நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்கத் தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.  இளவயதுப் பெண் ஒருத்தி கூறுகிறாள்: நான் வாழ்க்கையில் நிறைய சாதிக்க விரும்புகிறேன்.  எனக்கு என்னென்னவோ செய்யத் திட்டங்கள் இருக்கின்றன.   என்னால் இப்போது பிள்ளை பெற்றுக்கொள்ள முடியாது.  பிள்ளை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப் போடுவதற்கு நான் ஸ்கைலா (skyla) பொருத்திக்கொண்டுள்ளேன்.  நீங்களும் அது மாதிரி செய்துகொள்ளலாம்.  இதைப் பொருத்திக்கொண்டால் மூன்று வருஷங்களுக்கு கர்ப்பமாவதைத் தடைசெய்யலாம்.  வேண்டும்போது அதை எடுத்துவிட்டால் மறுபடி பிள்ளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெறலாம்.

கர்ப்பப் பையில் இந்த சாதனத்தைப் பொருத்திக்கொண்டு பிள்ளை பெறுவதைத் தள்ளிப்போடும் யோசனை யாருக்கென்று நினைக்கிறீர்கள்?  திருமணம் செய்துகொண்ட  பெண்களுக்கும் காதலனோடு சேர்ந்துவாழும் பெண்களுக்கும்.  முக்கியமாக இரண்டாவதாகக் குறிப்பிட்டிருக்கும் பெண்களுக்கு.  விளம்பரத்தில் வரும் இந்தப் பெண்ணுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  ஆயினும் காதல் தோழனோடு கணவன் மனைவிபோல் குடும்பம் நடத்தி வருகிறாள்.

திருமணம் செய்துகொள்ளாத பெண்களுக்கும் கருத்தடை சாதனங்கள் பற்றி அமெரிக்காவில் விளம்பரம் கொடுக்கிறார்கள்.  இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நினைக்கும் பெண்களுக்குத்தான் இம்மாதிரியான விளம்பரங்கள் கொடுப்பார்கள்.  அமெரிக்காவில் பாலுறவு வைத்துக்கொள்ளும் வயது வந்தவுடனேயே ஆண்களும் பெண்களும் பாலுறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.  அதற்கு எந்தத் தடையும் விதிப்பதை விரும்புவதில்லை.  திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லையென்றாலும் தொடர்ந்து கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளக் கூடாது என்னும் ஒரு விதி மட்டும் பரவலாக இருக்கிறது.  அப்படியும் கீழ் மட்டத்தில் இருக்கும் சில பெண்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளுவது தங்களுக்கு ஒரு அந்தஸ்தைக் கொடுப்பதாக எண்ணிப் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்களாம்.  பிள்ளை பெற்றுக்கொள்ள விரும்பாத பெண்களுக்காக மேற்குறிப்பிட்ட சாதனம் சந்தைக்கு வந்திருக்கிறது.  ஏற்கனவே பல மாத்திரைகள் சந்தையில் இருக்கின்றன.  இது அவற்றைவிட உபயோகிக்க எளிது என்பதாலும் ஒரு முறை பொருத்திக்கொண்டால் மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லாமல் இருக்கலாம் என்பதாலும் இது மற்றக் கருத்தடைச் சாதனங்களைவிடச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.  இந்தியாவில் ஒரு சில அல்ட்ரா மாடர்ன் பேர்வழிகளைத் தவிர திருமணத்திற்கு முன்பே குடும்பம் நடத்தும் மனிதர்கள் இல்லை என்றே நினைக்கிறேன்.  அதனால் இப்படிப்பட்ட விளம்பரங்களும் திருமணமாகாத பெண்களுக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

பத்திரிக்கையில் வந்த இன்னொரு செய்தி.  மனைவியை இழந்த ஒருவரும் கணவனை இழந்த ஒரு பெண்ணும் தங்கள் எழுபது வயதில் மாதாகோவிலில் சேர்ந்து பாட்டுப் பாடியபோது காதல் வலையில் விழுந்து திருமணம் செய்துகொள்ளுகிறார்கள்.  (இந்தியாவில் அறுபது வயது முடிந்தவுடனேயே வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கருதுவார்கள்.)  சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவிக்கு ஞாபக மறதி வியாதி (Alzheimer’s) ஏற்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார்.  மனைவியை எப்போது பார்க்கலாம், எங்கு கூட்டிச் செல்லலாம், என்ன மாதிரியான உறவு வைத்துக்கொள்ளலாம் என்பதற்கு முதியோர் இல்லத்தில் சில விதிகள் இருக்கின்றன.  மனைவிக்கு ஞாபகமறதி வியாதி இருப்பதால் உடலுறவு வைத்துக்கொள்ள மனைவியால் சம்மதம் கொடுக்க முடியாது என்பதால்  மனைவியோடு உடலுறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பதும் எழுதப்படாத விதி. ஒரு முறை கணவர் மனைவியைப் பார்க்க வந்த இடத்தில் அவருக்கு மறுக்கப்பட்டிருந்த அந்த உரிமையை மனைவியின் சம்மதம் இல்லாமலேயே பயன்படுத்திக்கொண்டார் என்று மனைவியின் மகள் – இன்னொரு திருமணத்தில் பிறந்தவள் – மாற்றாந்தகப்பன் மீது வழக்குத் தொடர்ந்தார்.  கணவர் அவர்கள் வாழ்ந்துவந்த அயோவா மாநில சட்டமன்ற உறுப்பினர்.  வழக்குத் தொடரப்பட்டதும் அவர் பதவியைத் துறந்தார்.  வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது மனைவிக்கு அவ்வப்போது செக்ஸ் ஆசை வந்தபோது தான் அதை நிறைவேற்றிவைத்ததாகவும் அன்றும் அத்துமீறிப் போகாமல் நடந்துகொண்டதாகவும் தன் வாக்குமூலத்தில் தெரிவித்தார்.  வழக்கு நடந்தபோது தேவையான ஆதாரங்கள் இல்லாததால் அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.  ஒரு வேளை குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் கிடைத்திருக்கும்.  மனைவி சம்மதம் இல்லாமல் கணவன் அவளோடு உடலுறவு கொண்டால் கணவனுக்குப் பத்து வருடம் வரை சிறைவாசம் கொடுக்கலாம் என்பது சட்டம்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 92 வயது மனைவியையும் 94 வயது கணவனையும் (இவர்கள் முதியோர் இல்லத்தில் சந்தித்துக் காதல்கொண்டு திருமணம் செய்துகொண்டவர்கள்.  இருவருக்கும் அது எத்தனையாவது திருமணம் என்று கேட்காதீர்கள்) பேட்டி கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.  அதில் பேட்டி கண்டவர் அவர்கள் இருவரிடமும் உங்கள் ‘இருவரிடையே செக்ஸ் உண்டா?’ என்று கேட்டார்.  மனைவி ‘இது என்ன கேள்வி?’ என்று பதிலுக்குப் பேட்டி கண்டவரைக் கேட்கவில்லை.  கணவரைக் கேட்குமாறு பேட்டி கண்டவரிடம் கூறி கணவரின் பக்கம் கையைக் காட்டுகிறார்.

அமெரிக்காவில் செக்ஸ் உட்பட எதற்கும் ரேஷன் கிடையாது.  எந்த வயதிலும், திருமணம் ஆகியிருக்கவில்லை என்றால் யாருடனும் உடலுறவு கொள்ளலாம்.  திருமணம் நடந்திருந்தால் மனைவிக்கோ கணவனுக்கோ துரோகம் செய்யக் கூடாது, அதாவது திருமணத்திற்கு வெளியே யாருடனும் உடலுறவு கொள்ளக் கூடாது.  திருமணம் ஆகியிருந்தாலும் மனைவியின் சம்மதம் இல்லாமல் அவளுடனேயே உடலுறவு கொள்வது தவறு மட்டுமல்ல, அதற்குத் தண்டனையும் உண்டு.

என்ன சமூகம் இது?  புனிதமான உறவு என்று திரு.வி.க. போன்றவர்களால் கருதப்பட்ட இந்த உறவைக் கொச்சைப்படுத்திவிட்டார்களே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்காவில் பாலுறவு

  1. இக்கட்டுரையை எழுதியதன் காரணம் அறியலாமா?
    காரணம் வாழ்க்கையை அமெரிக்க மக்கள் ஆடை மாற்றுவதுபோல ஆட்களை மாற்றுவது நடப்பதுதான்.இந்தியாவின் பண்பாட்டினை அதற்காக அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்தியர்கள் மறப்பதில்லை.அவர்கள் மாறினால்தான் நாம் வருந்தவேண்டும்.
    இந்தியாவில் இம்மாதிரி விஷயங்களை யாரும் வெளிப்படையாக எழுத மாட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *