சுரேஜமீ

புரிதல்

peak1

கடந்த பத்து ஆண்டுகள் கொடுத்த பொருளாதார வளர்ச்சி நம் சமூகத்தையே திருப்பிப் போட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. கல்வி வியாபாரமாக்கப் பட்டதும்; சேவை வணிகமாக்கப் பட்டதும் தந்த மிகப் பெரிய வளர்ச்சி இதுவென்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் தன்னை ஒரு தட்டு உயர்த்தி மேல் தட்டுக் குடும்பமாகக் காட்சியளிக்கிறது!

இவை ஒரு பக்கம்.

மறு பக்கம்,

இந்தப் பத்து ஆண்டுகள் புரிதல்(Understanding) என்னும் சொல்லைக் கேள்விக்குரியதாக்கி இருக்கிறது! என்பதும்,

அன்புகூட ஒரு விலை சார்ந்து நிற்கிறதோ என்ற ஐயமும், கூடி வாழ்ந்த காலங்கள் தானாகவே சிதைந்து, தனித்து வாழும் பொருளாதாரம் சார்ந்த சிக்கல்கள் உருவானதும், அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின், இசைவில்தான் இல்லற வாழ்க்கையே தொடங்கும் ஒரு அவல நிலையும், நம் இதயங்களின் ஈரத்தைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல்,

பெரும்பாலான இல்லற வாழ்க்கைத் தோல்விகளுக்கும் வழி வகுத்திருக்கிறதென்றால், மறுப்பாரும் சிந்திக்க வேண்டும்!

இதற்கு அடிப்படைக் காரணமே புரிதலின்மைதான்!

முதலில் புரிதல் என்றால் என்ன? புரிதலின் தொடக்கம் எது? புரிதல் அவசியமா? என்று கேள்விகளை உங்களுக்குள் அடுக்குங்கள். தெளிவு தானாக வரும். இதற்கு தூண்டுதலாக, சிலவற்றை, உங்கள் சிந்தை முன் வைக்க முயற்சிக்கிறேன்.

நாம் அனைவருமே ஒரு தாயின் பிள்ளைகள்தான். நம் வீட்டில் உள்ள மூத்தோர்களுக்குத் தெரியும், நம்மை எப்படி வளர்த்தார்கள் என்று, நாமும் எத்தனையோ குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறோம். இதற்கும், தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா?

ஒரு தாய்க்குத் தன் பிள்ளையின் பசி தெரியும்; வலி தெரியும்; செயல் புரியும்! தாய்தான் நம் புரிதலின் முதல் படியே என்றால், தந்தை அடுத்த படி! வளர்க்கும் விதத்திலேயே நம் நாடி நரம்புகளின் அடுத்த நொடியைத் தெளிவாகத் தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர்!

ஆக, புரிதலின் பால பாடம் அன்னை, தந்தையிடம் தொடங்குவதால்தான், நம் மொழி சொன்னது;

‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை;
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை! என

நாம், மொழியால் புரிய வைப்பதற்கு முன்னரே, நம்மைக் குறிப்பால் புரிந்து நம் தேவையை உணர்ந்த பெற்றவர்கள் நிச்சயம் போற்றுதற்குரியவர்களே!

ஆதலால், அவர்களிடம் நம் புரிதலின்மையைத் தெளிவு படுத்திக் கொள்ள, நமக்கு இருக்கும் முதல் வாய்ப்பு ‘பெற்றவர்கள்தான்’ என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்!

அடுத்து புறச்சூழல்.

ஐந்து வயது தொடங்கி குறைந்தது 15 முதல் 17 ஆண்டுகள் கல்விச் சாலையில் நம் பயணம் தொடர்கிறது. மனிதனுக்கே உண்டான மகத்தான வாய்ப்பு இது என்று சொன்னால்,

இறைவனின் படைப்பின் பெருமையையும் நம் முன்னோர்கள் நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்!

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிதென்று’!

பல மனிதர்களுடன் இன, மத, மொழி வேறுபாடு கலைந்து, ஓன்றே குலமாக, ஒருவனே தேவனாக, நம்மைச் செதுக்குகின்ற கல்விக்கூடங்கள், புரிதலின் அடுத்த நிலையை, நமக்கு ஏற்படுத்தித் தருகின்றன.

ஆனால், நாம் எப்படி இந்தப் ‘புரிதலை’ நுகர்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது!

avaவள்ளுவன் அழகாகச் சொல்கிறான் பின்வரும் குறளிலே, ‘புரிதலின் அருமையை’!

‘குறிப்பிற் குறிப்புணர் வாரையுறுப்பினுள்
யாதுங் கொடுத்துக் கொளல்.’

இதுதான் மொழியின் ஆளுமை என்பது. எந்த மொழிக்கும் இல்லாத ஒரு பெருமை நம் தமிழ் மொழிக்கு! நம் மனித வாழ்வியல் சார்ந்த எந்த பிரச்சினைக்கும் உண்டான விடையைத் தன்னகத்தே கொண்டுள்ள ஒப்புயர்வற்ற ஒரே மொழி தமிழ்தான் என்பதே நமக்குப் பெருமைதானே!

நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைக் குறிப்பாலேயே உணர்ந்து, அதன்படி குறிப்பறிந்து செயல்படுவோரை, நம்மிடம் இருப்பது எது கொடுத்தும், அவரைத் தமதாக்கிக் கொள்ள வேண்டும் என வள்ளுவரே சொல்லி இருக்கிறாரென்றால்,

புரிதலின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்து செயல்படுவது எவ்வளவு இன்றியமையாதது என்பதை மனதில் இருத்தல் அவசியம்!

இப்படி ஒரு புரிதல் இருக்குமாயின், நம் அலுவலகத்தில், நாம் மேற்கொள்ளும் எந்த முயற்சியிலும் வெற்றியடைவோம் என்பது மறுக்க முடியாத உண்மை. தலையாய எந்தப் பிரச்சினையின் துவக்கமுமே, புரிதலின்மையில் தான் தன் பயணத்தை ஆரம்பிக்கிறது.

நான் மிகவும் வேதனைப் படக்கூடிய ஒரு செய்தி, தற்காலத்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கும் வழக்குகளும், இளைஞர் மற்றும் யுவதிகளின் கூட்டமும்தான்! இது நம்மிடையே சகிப்புத்தன்மை அற்ற நிலையையும், நமக்கு இருக்கும் பொருளாதாரத் தன்னிறைவின் தவறான புரிதலும்தான் என்று கருதத் தோன்றுகிறது.

ஊடல் இல்லாத எதுவும் நல்ல கூடலுக்கு அழகாகாது. இது காதலுக்கு மட்டுமல்ல. நல்ல நட்புக்கும்தான். ஆசை வார்த்தைகளையும், போலி வாழ்க்கையையும் நம்பி வாழக்கூடாது.

வாழ்வே ஒரு சுகம்; வாழ்வில் நல்ல புரிதல் இருந்தால்!

வள்ளுவன் தன் 1330 குறளின் உச்சமாக, இந்தப் புரிதலை மையமாக வைத்துக் கடைசிக் குறளாக,

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப் பெறின்!

என்று முடித்தான் என்று சொன்னால், அதன் வலிமையை நாம் ஆராயவேண்டும் என்பதற்காகத்தான்!

இந்தக் குறளும், அதன் பொருளும் புரிந்த யாரும் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கைத் தொடுத்திருக்க மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறேன்! ஊடலுக்குப் பின் வரும் கூடல்தான் இல்லற வாழ்விற்கே மகிழ்ச்சி என்றால்,

சரியான புரிதலில்தான் இன்பம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்!

புரிந்தால் சிகரம் தொட்டுவிடும் தூரம்தான்!

அன்புடன்
சுரேஜமீ

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *