இலவச இணைப்பு
மரத்துக்கு மனிதனா?
மனிதனுக்கு மரமா?
இயற்கையின் வரிசையில்
மரமே
நம் பிள்ளையார் சுழி.
நம் கதவுகளுக்கு
அது செதில் செதில்களாகப்
பிளக்கப்பட்ட போதும்
நமக்கு ஜன்னல்கள் எனும்
கண்கள் அப்ப
கம்பிகளோடு குத்திக்கொண்டுக்
கழுவேறிய போதும்…
நம் உடலோடு
ரத்தமாய்ச் சதையாய் உயிராய்
சங்கமம் ஆன போதும்
நாம் மூச்சுப்பூக்களில்
குமிழியிடும்போதும்
சூரியனின் பிளாஸ்மாவைத்
தன் இலைகளோடு
அது பதிவிறக்கம் செய்யும்போதும்
நம் குறுக்குவெட்டுத்தோற்றமே
அது தான்!
சின்ன நாற்றாய்
நம் குழந்தையும் அது.
உயிர் ஊற்றாய்
நம் அம்மாவும் அது.
நம் அப்பாக்களுக்கு அப்பாக்களாய்
அப்பால் நின்று
நம் தலைமுடியை
இதமாய் வருடி நிற்கும் கைகளும் அது.
அதன் உடல் கப்பலானபோது
அதன் உள்மூச்சின் விசைப்பயணத்தில்
மானிட நாகரிகம்
மணி விளக்கு ஏந்தி வலம் வந்தது.
அது
ஏன் மனிதனுக்கு மனிதன் இடையில்
மனிதனின் ரத்தம் ருசிக்கும்
சிலுவை மரம் ஆனது?
நியாய அநியாயக்குழப்பங்களில்
சில சமயங்களில் ஏன்
தன்னை மறைத்துக்கொண்டு
மராமரங்கள் ஆனது?
என் துள்ளல்களைத்
தாங்கிய தொட்டில்கள்
என் துடிப்புகள் அடங்கிய போது
“பெட்டிகளாய்” மாறி
மண்ணில் புதைந்து கொண்டது.
செம்மரமோ சந்தன மரமோ
மனிதனுக்கு மட்டுமே
அவை மொழி மாறிப்போயின.
மனிதனிடம்
பேராசை கொழுந்து விட்டு வளர்ந்து
அது தீ ஆனது.
அப்போது அதன் தளிர் பூ பிஞ்சு காய் கனி
எல்லாம் துப்பாக்கிகளால்
ரத்தம் சொரிந்தது.
மனிதனே!
உனக்குத் தொப்புள் கொடியாகிப்போன
மரத்துக்குக்
கோடரியையா
நீ பண்டமாற்று செய்வது?!
நான் பிறந்த ஊர் நெல்லைச்சீமையில் தாமிரபரணிக் கரையில் உள்ள கல்லிடைக்குறிச்சி. பட்டப்படிப்பில் முதன்மையாகத் தேறி (கூட்டுறவு/பொருளாதாரம்) மாண்புமிகு வி.வி.கிரி அவர்களால் தங்கப்பதக்கம் விருது பெற்றேன். பட்டப்படிப்பு முடிந்ததும் ‘நான் டெஸ்ட் கேடகரி’ (NON -TEST CATEGORY) எல்.ஐ.சி யில் தேர்வு ஆகி பணியில் (1966) சேர்ந்து பணி முடித்து1999 ல் விருப்பு ஓய்வும் பெற்று விட்டேன் பணியின் போது தனிப்பட்ட முறையில்1975ல் எம்.ஏ.பொருளாதாரம முதல் வகுப்பில் தேறினேன்.(வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம்ஆந்திரபிரதேசம்) எனக்கு கணிதம் இயற்பியல் போன்ற நூல்களைப்படிப்பது பெரிதும் பிடிக்கும்.கவிதைகள் எழுதுவது மட்டுமே என் இலக்கியத்தேடல் ஆகும். தமிழ் மொழியின் தொன்மையியல் பற்றிய நூல்களில் மிக்க ஆர்வம் கொண்டவன். முதன் முதல் செம்மலர் இதழில் செங்கீரன் என்ற பெயரில் (1969) கவிதைகள் எழுதத்தொடங்கினேன்.அதில் நிறைய எழுதியுள்ளேன்.ஜுனியர் விகடனில் முதன் முதலாக தேசிய கீதம் என்ற தலைப்பில் எனது கவிதை வெளியாயிற்று.அது முதல் கல்கி குங்குமம் முத்தாரம் தமிழன் எக்ஸ்பிரஸ் போன்ற இதழ்களில் எழுதியுள்ளேன். பெரும்பாலும் செங்கீரன் ருத்ரா என்ற பெயர்களிலேயே கவிதைகள் எழுதியுள்ளேன்.2000 ஆண்டிலிருந்து திண்ணை அம்பலம் வார்ப்புகள் ஆறாம்திணை போன்ற இணைய இதழ்களில் (ருத்ரா என்ற பெயரில்) எழுதிவருகிறேன்.சங்க இலக்கியத்தில் மிகவும் ஆர்வம் கொண்டு சங்க நடைச்செய்யுள் போன்று பாடல்கள் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும். என் மனைவியும் பி எஸ்.என்.எல்லில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்கள்.கணிதம் டோபாலஜி இயற்பியலில் குவாண்டம் மெகானிக்ஸ் மற்றும் எட்வர்டு விட்டனின் எம் தியரி மற்றும் ஐன்ஸ்டீன் நிறுவிய சிறப்பு பொது சார்பியல் கோட்பாடுகள் போன்றவை மிகவும் விருப்பமான தளங்கள்.இதில் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்.