அமெரிக்காவில் பேன்
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்காவில் இன்னும் பேன்களின் உபாதை இருக்கிறது என்று அறிந்து அதிசயப்பட்டேன். இந்தியாவில் பள்ளிப் பருவக் குழந்தைகளுக்குப் பேன் தொந்தரவு இருக்குமென்றும் அதன் பிறகு அவர்கள் கல்லூரியில் சேர்ந்த பிறகு இந்தத் தொந்தரவு தானே போய்விடும் என்றும் என் குழந்தைகளின் மூலம் அறிந்திருந்தேன்.
ஆனால் என்னைப் பொறுத்தவரை கல்லூரியிலும் பேன் தொந்தரவு என்னைப் பாடாயப் படுத்தியிருக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது விடுதியில் தங்கியிருந்தேன். மாணவிகளின் ஒழுக்கத்தில் மிகுந்த அக்கறை காட்டும் கல்லூரி என்று பெயர் வாங்கிய கல்லூரி. மாணவிகளை விடுதிக்கு வெளியே ஆசிரியைகள் துணையில்லாமல் எங்கும் அனுப்ப மாட்டார்கள் என்பதால் இந்த மாணவிகளுக்குக் கல்யாணச் சந்தையில் கொஞ்சம் கூடுதல் மதிப்பு. இதனால் பல பெற்றோர்கள் இந்தக் கல்லூரியில் தங்கள் பெண்களைச் சேர்க்க விரும்புவார்கள்! மேலும் மாணவிகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் வாங்க அவர்களை நன்றாக உருத்தட்டப் பழக்கிவிடுவார்கள். இந்தக் காரணத்தாலும் பெற்றோர்கள் இந்தக் கல்லூரியை விரும்புவதுண்டு. அமெரிக்கக் கிறிஸ்தவப் பெண் துறவிகளால் நடத்தப்பட்ட இந்தக் கல்லூரியில் விடுதிக்கான செலவு, உணவுக்கான செலவு என்று எக்கச்சக்கமாக வசூலிப்பார்கள். ஆனால் வசதிகள் மிகவும் குறைவு. ஒரு அறையில் நான்கு பேர் தங்கியிருப்போம். அதில் ஒரு பெண்னுக்குத் தலையில் நிறைய பேன்கள் உண்டு. அவள் தலையிலிருந்து என் தலைக்குப் பேன்கள் வேகமாக வந்துவிடும். சிலர் தலைமுடிக்குப் பேன்களை வசீகரிக்கும் சக்தி உண்டு என்பார்கள். என் தலைக்கு அது இருந்தது போலும்! அதே அறையில் தங்கியிருந்த மற்ற இரண்டு மாணவிகளைவிட பேன் தொந்தரவால் நான்தான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அவளிடமிருந்து வெகு தூரம் தள்ளிப் படுப்பது (பத்தடிக்குப் பத்தடி அளவுள்ள அறையில் எவ்வளவுதான் தள்ளிப் போவது?) போன்ற எந்த உத்திகளும் கைகொடுக்கவில்லை. விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதெல்லாம் தலையைச் சுத்தம் செய்துகொண்டு போனாலும் விடுதிக்குச் சென்றதும் மறுபடி பேன் தொந்தரவு வந்துவிடும்.
இந்தியாவில் என் மகள் பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றதும் பேன்களை அவளை விட்டுப் போய்விட்டாலும் மேல்படிப்புப் படிக்க அமெரிக்கா வந்து இன்னும் மூன்று பெண்களோடு தனித்தனி அறைகளில் தங்கினாலும் பேன் தொந்தரவால் பாதிக்கப்பட்டாள். அவளுக்குத் தலையில் பேன்கள் வரக் காரணமாக இருந்த இன்னொரு பெண்ணின் கிராப் வைக்கப்பட்ட தலையில் இருக்கும் ஈறுகள் எல்லோர் கண்களுக்கும் நன்றாகவே தெரியும். எனினும் தலையைச் சுத்தம் செய்துகொள்ளும்படி அவளிடம் கூறுவதற்கு யாரும் முன்வரவில்லை. பூனைக்கு யார் மணிகட்டுவது என்பதில் உடன்பாடு ஏற்படவே இல்லை. அடுத்த வருடமே என் மகள் அறையை மாற்றிக்கொண்டாள்.
பொதுவாகத் தலையைச் சுத்தமாக வைத்துக்கொள்பவர்களுக்குப் பேன்கள் தொந்தரவு இருக்காது என்று சொல்வார்கள். அமெரிக்காவில் இன்னும் பேன் தொந்தரவு இருக்கிறது என்பதால் அமெரிக்கக் குழந்தை மருத்துவர்கள் சங்கம் அவ்வப்போது பேன்களை ஒழிப்பதற்குரிய யோசனைகளை வெளியிட்டு வருகிறது. பேன் தொந்தரவால் குழந்தைகளின் உடல்நலத்திற்குக் கெடுதல் எதுவும் வராவிட்டாலும், இந்தப் பேன்களால் வியாதி எதுவும் மற்றக் குழந்தைகளுக்குப் பரவும் அபாயம் எதுவும் இல்லையென்றாலும் தங்கள் குழந்தைகளின் தலையில் பேன்கள் இருந்தால் ஒருவித அருவருப்பு ஏற்படுவதால் பெற்றோர்கள் பேன்களைத் தங்கள் குழந்தைகளின் தலையிலிருந்து அகற்ற வேண்டும் என்று நிறைய முயற்சிகள் எடுக்கிறார்களாம். சிலர் தாங்களாக அதைச் செய்வதை விடுத்து பேன்களை அகற்றும் பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடுகிறார்களாம். இவர்கள் ஒரு குழந்தைக்கு ஒரு முறை பேன்களைத் தலையிலிருந்து நீக்க இருநூறு டாலர் பணம் வசூலிக்கிறார்களாம். இப்போது நியூயார்க் போன்ற பெரிய நகரங்களில் இது ஒரு தொழிலாகவே வளர்ந்துவிட்டிருக்கிறதாம். குழந்தைகளின், பெரியவர்களின் தலைகளிலிருந்து பேன்களை அகற்றுவதற்கு அமெரிக்கா வருடத்திற்கு நூறு கோடி டாலர் – அதாவது ஆறாயிரத்து முன்னூறு கோடி ரூபாய் இன்றைய அந்நியச் செலாவணிக் கணக்குப்படி – செலவழிக்கிறதாம்! பேன்களை அகற்றுவதற்குச் சந்தையில் கிடைக்கும் பல ஷாம்புகள் உட்பட பல வகையான மருந்துகளுக்காகும் செலவு, குழந்தை மருத்துவர்கள் பெற்றோருக்கு அறிவுரை வழங்கச் செலவழிக்கும் தொகை இதில் அடங்கும். அமெரிக்கா பணக்கார நாடல்லவா. இப்படிப்பட்ட சிறிய விஷயங்களுக்கும் நிறையச் செலவழிக்கிறது.
சிறு குழந்தைகளுக்கு வரும் பல வியாதிகளுக்குத் தடுப்பு மருந்துகள் மூலம் வியாதிகள் வருவதைத் தடுக்கலாம். ஆனால் பேன்களைத் தடுப்பது மிகவும் கஷ்டம். பேன்கள் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவனோடு வாழ்ந்து வருகின்றன. அவற்றை எளிதில் ஒழிக்க முடியாது. அதனால் அமெரிக்கக் குழந்தைகள் மருத்துவர் சங்கம் பெற்றோர்களுக்கு யோசனைகள் வழங்கி வருகிறது. குழந்தைகளின் தலைகள் அடிக்கடி ஒன்றுக்கொன்று உரசிக்கொள்வதால் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பேன்கள் பரவ சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றனவாம். அதனால் மற்றக் குழந்தைகளோடு தங்கள் சீப்புகள், தலைவாரப் பயன்படுத்தும் பிரஷ்கள் மற்றும் தொப்பிகளை மற்றக் குழந்தைகளோடு பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று குழந்தைகளுக்குக் கூறுமாறும் அடிக்கடித் தங்கள் குழந்தைகளின் தலைகளைப் பேன்கள் இருக்கிறதா என்று பார்க்குமாறும் யோசனை கூறுகிறது. அடிக்கடி இப்படிச் செய்வதால் பேன்களை ஆரம்பத்திலேயே ஒழிக்கும் வாய்ப்பும் மற்றவர்களுக்கு அவை பரவாமல் தடுக்கும் வாய்ப்பும் இருக்கிறதாகப் பெற்றோர்களுக்கு எடுத்துச் சொல்கிறார்கள்.
பேன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒருவர் தன் இரண்டு மகன்களுக்கும் அவர்கள் பள்ளியில் படிக்கும்போது பேன் தொந்தரவு இருந்ததாகவும் ஆனால் அவர்களுடைய பையன்கள் இந்தத் தொந்தரவிலிருந்து தப்பிவிட்டதாகவும் கூறுகிறார். சில தாய்மார்கள் குழந்தைகளின் தலையில் இருக்கும் பொடுகு, மணல் போன்றவற்றைப் பேன்கள் என்று எண்ணிவிடுகிறார்களாம். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பேன்கள் வந்தால் மிகவும் அருவருப்பாக இருக்கும் என்பதால் பேன்கள் வருவதற்கு முன்பே அவற்றைத் தடுக்கும் விதமாக ட்ரீட்மெண்டை ஆரம்பித்துவிடுகிறார்களாம். அப்படி ஒருபோதும் செய்யக் கூடாது என்று குழந்தைகள் மருத்துவர் சங்கம்.வலியுறுத்துகிறதாம்.
பல விஞ்ஞான முன்னேற்றங்களைக் கண்டுள்ள அமெரிக்காவால் கூட மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அவன் ரத்தத்தைச் சுரண்டி வாழும் (இருபத்து நாலு மணி நேரத்திற்கு மேல் மனிதனின் இரத்தத்தைக் குடிக்காமல் பேன்களால் உயிர் வாழ முடியாதாம்) பேன்களை இன்றுவரை ஒழிக்க முடியவில்லையே.
படத்திற்கு நன்றி
அமெரிக்கா என்பது எல்லாவற்றிலும் முன்னோடி என்பதன்று.
பேன் நீக்க நமது பழமையான வைத்தியமுறை
1. சீதாபழ விதைகளைப் பொடி செய்து எண்ணெயிலிட்டுத் தினமும் தேய்த்து வந்தால் போதும்.
2.தலைக்குக் குளிக்கும் வாசனைப் பொடியில் அரைக்கும்போதே சிறிது வேப்பிலை போட்டு அரைத்தாலே பேன் வராது.
இன்னொரு விஷயம் உள்ளது.
நெகடிவ் இரத்தப் பிரிவினரிடம் தலையில் பேன் தங்காது.அப்படி வந்தாலும்் உடனே போய்விடும்.