சு. கோதண்டராமன்

 

முன்னுரை

களப்பிரர் காலம் தமிழகத்தின் இருண்ட காலம் எனப்படுகிறது. காரணம் அப்பொழுது என்ன நடந்தது என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான். அந்தக்கால வரலாறுதானே எழுத முடியவில்லை, கற்பனை  செய்ய என்ன தடை? அதைத் தான் இந்த நாவலில் செய்திருக்கிறேன்.

கற்பனை செய்ய உரிமை கிடைத்துவிட்டது என்பதற்காக அஸ்திவாரம் இல்லாமல் ஆகாயக் கோட்டை கட்டவில்லை. இந்த நாவலில் வரும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுக்கும் ஆதாரம் உண்டு. அவை வலுவாக இல்லாமையால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊகங்களுக்கு இடம் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் ஒன்றை நான் தேர்ந்தெடுத்துள்ளேன். எதிர்த்தரப்பு ஊகமே சரியானது என்று நிரூபிக்கப்படும் வரையில் என்னுடையது கொடிகட்டிப் பறக்கும். யார் கண்டார்கள், என் ஊகம் உண்மையாகக் கூட ஏற்றுக் கொள்ளப்படலாம்.

தலைப்பைப் பார்த்தவுடன் கல்கியும் அவரது பார்த்திபன் கனவும் தான் நினைவுக்கு வரும். அந்த எழுத்துலகச் சக்கரவர்த்தியால் பாதிக்கப்படாதவர் யார்? அவர் தரத்தை எட்ட முடிந்தவர் யார்?

இதோ நானும் என் பொல்லாச் சிறகை விரித்து ஆடத் தொடங்குகிறேன். வரலாற்றுப் புதினம் என்ற பெயருக்குத் தகுதி உடையதா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நீங்கள்.

1 நதிப் பயணம்

வளவன் கனவு

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

– ரிக்வேதம்

(கூட்டத்தின் தலைவரான உம்மைப் போற்றி அழைக்கிறோம். நீர் அறிஞர்களுக்குள் அறிஞர். ஒப்பற்ற புகழ் படைத்தவர். ஒளி பொருந்தியவர்களில் சிறந்தவர். வேதத்திற்கு வேத நாயகராய் விளங்குபவரே, எங்களுடைய பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து அருள் பொலிவுடன் உமக்குரிய ஆசனத்தில் இங்கு எழுந்தருள்வீராக.)

நர்மதை நதி ஓடிக்கொண்டிருந்தது. என்ன வேகம்! என்ன வேகம்! எதற்கு இந்த அவசரம்? கன்றின் குரல் கேட்டு ஓடும் பசுவைப் போலல்லவா வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் தன் இலக்கை நோக்கி ஓடுகிறது! கடலைச் சந்திக்க இவ்வளவு ஆர்வமா? கரையில் முளைகளில் கட்டப்பட்டிருந்த படகுகள் நீரின் வேகத்தால் அடித்துச் செல்லப்பட்டு விடும் போல அவற்றின் கயிறுகள் இழுத்துக் கொண்டு விறைப்பாக நின்றன.

சினோர் நகரில் நதியின் வடகரையில் நின்றுகொண்டிருந்த ஆங்கிரஸ பிரமராயர் ஒரு கணம் அந்த நீர்ப் பெருக்கின் அழகில் மெய் மறந்து நின்றார். ‘நம் நாட்டுக் காவிரிக்கு இவ்வளவு வேகம் இல்லை. அது பெருகி வரும் நாட்களில் செக்கச்செவேல் என்று நுங்கும் நுரையுமாக இருப்பதைப் போல் இல்லாது இந்த நீர் எவ்வளவு தெளிவாக உள்ளது! மேலும் இது காவிரி போல் சில மாதங்கள் வறண்டு போகாமல் ஆண்டு முழுவதும் ஓடும் ஜீவநதியாக உள்ளது’ என்று மனதிற்குள் ஒப்பிட்டுக் கொண்டார்.

மறுகணம் திடீரென்று விழிப்பு வந்தவர் போல அவர் தன்னைச் சுற்றிப் பார்வையிட்டார். இன்று அவருக்கு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. கடந்த   இரண்டு மாதமாக அலைந்த அலைச்சல் முடிவடைந்து அவருடைய வேலையில் இன்று ஒரு புதிய திருப்பம். இன்னும் ஒரு மாதத்திற்கு அவருக்கு ஓடும் நதியையோ, பாடும் குயிலையோ ரசிப்பதற்குத் தேவையான ஓய்வு இல்லை.

“முதல் படகில் எல்லோரும் ஏறியாகி விட்டதா? பொறுப்பாளர் யார்?” என்று கேட்டவர் தன் கையில் இருந்த சுவடிக்கட்டிலிருந்து ஒரு ஓலையை எடுத்தார். “அம்ருத நயினார்” என்று விளித்தார். படகில் உட்கார்ந்திருந்த நயினார், “எல்லாம் சரியாக இருக்கிறது அமைச்சரே, என் வசம் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த முப்பது மனிதர்கள் இருக்கிறார்கள், எல்லோருக்கும் தேவையான உணவு இருக்கிறது. சோழநாட்டு மாலுமிகள் நால்வரும் இருக்கிறார்கள்.”

“சரி, நீங்கள் புறப்படலாம். காழித் துறைமுகத்தில் சந்திப்போம்.” பச்சைக் கொடியை அசைத்தார் பிரமராயர்.

படகில் உட்கார்ந்திருந்தவர்கள்,

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே கவிம் கவீனாம் உபமச்ரவஸ்தமம்

ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹமணஸ்பதிம் ஆனச்ருண்வன் ஊதிபிஸ் ஸீதஸாதனம்

என்று ஒரே குரலில் முழங்கினர். படகு புறப்பட்டது.

பிரமராயர், “சரி, அடுத்த படகு தயாராக இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டுத் தன் கையில் இருந்த ஓலையைப் பார்த்து, ‘ஆனந்த நயினார்’ என்று படித்தார். “சித்தமாக உள்ளேன், அமைச்சரே. என் பொறுப்பில் முப்பது பேர் உள்ளனர். ஐந்து குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மாலுமிகள் ஆயத்தமாக உள்ளனர். உணவுப் பொருள் உள்ளது. உத்தரவு கிடைத்தால் நாங்கள் புறப்படுவோம்’ என்றார் அவர்.

“சரி, போகலாம். காழியில் காத்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்றார். பயணிகளின் விநாயகர் துதியுடன் புறப்பட்டது படகு.

இப்படியே 99 படகுகள் புறப்பட்டுச் சென்றன. நூறாவது படகில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, ஆங்கிரஸ பிரமராயர் தானும் ஏறி அமர்ந்தார். படகு புறப்பட்டது. எல்லோரும் ’கணானாம் த்வா’ சொன்னார்கள்.  முடித்தபின் ஆங்கிரஸர் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் கேட்டார், “எல்லோரும் விநாயகரைக் குறித்து வேத மந்திரம் சொல்கிறீர்களே, அவர் வேத தெய்வமாகத் தெரியவில்லையே” என்றார்.

அவர் மறுமொழி சொன்னார், “வேத தெய்வம் அல்ல என்றாலும் இங்கு நாங்கள் பரம்பரையாக வணங்கி வரும் தெய்வம். இடையூறு இல்லாமல் வேலை முடிவதற்கு நாங்கள் அவரைத்தான் வேண்டுவோம். அதற்காக இந்த வேத மந்திரத்தை ஓதுவது எங்கள் முன்னோர்களின் வழக்கம்” என்றார். ‘சோழநாட்டின் மாரியம்மன், ஐயனார் போல இவர் இந்த வட்டாரத்தின் தொல்பழம் தெய்வம் போலத் தோன்றுகிறது. எந்தத் தெய்வமாக இருந்தால் என்ன, எல்லாம் நல்லபடியாக நடந்தால்  சரிதான்’ என்று நினைத்துக் கொண்டார் ஆங்கிரஸர். படகில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதை நோக்கிக் கும்பிட்டார்.

