வையவன்

சிவா ஒர்க்ஷாப்பின் சாவியைக் கையில் எடுத்தான். இது எனக்குரிய பளுதானா? இப்படி ஒரு ஒர்க்ஷாப்பை நான் ஏற்று நடத்த முடியுமா?

திருப்பத்தூரில் அம்மா சொன்னது நினைவு வந்தது.
நீ தானா ஏத்துக்கறது கட்டுப்பாடு ஆகாது.

எதற்கும் அம்மாவைக் கேட்டுக் கொண்டு வந்திருக்கலாமோ?
எங்காவது சேவகம் செய்து மாதச் சம்பளம் வாங்குவதில் எல்லா படித்த இளைஞர்களுக்கும் வருகின்ற பாதுகாப்பு தான் தனக்கும் வேண்டுமா?

எதையும் யோசிக்க நேரமில்லை.

சமுத்திரத்தில் குதித்தாகி விட்டது. நீந்த வேண்டும். அல்லது மூழ்க வேண்டும்.
அவன் செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
வெளியே திஷ்யா தென்பட மாட்டாளா என்று ஓர் ஏக்கம்.

வழக்கப்படி அவனைக் கிண்டல் செய்து குத்தி விட்டால் கூடப்போதுமானது. அவன் படி மீது ஐந்து நிமிஷம் நின்றான். அவள் எதிர்ப்படவில்லை. உள்ளே சமையலறையிலோ பாத்ரூமிலோ மும்முரமாக இருந்தாள் போலும்.

சிவா படியிறங்கி தெருவில் காலை வைத்தான். எங்காவது ஒரு நபர், கொஞ்சம் ஊக்கம் தர, உந்திவிட, ஒரு மனம் இந்தப் பரந்த பூமியில் அவனுக்கும் ஒரு புவியீர்ப்பு மையம் வாய்த்திருக்கிறது என்று அங்கீகரித்து உந்திவிட ஓர் உள்ளம்.
அவனுக்கு உடனே பிரீதாவின் நினைவு வந்தது. எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தக் கையாட்ட உயர்த்தினான்.

நோ. நான் ஒர்க்ஷாப் சொந்தக்காரன் அல்ல. மானேஜர். நான் முதலாளியுமில்லை. கூட்டாளியுமில்லை. வெறும் தொழிலாளி. கூட்டு அந்தஸ்து இல்லாத சாமான்யமான தொழிலாளி.

“இன்னா சார்…” டிரைவர் அருகில் வந்தான்.
“அதோ அந்த ப்ரெண்டை கூப்பிட்டேம்பா.”
அவனது முறைப்பை அலட்சியம் செய்து பஸ் பிடிக்க ஓடினான்.

வீட்டினுள் நுழையும்போது பிரீதா கண்ணாடி எதிரில் நின்று கூந்தலில் தென்பட்ட ஒரு நரையை அகற்றுவதில் ஈடுபட்டிருந்தாள்…

கண்ணாடியில் அவன் பிம்பம் தெரிந்ததும் “வரூ” என்று கூறிக்கொண்டே நரைமுடியை வெடுக்கென்று அகற்றினாள்.
காலை அவள் முகத்தில் குதூகலமாகக் குளித்துப் பவுடர் பூ விரித்திருந்தது.

“எந்திணு பி.பி.கால்?”
“ஃபாதர் சீரியஸ். தாமு மதனபள்ளி போய்ட்டாரு”

அவன் கையிலிருந்த சாவிக்கொத்தைப் பார்த்து அவள் முகம் பரிசுத்தமான மகிழ்ச்சியில் மலர்ந்தது.
“தாக்கோல் நிண்டே கையிலாயி” என்று பால் நுரை பொங்குவது மாதிரி சிரித்தாள் பிரீதா.

“பிரச்னை” என்று அதைத் தூக்கி உலுக்கிச் சப்தமெழுப்பினான்.
பிரீதாவின் கண்கள் அவன் மீது படிந்தன.

“இரிக்கு”
அவன் சோபாவில் உட்கார்ந்தான்.
“வாட்ஸ் தி ப்ராப்ளம்?”
“நான் ரைட்டரா… மெக்கானிக்கா?”
“யூ ஆர் எ மேன்”

பல் தெரியாமல் அவள் உதடுகளில் ஒரு புன்னகை மலர்ந்தது.

அந்த உதடுகளின் சதைப் பற்றில் அவற்றின் ரோஜாச் செம்மையில் அங்கு ஊறித் தளும்பிய ஜீவ சக்தியில் ஏதோ அற்புதம் இருந்தது.

அந்த உதடுகளைச் சொற்கள் கடந்து வெளிவரும் போது அவற்றிற்கு ஒலி மட்டுமில்லை, ஒளியும் சேர்ந்தன.
சிரித்துக் கொண்டே ஏதோ கதை சொன்னவாறு ஸ்பிரிட் தடவி வலிக்காமல் ஊசி குத்துவது மாதிரி பிரீதா மெதுவாகச் சொன்னாள்.

முறுக்கு ஏற்றுவது போலவோ செதுக்குவது போலவோ இடித்து உரைப்பது போலவோ அன்றி லகுவாகச் சொன்னாள்.
“மனுஷ்யன்”
பிரியமாகச் சிரித்து மீண்டும் ஒருமுறை நினைவூட்டினாள்.

“மனுஷ்யன் ரைட்டராகும். மெக்கானிக்காகும். ரைட்டிங் மெக்கானிக் ஆகும். பக்ஷே?”
அவள் மீண்டும் வரம் தரும் தேவதை மாதிரி சிரித்தாள்.

“பக்ஷே?” என்று சிவாவும் தன்னையறியாது மலையாளத்திற்கு வந்தான்.
“அங்ஙன மலையாளம் பரயூ. பக்ஷே நீ ஒரு மெக்கானிகல் ரைட்டர் ஆகான், உத்தேசிக்கருத… மனசிலாயோ”
மெக்கானிகல் ரைட்டர். என்ன அழகான ‘காய்னேஜ்’. அவனுக்கு காளிசரண் கவனம் வந்தது.

“சிவாவினு பேடியோ?”
“பயமில்லை. இது எனக்கு ஒரு டைவர்ஷன் பாய்ண்ட். அதனால் ஒரு தயக்கம்.”
“ஐ அண்டர் ஸ்டாண்ட். சிவாவினு ஏதாணு இஷ்டம். காப்பியோ, சாயயோ?” சமையலறையை நோக்கித் திரும்பினாள்.
“இப்போ வேண்டியது கான்ஃபிடன்ஸ்.”

“யூ ஹாவ் இட்” அவள் முகம் வளைத்து அவனைப் பார்த்து புன்னகை வழங்கினாள். “பட் யூ டோண்ட் நோ இட்”
ஐந்து நிமிஷத்தில் டீ கோப்பையுடன் திரும்பி வந்தாள். மலையாளத்தில் மளமளவென்று சொல்லிக் கொண்டே நீட்டினாள்.
“நான் போன வருஷம்தான் தாமுவை சந்தித்தேன். அவரை எனக்கு ஏன் பிடிச்சது தெரியுமா?”

தாமுவைப் பற்றி இப்படி ஒரு வெளிப்படையான பேச்சை சிவா அவளிடம் எதிர்பார்க்கவில்லை.
“ஹி ஈஸ் எ மேன். ரத்தம் சதை என்ற புற அளவீடுகளுக்கு சிக்காம மனிதன் என்று ஒரு காம்பீர்ய அந்தஸ்து உண்டே. அது தாமுவிடம் உண்டு. ஆனா அவ6ருக்கும் தளர்ச்சி உண்டு. சுகவீனம் உண்டு.”
அவன் டீயை மெதுவாக உறிஞ்சியவாறே அவள் வார்த்தைகளைப் பருகினான்…

“ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலவீனமான நேரமுண்டு. அது இயற்கை. மனிதன் ஜெயிப்பான். ஜெயிக்கிறான்.”
அவன் கோப்பையை டீப்பாய் மீது வைத்தான்.

“தாமு என்னிடம் அனேகமா எதையும் ஒளிக்கறதில்லே. ஹி ஈஸ் வீக் இன் ஸெக்ஸ், பெண்கள்தான் அவருடைய ஒரே பலவீனம். அவருடைய எல்லாப் பிரச்னைகளும் பெண்களாலேதான்.”
சிவா நிசப்தமாய் விட்டான். அவன் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை.

“சிவாவினு எண்டே ஃபிராங்க்னெஸ் இஷ்டப்படுன்னில்லா அல்லே?”
“ஐ காண்ட் கமெண்ட் ஸிம்ப்ளி ஐ அம் அனேபில் டு கமெண்ட்”
அவனது வெள்ளை உள்ளம் அவளுக்கு வெகுவாகப் பிடித்தது போல் பிரீதா சிரித்தாள்.

“ஆனா உனக்கு இது தெரியணும் சிவா?”
“இன்னிக்கு நீ ஒரு புதிய தொழிலுக்கு மானேஜரா மாஸ்டராகப் போறே. யு ஷûட் நோ திங்ஸ்.”
“ஒய் ஷûட் ஐ?”
“ஸின்ஸ் யு ஆர் சிவா.”
“நான் எப்பவும் சிவாவாத்தான் இருப்பேன்.”

அவள் தலையசைத்து அது முடியாது என்பது போல் புன்னகை செய்தாள்.
“முடியாது சிவா… இந்தத் தொழில் அப்படிப்பட்டது. நெறய பணம் வரும். யூ ஆர் எஜூகேடட்.. கர்ள் ப்ரண்ட்ஸ் வருவாங்க. அப்படித்தான் தாமு லாஸ்ட் ஹிம் செல்ஃப். கல்யாணம் பண்ணிக்கிட்டிருந்தா தாமுவுக்குக் கூட ஒரு செக் வந்திருக்கும். ஆனா…” என்று பிரீதா நிறுத்தினாள்.

பேச்சின் போக்கு மாறி அந்தரங்கத்தில் நுழைந்த மாதிரி சிவாவுக்கு மூச்சு முட்டிற்று. தாமுவைப் பற்றிப் பேச வேண்டாமே.
ப்ரீதா மேலே பேசினாள்.

“தாமுவுக்கு வந்திருக்க வேண்டிய மனைவி திஷ்யா மாதிரி டாமினேடிங்கா..ஆக்டிவ்வா இருந்திருக்கணும்.”
தாமுவும் திஷ்யாவும்.

அவன் வியப்போடு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவன் வியப்பை அவள் புரிந்து கொண்டாள்.
“எஸ், தாமுவுக்கு அவளைப் பிடிக்கும்.”

அவன் கண்ணிலிருந்த கேள்விக் குறி மேலும் அவளைப் பேசத் தூண்டியது.
“கல்யாணம் பண்ணிக்கிற அளவு பிடிக்கும். அது நடந்தாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லே”

சிவாவின் மனசிற்குள் இடி முழக்கம் கேட்டது. வெளிச்சமில்லாத மூலைகளில் ஒரு மின்னல் விளையாடிற்று. சென்னையில் அந்த வீடு தனக்கு ஆசிரமம் என்று சொன்னானே தாமு! இதுதான் அதற்கு அர்த்தமா?
“ஒய் கான்ட் யூ?” என்று தன்னை மீறிக் கேட்டான்.

அவள் சிரித்தாள். கசப்பு அதில் சிதறிற்று.
“வி ஆர் ப்ரெண்ட்ஸ். கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அளவு டிவோஷன் ரெண்டு பேருகிட்டேயும் மியூச்சுவலா கிடையாது.”

நேரமானதை உணர்ந்தான். அவளிடம் விடை பெறும் பொழுது பிரீதா மீண்டும் மாலையில் வரச் சொன்னாள். அங்கிருந்து வரும்போது அவன் மனசு ஏனோ பாரமாயிருந்தது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *