இணையத் தமிழே இனி…
-பா வானதி வேதா. இலங்காதிலகம்
சுணையற்று உறைந்தவர் மணை விட்டெழுகிறார்!
அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!
புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!
இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!
இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்குப்
பணையுடைப் பாட்டரும் காணாத சுரபி
பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி
கணைச் சூடாகாது வெல்லல் வாசி
தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்
பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்
ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து
வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை
பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்
கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்
நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்
யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!
கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,
கொட்டிய கலைகள், சமயம், அரசியல்
எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென
சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்த்
தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!
தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
எட்டும் இணையத் தமிழே இனி
கொட்டும் முரசு வெள்ளிடை மலை!
(மணை – அமரும் பலகை, சிறு பீடம்; புணை – தெப்பம்
பணை – பெருமை; கணைச் சூடு – நோய் வகை
சுணை – சுரணை, அறிவு, கூர்மை)