காய்கள் கொக்கி போல் இழுப்பவை, துன்புறுத்துபவை. ஆரம்பத்தில் சிறு லாபங்களைத் தரும். முடிவில் அழித்து விடும். அவை தேன் தடவிய கொலையாளிகள். 10.34.7
சூதாட்டக் காய்கள் கீழே உள்ளன, ஆனால் அவை நமக்கு மேலே ஏறி விடுகின்றன. கையில்லாத அவை கையுள்ளவர்களை வெல்கின்றன. குளிர்ச்சியாக இருந்து நம்மைத் தகிக்கின்றன.10.34.9
சூதாடுபவனுடைய மனைவி துன்புறுகிறாள். கண்டபடி அலையும் அவனுக்காகத் தாய் வருந்துகிறாள். கடனாளியாகிறான். பயப்படுகிறான். பணத்தைத் தேடி இரவில் மற்றவர் வீட்டுக்குத் திருடப் போகிறான். 10.34.10
சூதாடுபவன் மற்றவர்களின் சீரான குடும்பத்தையும் அவர்களின் அன்பான மனைவியையும் பார்த்துப் பொருமுகிறான். காலையில் குதிரை ஏறிப் போனவன் மதியத்தில் வெய்யிலில் அலைகிறான். 10.34.11
சூதாடாதீர்கள். வேளாண்மையில் ஈடுபடுங்கள். அதில் வரும் செல்வத்தில் மகிழ்ச்சி அடையுங்கள். மனைவி, மாடுகள் போன்ற எல்லாச் செல்வங்களும் அதில் உண்டு. சவிதா இதை எனக்குச் சொன்னார். 10.34.13

மனம்
மக்கள் பார்ப்பதற்காக ஒரு நிலையான ஜோதி அமைந்துள்ளது. எல்லாத் தேவர்களும் அந்த ஒரே லட்சியத்தை நோக்கிச் செல்கின்றனர். என் காதுகள் அதை நோக்கித் திரும்பி உள்ளன. என் கண்கள் அதையே பார்க்கின்றன. பறக்கும் பொருள்களிலே மனம் தான் மிக வேகமானது. என் மனம் அதை நோக்கிச் செல்கிறது. நான் அதை எப்படி அறிவேன், எப்படிச் சொல்வேன்? 6.9.5
குதிரையை வழிநடத்துவது கடிவாளக் கயிறு. அதை வழி நடத்துவது மனது. 6.75.6

உலகியல்
சொந்தப் பிள்ளையே சிறந்தவன். மற்றவர் பிள்ளை பிள்ளை ஆகமாட்டான். 7.4.7
வீடு தான் சஞ்சரிக்கும் எல்லாப் பிராணிகளின் விருப்பமாகும். 2.38.6
ஒன்று போல இருக்கும் இரு கைகளும் செயல் திறனில் வேறுபடுகின்றன. ஒரே நேரத்தில் ஈன்ற இரு பசுக்கள் ஒரே அளவு பால் தருவதில்லை. இரட்டையர்கள் கூட திறமையில் வேறுபடுகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் வள்ளல் தன்மையில் ஒரே மாதிரி இருப்பதில்லை. 10.117.9
ஊருக்குப் புதியவன் தெரிந்தவனிடம் வழி கேட்கிறான். சரியான நபரால் வழி காட்டப்பட்டு அவன் தொடர்ந்து பயணிக்கிறான். உண்மையில் இது தான் கல்வியின் சிறப்பு. கற்றவன் நேராகச் செல்லும் வழியை அறிந்து கொள்கிறான். 10.32.7, 9.70.9
ருத்ரன் நமக்குப் பல மூலிகைகளைத் தந்துள்ளார். அவற்றால் நோய்களை உடலிலிருந்து நீக்குவோம். பாவ நினைப்புகளை மனதிலிருந்து நீக்குவோம். சுற்றத்தாரிடம் பகைமை கொள்ளாதிருப்போம். நோயின்றி நூறாண்டு வாழ்ந்து பயனுள்ள வேலைகளில் ஈடுபடுவோமாக. 2,33.2

பக்தர்கள் பல வகை
வலிமையுள்ளவன் பகனிடம் பாதுகாப்பை நாடுகிறான். வலிமையற்றவன் ரத்னத்தை நாடுகிறான். 7.38.6
ரிஷிகள் உதவிக்காக வேண்டுகின்றனர். புரோகிதர்கள் உணவுக்காக வேண்டுகின்றனர். 7.94.5
பக்தர்கள் சோமனைப் போற்றுகிறார்கள், பேரறிஞர்கள் யக்ஞம் செய்ய விரும்புகிறார்கள், விபரீத புத்தி உள்ளவர்கள் அமிழ்ந்து போகிறார்கள். 9.64.21
நரர்கள் போரில் வெல்லவும் புத்திர பாக்கியம் பெறவும் விரும்புகிறார்கள். விப்ரர்கள் அறிவைப் பெற விரும்புகிறார்கள். 1.8.6

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *