பெண்ணே பொங்கி எழு!
-ரா.பார்த்தசாரதி
வயது வந்த பெண் அவள்,
வரதட்சணை இன்றி அழுகிறாள் !
வரதட்சணை தந்து மணப்பவளோ
வரட்டி போலங்கு எரிகிறாள் !
நங்கை எனும் பெண் அழுகிறாள்,
கண்ணீரை ஏனோ கங்கையாகக் கொட்டுகிறாள்
ஏனோ இவ்வுலகில் ஆயிரம் பொன் தந்தாலும்
இவ்வுலகில் மங்கை மண்ணெண்ணெய்க்குள் மறைகிறாள்!
மண்ணாய் என்றும் இருந்துவிடாதே கண்ணே!
புதுமைப் பெண்ணாய் மாறிட வேண்டும்
பொன் பொருள் ஊதியம் தந்து வாழ்கின்றாய்
என்றுதான் உன் சுதந்திரத்தை நிலைப்படுத்துவாய்?
ஆணுக்கு நிகராய்ப் படித்து பட்டம் பெற்றாய்
உன் பெற்றோரைத் திருமணத்தோடு மறந்தாய்
உனக்கு உயிரும் உருவமும் தந்தவளை
உதாசீனம் செய்ய எண்ணி விடாதே!
மதிப்பும் மரியாதையும் மனதிலே மட்டும்தானா?
பிறந்த வீட்டையும் சற்றே நினைக்க வேண்டாமா?
பல்லாயிரம் தொலைவில் இருந்தாலும் தாய்ப்பாசம் மாறுமா?
அவள் நிலைமை என்றும் உயர்த்த வேண்டமா?
ஆணுக்கு நிகராய் என்றும் இருந்திடுவாய்
தர்மத்தையும் நியாயத்தையும் என்றும் நிலைநாட்டிடுவாய்
பெண்ணடிமை என்பதை வேரோடு அறுத்திடுவாய்
ஞாலத்தில் புதுமைப் பெண் என்பதைப் பறைசாற்றிடுவாய்!