கடந்த இரண்டு மாதமாக என்ன அலைச்சல் அலைந்திருக்கிறார்! சோழ நாட்டில் நடப்பதற்கும் இங்கு நடப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. அங்கு எல்லாம் சமவெளி. ஒரு நாளில் இரண்டு காத தூரம் நடக்கலாம். இங்கு மலைப் பகுதி. அரைக்காதம் நடப்பதற்குள் கால்கள் கெஞ்சுகின்றன. ‘இந்த மனிதர்கள் நம்மை விட உடல் வலிமையும் ஆன்ம வலிமையும் மிக்கவர்கள் தாம். இவர்களை பத்திரமாகச் சோழநாட்டுக்குக் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும், விநாயகப் பெருமான் துணை புரிய வேண்டும்’ என்று பிரார்த்தித்துக் கொண்டார்.

மாலுமிகள் லாகவமாகப் படகை ஓட்டிச் சென்றனர். அவர்களுக்குத் துடுப்புப் போட வேண்டிய வேலையே இல்லை. நீரின் போக்கில் போனதால் படகு மிக வேகமாக ஓடியது. பாறைகளில் மோதாமல் பார்த்துக் கொள்வது தான் அவர்களது வேலை. வரும்போது பட்ட சிரமத்தை நினைத்துக் கொண்டார். கடலில் அனாயாசமாகப் படகோட்டிய சோழ நாட்டு மாலுமிகளால் இந்த நதியில் எதிர்த்து வர முடியவில்லை. அதனால் பாருகச்சம் துறைமுகத்தில் உள்ளூர் மாலுமிகளை அமர்த்திக் கொண்டார். அவர்கள் மிக வலிமையானவர்கள். அவர்களும் உதவியதால் நீரின் போக்குக்கு எதிராகப் படகை ஓட்டி வர முடிந்தது.

இந்த இரண்டு மாதத்தில் எத்தனை பேர் எவ்வளவு உதவி செய்திருக்கிறார்கள்! அவந்தி தேசத்தின் சிற்றரசர் நம் சோழ மன்னனின் வேண்டுகோளைப் பெரிதாக மதித்து நமக்குத் தேவையானதைச் சேகரித்துக் கொடுத்தாரே! நேற்று கார்வான் நகரில் அந்த மூவாயிரம் பேர் கூடியிருந்தது தெய்விகமான காட்சியாக இருந்தது. இவர்கள் சோழநாட்டில் போய் இறங்கியதும் மன்னர் மிக மகிழ்ச்சி அடைவார். தேவதேவன் அருளால் மன்னர் விருப்பம் நிறைவேற வேண்டும். சோழநாடு முன்போல வலிமையும் புகழும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். சினோர் நகரம் சிறிது சிறிதாகக் கண் பார்வையிலிருந்து மறைந்தது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “வளவன் கனவு- வரலாற்று நாவல் (1)

  1. நல்ல தொடக்கம்….நதியின் ஓட்டம் போல தடையில்லா வேகம், தொடர்ந்து படிக்க ஆவல்.. சார்

  2. நர்மதை நதிக் கரையில் உள்ள சினோர் நகரம் என்றதும் தேடிப் பார்த்தேன்; இது, இப்போதைய குஜராத் மாநிலத்தில் உள்ளதாகத் தெரிகிறது. நல்ல தொடக்கம். களப்பிரர் காலத்தின் மேல் இந்த நாவல் ஒளி பாய்ச்சும் என நம்புகிறேன்.

  3. வரலாற்றுப்புதினங்கள் எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல.  கற்பனைத்திறனுடன் வரலாறும் தெரிந்திருக்க வேண்டும்.  அந்தக்காலப் பேச்சு வழக்கு, நடையுடை பாவனைகள் அறிந்திருக்க வேண்டும்.  ஏராளமாய் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்.  எழுதத் துவங்கியிருப்பதே உங்கள் எழுத்தின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.  அதிலும் அதிகம் தெரிந்திராத களப்பிரர் பற்றி எழுதுவது மிகவும் சிறப்பு.  ஒன்றுக்கு மேற்பட்ட யூகங்கள் இருப்பதால் எடுத்துக்கொண்ட யூகத்தின் அடிப்படையில் நாவலை கட்டமைக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. ஆற்றொழுக்காய் அமைந்த நடை!  பாராட்டுக்கள்.  தொடர்வேன்.

  4. அன்பின் கோதண்டராமன் அவர்களுக்கு..
     
    அப்படி இப்படி என்று அட்டகாசத் தொடக்கம் ஒன்று!   சரித்திரம் படைக்கும் பணியில் என் சக எழுத்தாளர் பயணிக்கிறார் என்பதறிந்து உள்ளம் நெகிழ்கிறேன். வல்லமையின் ஒரு அங்கமாக உங்களைக் கண்டிருக்கிறேன்.. எனினும் உங்களின் பன்முகப் பரிமாணங்களில் ஒன்றாக இதோ.. வரலாற்று நூல் என மற்றொரு அவதாரம் எடுக்கிறீர்….
     
    இதுவரை நான் எந்த நூலும் கற்றறியேன் என்பது ஒரு சிறு குறையாகத்தான் இருந்தது.  ஆனால் இன்றோ, பொன்னியின் செல்வனையும், பார்த்திபன் கனவையும் ஒரு முறையாவது படித்திருக்கக் கூடாதா என்கிற கவலை என்னைப் பிடித்து ஆட்டுகிறது. கவிதையும் கண்ணதாசனும் பெருங் கடலாக இருக்கும்போது காலத்தைக் கைது செய்து இந்தக் காவியங்களைப் படித்திட இயலவில்லை என்று ஒரு நொண்டி சமாதானம் எனக்குள் நான் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் இழப்பு எனக்குத்தான் என்பதை உணர்கிறேன்.    தவிர, சாண்டில்யன் எழுதிய ஒரு சில புத்தகங்கள் என் பார்வையில் பதிந்திருக்கின்றன.. ஏதோ நண்பர் மூலம் .. மேற்கொண்ட பயணத்தின்போது இரவுகள் அதற்காக ஒதுக்கியது நினைவில் உண்டு. படிக்க ஆரம்பித்துவிட்டால், இடையில் தடுத்திட முடியாது என்பதாக அமைந்த வரலாற்று நாவல்கள்.. புதினங்கள்.. அதைச் சொல்லும் ஆசிரியரது திறத்தால் அந்தக் கதை அபூர்வக் கதையாகிவிடுகிறது என்பதனை உணர்ந்திருக்கிறேன்.
     
    தனக்கென உள்ள பணிகள் என்று பட்டியலிட்டால் நீட்சிபெறும் தகைமையாளர் .. தனது நேரத்திற்கு ஒரு சவால் விடுத்து தொடங்கியிருக்கிறார் இந்த வரலாற்று நாவல் என்று நினைக்கிறேன். களப்பிரர் என்று அதிகம் பேசப்படாத அல்லது எழுதப்படாத பக்கங்களை, தன் கற்பனையோடு கைகோர்த்து நிறைவான புதினமாக இவர் தருவார் என்கிற நம்பிக்கைக்கு அத்தாட்சி சொல்கிறது முதல் பகுதி..
     
    வெறும் வாழ்த்துகள்தான் கூற வந்தேன்..  வார்த்தைகள் என்னை இழுத்து வந்திருக்கின்றன.  வல்லமை உங்களுள் பெரிதும் உண்டு என்பதை அறிந்தவன் என்கிற முறையில் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.. பாராட்டுகள் கொட்டி வைக்கிறேன்..  இது நீங்கள் எழுதவிருக்கும் பல்வேறு வரலாற்று நூல்களுக்கு முதற்கட்டம் என்பதாக எண்ணி.. எழுத்து என்கிற தவத்தால் நீங்கள் பெறப்போகும் இமாலய வெற்றிகளுக்கு  இன்றே என் அன்பு நெஞ்சத்தின் ஆயிரமாயிரம் சாமரங்கள்!!
     
    அன்புடன்…

    கவிஞர் காவிரிமைந்தன்
    நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர்
    கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம்
    பம்மல்,  சென்னை 600 075
    தற்போது – அபுதாபி – அமீரகம்
    00971 50 2519693
    00971 50 4497052

  5. பாராட்டுகளுக்கு நன்றி
    கோதண்டராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *