பழமொழி கூறும் பாடம்

0

தேமொழி.

 

பழமொழி: வெந்நீரில் தண்ணீர் தெளித்து

 

செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந்நீ ரவரவர்க்குத் தக்காங் கொழுகுபவே
வெந்நீரிற் றண்ணீர் தெளித்து.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

பதம் பிரித்து:
செந்நீரார் போன்று சிதைய மதிப்பார்க்கும்
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும்
அந் நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
வெந்நீரில் தண்ணீர் தெளித்து

பொருள் விளக்கம்:
செம்மையான பண்பு உள்ளவரைப் போன்று தமது காரியத்தை சிதைக்க எண்ணுபவரிடமும் (அன்பு காட்டியும்), பொய்யாகப் பொருட்படுத்தாத  பண்பு கொண்டவர் போல செயலை தக்கவாறு முடிப்பவரிடமும், அவரவருக்கேற்ற பண்பினை அவரவரது இயல்புக்குத் தக்கவாறு கையாள்வது, வெந்நீரில் குளிர்நீர் கலந்து அளாவி பதமாகப் பயன்படுத்துவதைப் போன்றது.

பழமொழி சொல்லும் பாடம்: வெந்நீரில் குளிர்நீர் அளாவி பக்குவமாகப் பயன்படுத்துதல் போல, அவரவர் இயல்பிற்குத் தக்கவாறு செயல்பட்டு தனது செயலை நிறைவேற்றிக் கொள்வார் தமது காரியத்திலேயே கண்ணாயிருப்பவர்.

ஆடிக்கறக்கும் மாட்டை ஆடியும், பாடிக் கறக்கும் மாட்டைப் பாடியும் கறக்க வேண்டும் என்று பரவலாக இக்காலத்தில் வழங்கப்பெறும் பழமொழி கூறுவதும் இக்கருத்தையே வள்ளுவரும் இதனைப் பின்வருமாறு கூறுகிறார்.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. (குறள்: 469)

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செயல்படாவிட்டால், நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும் என்று வள்ளுவர் அறிவுறுத்துகிறார். தமது காரியத்தை முடிக்க உதவ இயலாதவரிடம் அக்கறை செலுத்தி அவரை ஊக்கப்படுத்துவது தேவையானது. தனது கடமையை உணர்ந்து செயலாற்றுபவரை தொல்லை செய்யாது அக்கறையின்றி விட்டுவிடுவது அவரது பொறுப்புணர்வை அதிகப்படுத்தும். தன் மேல் வைத்துள்ள நம்பிக்கையை பாழாக்கக் கூடாது என்று அவர் கடினமாகக் காரியமாற்றுவார். அவரவர் செயலாற்றும் இயல்பை உணர்ந்து அதற்கேற்றவாறு நடப்பது அவரவரையும் அவரது பண்பிற்கு ஏற்றவாறு ஊக்கப்படுத்தும் முறையாகும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *