வையவன்
செம்மஞ்சளாகப் பிளந்திருந்த பப்பாளிப் பழத்துண்டங்களில் கருமுத்துகளாய் மின்னிய விதைகளை ஸ்பூனில் வழிக்கப் போனாள் பிரீதா.
நாற்காலியில் உட்கார்ந்திருந்த சிவா “வெய்ட்” என்று தடுத்தான்.
பீங்கான் கோப்பையில் அவள் அந்த எவர்சில்வர் ஸ்பூனை அப்படியே விட்டாள். ‘ணங்’கென்று ஓர் இனிய ஒலி வந்தது.
“வாவ். ஹவ் லவ்லி” என்றான்.
பிரீதாவும் அந்த அழகில் லயித்தாள்.
“செம்மஞ்சள் மேகத்தில் மிதக்கும் கறுப்பு தேவதைகள்” என்றான்.
“பிரிந்த இதயத்தின் நிராசைக் கருமணிகள்” என்றாள் பிரீதா.
சிவா “வொண்டர் ஃபுல்” என்று அவள் உவமையைச் சிலாகித்தான். அவளைப் பார்த்தான். அந்தக் கண்களில் அந்த இனிய பிரீதா இல்லை. இவள் பிரச்னையை எதிர் கொள்பவள். குளிர்ச்சியான ஒளியூட்டுகின்ற பிரீதா இல்லை.
இவள் வேறு-விளக்கின் கீழே நிற்கும் கருநிழல் மாதிரி.
சிவா அவளிடம் அந்த அந்நியத்தைக் கண்டு அதைச் சந்திக்கப் பிரியமின்றி பார்வையை ஒதுக்கினான்.
“உனக்கு திஷ்யாகிட்டே என்ன அப்படி ஒரு அக்கறை?”
மெல்ல கடற்காற்று அசோக மரங்களை உயிர்ப்பித்தது.
சிவாவுக்கு அவள் இன்னும் சில அடிகள் முன்னேறி வருவது போல் ஓர் உணர்வு.
“இன்னிக்குக் காலையிலே அவள் ஒர்க்ஷாப்புக்கு தம்பியை அனுப்பி என்னைக் கூட்டி வரச் சொன்னா”
“அதுக்கு மேலே?” அவள் தூண்டினாள்.
“அதுக்கு மேலேயும் உண்டுண்ணு இன்னிக்குத்தான் வாய் விட்டுச் சொன்னாள்.”
“ஓ”
பிரீதா இதை இயல்பாகச் சொன்னாளா என்று அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் புன்னகை செய்ய முயன்றாள். அதில் வலி தென்பட்டது.
சிவாவின் கண்களில் அவள் எதையோ ஆழ்ந்து தேடினாள்.
“உனக்கும் உண்டா?”
“நேத்து வரைக்கும் இருந்தது.”
“இப்ப…”
“யோசிக்கிறேன்”
“ஏன்?”
“தாமுவுக்கு அவள் பேரிலே என்ன இன்ட்ரஸ்ட் இருக்கும்னு தெரிஞ்சபிறகு யோசிக்காம என்ன பண்றது?”
“பப்பாளி விதையை எடுத்துடட்டுமா?”
“ஓ… எஸ்!”
பிரீதா விதைகளை அகற்றினாள். இன்னொரு சாஸரில் இரண்டு துண்டங்களை எடுத்து வைத்தாள்.
“சாப்பிடு”
அவன் கீழ்ப்படிவது போல் பழத் துண்டங்களில் செருகியிருந்த ஸ்பூனில் வெட்டினான்.
அவன் பழத்தை அருந்தும் போது அவளும் கூட சாப்பிடத் தொடங்கினாள்.
“எதற்காக யோசிக்கிறே?”
“ம் ம்…” என்று அவள் கேள்வி புரியாது எங்கோ நினைவில் கரைந்திருந்த சிவா விழிப்பு வந்து கேட்டான்.
“தாமு என்னை மனிதனாக்கியிருக்கிறார்”
“நன்றி விசுவாசமா?”
“அது மட்டுமல்லே.”
“பின்னே?”
“திஷ்யா தாமுகிட்டே இன்னும் மகிழ்ச்சியா இருக்கலாம்.”
“உன்னை விரும்பின பிறகா?”
“விருப்பங்கள் நிலையானவையல்ல”
“வாட் டு யூ மீன்?”
“வசதிகளைத் தான் மனசு எப்பவும் தேடுது. இன்னும் ஒண்ணுமே ஆகாத என்னாலே என்ன வசதி செஞ்சுட முடியும்? இந்தச் சினிமா சான்சை விட்டுட்டதுக்கு அவளே பின்னால வருத்தப்படலாம்.
என்னை விரும்பியதுக்கும் சேர்த்து வருத்தப்படலாம். அவளே இல்லேண்ணாலும் அவங்க அப்பா, குடும்பம் எல்லாரும் அப்படி அவளை நெனைக்க வச்சுடலாம்.”
“வாட் அபவ்ட் திஷ்யா? அவள் மனசு என்ன? தாமு யார் என்னண்ணு அவளுக்கு நல்லாத் தெரியும். அவ தாமுவை லைக் பண்ணுவாளா?”
“இல்லே”
“தென்?”
“தென் இட்ஸ் ஹெர் ஒன் ப்ராப்ளம்”
“இந்த ஒலகத்துக்கு நீ ஒரு மிஸ்ஃபிட் சிவா”
அவன் சிரித்தான்.
“இது நீ வாழ வேண்டிய காலமில்லே. நீ ஒரு நூற்றாண்டு பின்னாடி இருக்கே”
“ஆ, இருக்கட்டுமே. ஒலகம் ரொம்பப் பெரிசு. அதற்குப் பொருத்தமானவங்களே மெஜாரிட்டி ஆயிட்டாலும் மைனாரிடிக்கு ஒரு மூலை இருக்கு.”
“இதான் டிஃபீடிஸம். தோல்வி மனப்பான்மை.”
“இது ஒரு மனப்பானந்மை. வெற்றியோ தோல்வியோ நாலு பேர் குத்தற முத்திரை. முத்திரைகளுக்கு வாழாம மனசுக்காக வாழ்கிறவனுக்கு இது விஷயமில்லே. தேர் அர்ஸோ மெனி மிஸ்ஃபிட்ஸ். நல்ல யோசிச்சா மிஸ் ஃபிட்ஸ் தான் மெஜாரிடி.”
சிவா ஸ்பூனில் மற்றொரு பப்பாளிப் பழத்துண்டை எடுத்தவாறே பேசினான்.
“நீயும் என்னைப் போலவே ஒரு கோழைதான் சிவா.”
“ஆமா… நாம வாழ்க்கைக்கு வசதிகளுக்கு. அது நமக்கோ பிறருக்கோ இல்லாமப் போறதுக்கு ரொம்பப் பயப்படறோம்.”
“தென்… நீ ஏன் பேனா எடுத்து எழுதறே. தன்னை விரும்புகின்ற நம்புகின்ற ஒருத்தியை ஏத்துக்க முடியாதவன்-அந்த பிரச்னைகளுக்குப் பயப்படறவன் என்ன எழுத்தாளன்?”
அவன் அதிர்ச்சியுற்றான்.
“பின்னாலே இந்தத் தோல்வி மனப்பான்மைக்கு கோழைத்தனத்திற்கு அழகான ஜோடனைகள் செய்து கதை எழுதுவே, பெரிய காதல் தோல்வி மாதிரி நீ இதைப் போஸ் பண்ணுவே”
பிரீதாவிடம் இப்படி ஒரு பக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லை.
‘நான் அப்படியா பிரீதா”
“நீ மட்டுமில்லே. யூ மென், மோஸ்ட் ஆஃப்யூ ஆர் லைக் திஸ். ஒங்களுக்குப் பெண் வேணும்; பிரச்னைகள் இல்லாமே. லகுவா பொறுப்பு ஏத்துக்கனும்ணா ஒங்களுக்கு கசக்கும். எந்த சாக்கிலே கை கழுவலாம்னு யோசிப்பீங்க.”
சிவாவுக்கு அவள் இன்னும் பேசட்டும் என்று ஒரு வெறி வந்தது.
அவளுடைய வார்த்தைகள் உளித்தாக்கு போல் இறங்கி அவனைச் செதுக்கின.
அவன் கொஞ்சம் கொஞ்சமாய் சிதைந்தான். வடிவமைப்பின் பரிணாமங்களில் உரிந்து உரிந்து வீழ்ந்தான்.
“ஒங்களுக்கெல்லாம் காதல் வேணும். காதல் பிடிக்கும். அதன் பிரச்னைகளுக்கு நீங்க துடிதுடிப்பீங்க. ஆனா அது இன்னொருத்தருடையதா இருக்கணும். வென் இட் கம்ஸ்டு யூ. சமுதாயம்… தியாகம்… அது இதுண்ணு உங்க சுயநலத்துக்காக நீங்க போலிக் காரணங்களைத் தேடுவீங்க…”
சிவா ஸ்பூனைக் கீழே வைத்து விட்டான்.
இவள் வேறு பிரீதா. கொதிப்புற்றவள். வெடிக்கின்றவள்.
மெய்மறந்து போய் அவன் கேட்டுக் கொண்டிருப்பது உறைத்த மாதிரி பிரீதா நிறுத்தினாள்.
“ஸாரி சிவா.”
“ப்ரொஸீட்… மேலே சொல்லுங்க. எக்ஸ்ப்ளய்ன் யுவர் செல்ஃப்.”
அவள் முகம் குப்பென்று சிவந்தது.
“ஐ டிட்ன்ட் மீன் யூ”
“நோ… இட்ஸ் ஆல் ரைட்.. நானும் ஆண். அதே வர்க்கம், கேரி ஆன்.”
அவள் உதட்டை மென்றுகொண்டே அவனை ஊடுருவுவது போன்று பார்த்தான். பிரீதாவின் கண்களிலிருந்து முத்து முத்தாக ஒரு மௌனத்தினிடையே நீர்த்துளிகள் உருண்டன.
“பிரீதா” என்று ஒன்றும் புரியாமல் முனகினான்.
அவள் சட்டென்று திரும்பி சமையலறைக்குப் போய் விட்டாள். பத்து நிமிஷம்… பதினைந்து நிமிஷம்… சிவா அங்கே ஒரு சம்பந்தமற்றவன் போன்று உட்கார்ந்திருந்தான்.
அங்கே உட்கார்ந்திருப்பதா… எழுந்து செல்வதா என்று புரியாமல் கொஞ்சம் குழம்பினான்.
சமையல் அறைக்கு உள்ளே போய் அவளை எந்த விதத்திலாவது தேற்ற வேண்டுமா என்று யோசித்தான்.
பேசாமல் அங்கே உட்கார்ந்திருப்பதைத் தவிர தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உணர்ந்து கொண்டவன் போன்று அமைதியாக சாஸரில் வைக்கப்பட்டிருந்த பப்பாளிக் கீற்றை ஸ்பூனில் கொஞ்சம் கொஞ்சமாக நறுக்கிக் கொண்டே அதை அருந்தாமல் வெறுமனே நறுக்கிக் கொண்டே அதன் சிதைவைக் கவனித்தான்.
பதினைந்து நிமிஷம் கழித்து டிரஸ் மாற்றிக் கொண்டு வந்தாள். பிரீதா.
பவுடர் டச்-அப் செய்திருந்தாள். அழுத முகமல்ல பழைய பிரீதா. இனிய, சுமுகமான, ஒளி பாய்ச்சுகின்ற பிரீதா.
“சரி… நாம கௌம்புவோமா?” என்று அப்படி எதுவும் நடக்கவில்லை போன்று புன்னகையுடன் கேட்டாள்.
“எங்கே?”
“திஷ்யா வீட்டுக்குத்தான்”
அவளை அழைத்துச் செல்லவே வந்திருக்கிறோம் என்பது சிவாவுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது.
அவனும் எழுந்தான்.
தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *