மீ.விசுவநாதன்

அத்யாயம்: பதினொன்று

S. N. N. சங்கரலிங்கம் ஐயர்

avs1
அவனிருக்கும் வீட்டிற்குப் பின்புறத்தில்தான் இராமச்சந்திரபுரம் தெரு இருக்கிறது. அது ஒரு அழகான அக்கிரஹாரம். இருபுறமும் வரிசையாக அழகான வீடுகள் உண்டு. தெருவின் கடேசியில் ஸ்ரீ ராமர் கோவில். ஸ்ரீராமர், லக்ஷ்மணர், சீதாதேவி, ஆஞ்சநேய சமேதராக இருக்கும் மூலஸ்தானம். இடதுபுறத்தில் லக்ஷணமான பெரிய வலம்புரி விநாயகர் சந்நிதி. அதற்கு முன்பாக சிறு ஹோமகுண்டம். தங்கக் குங்குமச் சிமிழ் போல இருக்கும் இந்தக் கோவில். அதன் பின்புறம் தெளிந்து பாயும் கன்னடியன் கால்வாய். தென்புறத்தில் ஏழு வீடுகள் கொண்ட எழாபுரம் அக்கிரஹாரம். கன்னடியன் கால்வாய்க்கு மேற்குப் பகுதியில் பழமையான, உயிர்ப்புடன் கூடிய ஒரு “கல் மண்டபம்” படித்துரையுடன் இருக்கும். இப்பொழுது கால்வாயை விரிவு படுத்துகிறோம் என்று பொதுப்பணிதுறையினர் அந்த மண்டபத்தை இடித்து விட்டனர். கால்வாயில் தண்ணீர் நிறைந்து ஓடும். அது அவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் கொண்டாட்டந்தரும். அவர்கள் அந்த மண்டபத்தின் மேலே இருந்து தண்ணீரில் குதித்து நீந்தியபடியே சிதம்பரேஸ்வரர் கோவில் படித்துறையில் வந்து கரை ஏறுவார்கள். அந்த மண்டபத்திற்கு மேற்கே கண்ணுக்கெட்டும் தூரம்வரை பசுமையான வயல்காடுகள்தான். “ஒரு காலத்தில் இந்தத் தெருவில் “மாத்வ பிராமணர்கள்”, அதாவது ராயர் குடும்பத்தினர் அதிகமாக வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தெய்வமான ஸ்ரீ ராமனுக்குக் கோவில்கட்டி வழிபட்டு வந்திருக்க வேண்டும். அதற்க்குச் சான்றாக இன்றும் சில மாத்வகுடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஸ்ரீ ஆதிவராகப் பெருமாள் கோவில் சித்திரைத் திருநாளின் மூன்றாம் திருநாள் “ஆஞ்சநேயர் வாகனக்” கட்டளைக் காரர்கள் ராயர்குடும்பத்தினர்தான். அந்தத் திருநாள் செலவுக்கென்றே “வயலை” எழுதி வைத்திருந்தனர். அதில் விளையும் நெல்லை விற்றுவரும் பணத்தில் சுவாமி கட்டளையைச் செய்யவேண்டும் என்று இந்த ஏற்பாடு. சிலவருடங்களுக்கு முன்புதான் இந்தக் கட்டளைக்காரர்கள் மாறினார்கள்” என்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து ஒய்வு பெற்று, அதே தெருவில் வசித்து வந்த, இலக்கியத்திலும், வரலாற்றிலும் ஈடுபாடுள்ள “பேங்க் கிருஷ்ணமூர்த்தி மாமா” அவனிடம் ஒருமுறை கூறி இருக்கிறார். ஸ்ரீ ராமர் கோவிலுக்கு அந்த கிராம மக்களே கைங்கர்யம் செய்து வருகின்றனர். முக்கியமாக சங்கரலிங்கமையர் குடும்பத்தினரின் பங்கு அதிகமாக இருக்கும்.

avs3S. N. N. சங்கரலிங்கம் ஐயர்தான் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனத்தின் ஆணிவேர். அவர் மாட்டு வண்டியில் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் சென்று இந்தியா சிமிண்ட்ஸ் துவங்குவதற்குத் தேவையான இடத்தையும், “ஜிப்சம்” போன்ற மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களையும் தேடிக் கண்டு தாழையூத்தில் சிமென்ட் தொழிற்சாலையை நிறுவினார் என்றும் அவனது கிராமத்துப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறான். அவர் ஒரு சிறந்த நிர்வாகி. தினமும் காலையில் எட்டு மணிக்கெல்லாம் அவரது கருப்பு நிறக் காரில் அவரும், அவரது மனைவி திருமதி. பிச்சு சங்கரலிங்கம் அம்மாள் (பிச்சுக்குட்டி மாமி) அவர்களும் கல்லிடைகுறிச்சியில் இருந்து தாழையூத்திற்குச் சென்று இரவு எட்டு மணிக்குத் திரும்புவதை அவன் பலமுறை பார்த்திருக்கிறான். கிராமத்தில் படித்த இளைஞர்களுக்கு தனது தொழிற்சாலையில் வேலை கொடுத்திருக்கிறார். அப்படி வேலைக்குச் சேர்ந்து பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனிதர்கள் சங்கரலிங்கம் ஐயர் அவர்களின் நல்ல குணங்களையும், செய்த உதவிகளையும் அவனிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவனுக்கு இன்றும் நினைவில் இருப்பது சங்கரலிங்கம் ஐயர், R. S. A. சங்கர ஐயர், ராயல் என்பீல்ட் K. R. சுந்தரம் ஐயர், ஈசன் குழுமத்தின் ஈஸ்வர ஐயர் போன்ற பெரியோர்கள் சேர்ந்து ப்ரும்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின் மகாபாரத உபன்யாசத்தை 1966ம் வருடம் ஆடிமாதம், நாற்பத்தெட்டு நாட்கள் ஏற்பாடு செய்திருந்ததுதான். இராமச்சந்திரபுரம் தெருவில் ஸ்ரீ ராமர் கோவிலுக்கு முன்பாக பெரிய பந்தல் போட்டிருந்தார்கள். தெரு முழுவதும் மக்கள் வெள்ளம் போல அமர்ந்து கேட்பார்கள். ஒலிபெருக்கி வடக்கு ரதவீதி (குத்துக்கல் தெருவின் கடேசி வரை) கடேசி வரை வைத்திருப்பார்கள். ஒரு பெரிய கல்யாண உற்சவம் போலத்தான் அது நடந்தது. தினமும் மாலை ஆறு மணிக்கெல்லாம் அவனுக்கு அம்மா அவன் நெற்றியில் விபூதி இட்டு அவனை அந்த மகாபாரத உபன்யாசம் கேட்கச் சொல்லி அனுப்புவாள். அவனுடன் அவனது நண்பன் நீலகண்டனும் வருவான். அவனுக்கு விளையாட்டில் தான் முதலில் கவனம் இருந்தது. இந்த உபன்யாசம் கேட்பதில் விருப்பம் இருக்கவில்லை. அம்மாவின் வற்புறுத்தலால் முதல்நாள் சென்றான். சரியாக ஏழு மணிக்கு,”தாபிஞ்ஜஸ் தப கர்த்விஷே தனுபிருதாம் தாரித்ர முத்ராத்விஷே” என்று அனதராம தீட்சிதரும், அவரது சீடர்களும் தியானஸ்லோகம் கம்பீரமாக ஒரே குரலில் சொன்னதைக் கேட்டு அதிலேயே அவன் சொக்கித்தான் போனான். தீட்சிதரின் கதை சொல்லும் பாணி அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் அந்தக் கதைக்குள்ளேயே சென்று விடுவான். மகாபாரதம் அவனைக் கட்டிப் போட்டது. அதில் உள்ள சூஷ்ம தர்மங்களை தீட்சிதர் சொல்லச் சொல்ல அவன் கவனமாகக் கேட்டு வந்தான்.

சூதாட்ட சர்க்கத்தில் தர்மன் ஒவ்வொன்றாகப் பணயம் வைக்க, சகுனி பகடை உருட்ட “நான் ஜெயித்தேன்..அடுத்தது என்ன …” என்று சகுனி கேட்க, மீண்டும் தர்மன் தன் தம்பியரைப் பணயம் வைக்க, சகுனி கள்ளத்தனமாக எல்லோரையும் வென்ற பின்பு, தர்மா இன்னும் பாஞ்சாலி இருக்காளே…அவளைப் பணயம் வைத்தாடு என்று மகா பாபி சகுனி அந்தப் பதிவ்ரதையைக் கேட்டான்.. தர்மன் சரி பணயம்ன்னு சொல்லரத்துக்குள்ளே அவள ஜெயுச்சுட்டேன்னு…சபைல குதிச்சான்…தர்மர் சொக்கட்டானையே பாத்துண்டிருந்தார்….சூதாடரவாளுக்கு நாம அடுத்தாப்புல ஜெயுச்சுடலாம்னுதான் தோணுமாம்…. பட்டத்திரி குருவாயூரப்பனப் பார்த்து,

“ஏய் குருவாயுரப்பா…நீ கண்கண்ட தெய்வமாச்சே….அந்த பாபி சகுனி சூதாட்டத்துல தர்மபுத்திரர்ட்டேந்து எல்லாத்தயும் ஏமாத்தி ஜெயிச்சுட்டானாமே..உனக்குத் தெயரியுமான்னு கேட்டாளாம்..அதுக்கு சுவாமி குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று கதையின் உச்சத்தை கேட்பவரின் மனதில் பதிய வைத்தார்.

அவர் சொன்ன “யஷப்ப்ரச்னம்” அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. தாகத்திற்க்காகத் தண்ணீர் எடுக்கத் தன் தம்பியர்avs ஒவ்வொருவராக அந்தக் குளத்தை நோக்கி அனுப்புவதையும், அந்தக் குளக்கரையில் உள்ள மிகப் பெரிய மரத்தில் இருக்கும் “யக்ஷன்” என்ற தர்ம தேவதையையும் தீட்சிதர் சொல்லச் சொல்ல, அந்த இயற்கைக் காட்சிகளும், பஞ்ச பாண்டவர்களும், அந்தச் சூழ்நிலையின் அடர்ந்த காட்டு மரங்களின் வாசனையும் ஒரு பிம்பமாக அவனுக்குள்ளே பதிந்து விட்டது. அவன் ஆற்றங்கரையில் சுடுகாட்டில் இருக்கும் அந்தப் பெரிய இலுப்பைமரத்தை நினைத்துக் கொள்வான். இப்பொழுதும் அந்த மரத்தைப் பார்க்கும் பொழுது “யக்ஷன்” நினைவுதான் அவனுக்கு வரும். அது தீட்சிதர் உரையின் உருவங்கள். இன்றும் அதே உருவங்கள்தான் அவனோடு உயிராக இருக்கிறார்கள். யக்ஷன் தர்மராஜனிடம் நூற்றிஎட்டு கேள்விகள் கேட்கிறான். அனைத்திற்கும் தர்மர் விடை கூறுவதை தீட்சிதர் தெளிவாகக் கூறினார். அந்த வயதில் அவனுக்குச் சில எளிய தர்மங்கள்தான் மனதில் பதிந்தது. குளத்தில் நீர்குடிக்கச் சென்ற தம்பியர்கள், குளத்தின் உரிமையாளர் சொல்லைக் கேட்காமல் தண்ணீர் குடித்தனர். மயங்கி விழுந்தனர். தர்மபுத்திரர் யக்ஷன் சொல்லை மதித்தார். தனக்குத் தெரிந்த பதிலைத் தந்தார். தர்மதேவதை அவரது தம்பியர்களை மீட்டுக் கொடுத்தார். அதனால் பிறர் பொருளை, அவரது உரிமை இல்லாமல் தொடாதே என்ற பாடத்தை அறிய முடிந்தது.

“உலகில் ஆச்சரியமானது எது” என்ற கேள்விக்கு ,”தினமும் மனிதர்கள் இறக்கிறார்கள் என்று தெரிந்தும் நான் என்றும் இருப்பேன் என்று நினைக்கிற அறியாமைதான் ஆச்சர்யமானது” என்ற தர்மபுத்திரரின் பதில் அவனுக்குப் பிடித்திருந்தது. அதற்குப் பிறகு அவன் அந்த கிராமத்திலோ, அவனது குடும்பத்திலோ யாரேனும் இறந்தால் இந்த தர்மபுத்திரரின் விடைதான் அவனது மனதில் ஒலிக்கும். அதுவும் தீட்சிதரின் குரலிலேயே.

avs2அவர் கர்ணனின் கதையைச் சொன்னார். அவன் அன்று அழுதே விட்டான். ஆற்றில் மிதந்துவரும் தொட்டிலைத் தேரோட்டி எடுத்து வருவான். குழந்தை இல்லாத தன் மனைவியிடம் தருவான். ஒரு தாய் குழந்தையைத் தொட்டிலில் வைத்து ஆற்றிலே விட்டாள். இன்னொருத்தி அதையே அன்பாக அணைத்துக்கொண்டு தாயானாள். தீட்சிதர் அப்படிச் சொன்னபொழுது அன்று அவனுக்கு அந்த கிராமத்தில் யாருக்கெல்லாம் குழந்தைகள் இல்லையோ அவர்களுக்கெல்லாம் அவன் குழந்தையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். இதுவும் மகாபாரதம் சொல்லும் சூஷ்ம தர்மம்தானே. போர்க்களத்தில் கர்ணன் தேர்ச் சக்கரத்தைத் தூக்கும் பொழுது, கிருஷ்ணர் சொல்லி அர்ச்சுனன் அம்பு விட அது கர்ணனின் மார்பில் தைக்கிறது. கீழே சரிகிறான் கர்ணன். மீண்டும் அர்ஜுனன் விடும் அம்பெல்லாம் கர்ணனுக்கு மாலையாக விழும்படிச் செய்கிறாள் தர்மதேவதை. கண்ணன் போய் கர்ணனிடம் அவனுடைய புண்ணியத்தை தானமாகக் கேட்கிறான். தன் ரத்தத்தால் அதைக் கண்ணனுக்குத் தாரை வார்க்கிறான். கண்ணன் கர்ணனுக்குத் தன் விஸ்வரூபம் காட்டுகிறான். இந்த நிகழ்ச்சியைக் கதறக்கதறச் சொல்லி, “ஏய்..குருவாயூரப்பா..கர்ணனுக்கு நீ விஸ்வரூம் காட்டினயாமே…உண்மைதானான்னு பட்டத்ரி கேட்டார். அதுக்கு குருவாயூரப்பன் “ஆமாந்நாளாம்” என்று தீட்சிதர் கதை சொல்லும் அழகே அழகு. பின்னொருநாள் அவன் அவனுக்குப் பெரியம்மாவுடன் அம்பாசமுத்திரம் கிருஷ்ணா தியேட்டரில் கர்ணன் திரைப்படம் பார்க்கப் போனான். கர்ணன் இறக்கும் பொழுது அவனும் அழுது, படம் முடியும் முன்பே தியேட்டரை விட்டு வெளியில் வந்ததை அவனுக்குப் பெரியம்மா அவனிடம் அடிக்கடி நினைவு கூறுவாள். அவன் கர்ணன் திரைப்படத்தை எத்தனையோ முறை பார்த்து விட்டான். அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குரலிலும் தீக்ஷிதரின் குரலையே அவன் அடிநாதமாகக் கேட்கிறான். அதே போல அபிமன்யு, பீஷ்மர், துரோணர் , நளசரித்ரம் எல்லாமே அவனுக்குள் அவர் அன்று நட்ட விதைகள்தான். பின்னாளில் அவன் மகாபாரதக் கதைகளுக்குள் தன்னைத் தொலைத்ததற்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரே காரணம் என்றால் அந்த உபன்யாசத்தை ஏற்பாடு செய்த சங்கரலிங்கம் ஐயர் போன்ற பெரியோர்களின் தர்ம சிந்தனையும் முக்கிய காரணம்.

சங்கரலிங்கம் ஐயர் மறைந்த பிறகு, அவரது பிறந்த தினமான ஜனவரி 31ம் தேதி துவங்கி பதினைந்து தினங்கள் ப்ரும்மஸ்ரீ தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் அவர்களது உபன்யாசத்தை அவரது குடும்பத்தினர், குறிப்பாக K.S. ராமன் முன்னின்று நடத்தி வந்தார். தூப்புல் லக்ஷ்மிநரசிம்ஹன் செய்த “பிரகலாத சரித்திரம்” சொற்ப்பொழிவை அதே தெருவில் பலவருடங்களுக்குப் பிறகு கேட்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. தூணில் இருந்து அந்த நரசிம்மன் வெளியில் வரும் காட்சியை அவர் அழகு தமிழில் நெருப்புப் பொறி பறக்கச் சொன்ன பொழுதும், ஹிரண்ய வதம் முடிந்து, சினம் தணிந்து ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ஹனாகப் பிரகலாதனுக்குக் காட்சி அளித்ததைக் கூறும் பொழுதும் அவன் கண்கள் பனித்தன. அன்று அங்கு அந்தக் கதையைக் கேட்க வந்திருந்த L. M. சுந்தரம் ஐயர் (அவனுக்கு நண்பன் சுப்பாமணியின் அப்பா ) “கேட்டாயா விஸ்வநாதா…இப்படி உடம்பே புல்லரிக்கும்படியா எத்தனைபேர் கதை சொல்லறா” என்று வியந்தார். இப்படி எல்லாம் கிராமத்தில் தர்மத்தை வளர்த்தனர். அவனைப் போன்ற எத்தனையோ இளைஞர்களின் மனம் உயரக் காரணமே கிராமத்துப் பெரியோர்கள் செய்த நல்ல தர்ம காரியங்கள் என்பதை அவன் நம்புகிறான்.

(07.05.2015) இனியவன் அடுத்த வாரம் வருவான் ……….

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அவன் அது ஆத்மா! (11)

  1. mikavum arumiyaga irunthathu….nan kalvayi mandapathil mel irunthu kuthitha photvei parkum poluthu nan antha natkalukea sendruvitean,ennal meendu vara mudiyavillai….

  2. மிக்க நன்றி. ‘7 வீடுகள்’ பற்றிய அக்ரஹார அபூர்வ தகவல். முதலியப்பபுரம் தெரு லலிதா எலி மென்டரி ஸ்கூலில் 60 களில் ராயர் சார் இருந்தார்.  பேபி டீச்சர் கூட ராயர் தான் என்று நினைக்கிறேன் . எங்கள் வீடிற்கு எதிர் வீடு மாப்பிள்ளை கிருஷ்ண ஐயர் & கோமு அம்மை தம்பதி பெண்  தான் பிசுக்குட்டி மாமி . கல்கத்தாவில் வசித்த என் அம்மா வின் சித்தி ருக்மிணி & வெங்கடாசலம் தம்பதி பெண்கள் பாபு, சீதா கல்யாணங்கள் ராமச்சந்திர புரம் தெருவிலுள்ள அவர்கள் சொந்த வீட்டில் தான் நடந்தது . ஒரு முறை மாப்பிள்ளை வீட்டாருக்கு சங்கரலிங்கம் ஐயரின் வடக்கு பார்த்த ஒரு வீடு தான் கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு புலி தோல், மான் கொம்பு முதலிய அபூர்வ அலங்காரங்கள் தொங்க விடப்பட்டிருந்தன . ஸ்ரீ வடிவாம்பாள் திருக்கல்யாணம் இந்த தெருவில் விமரிசயாக நடக்கும் . 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *