மீ. விசுவநாதன்

vallamai111-300x15011111
நினைவுச் சுமைகள் நிறைந்த மனமே
வினையைச் சுமக்கும் ; விரைந்து முனைந்து
எதையும் மறக்கும் இதயம் இருந்தால்
அதுவேதான் முக்தி அறி. . (111) 20.04.2015

என்ன குறையுள்ளே எல்லாமே ஆனந்தம் !
தன்னை அறிந்த தனிஒருவன் என்றும்
வெளியே திரியாதான் ! வெந்த பொருளாய்
எளியோனாய்க் காண்பா(ன்) எதிர். (112) 21.04.2015

புகழும் ஒருவித போதை விஷமே !
இகழும் செயலுள் எளிதாய் நுழைந்து
அதனுள் எதையோ அசைபோட்டுப் பார்க்கும்
அதனால் அதனை அழி. (113) 22.04.2015

கோபத்தில் மேனி கொதிக்கிறது ! வீணான
வாதப் பிரதிவாதம் வம்பெனவே ஏதேதோ
பேதம் வளர்ந்து பிரிகிறது நெஞ்சங்கள் !
சேதமிலாச் சொல்லே சிறப்பு. (114) 23.04.2015

புல்லருக்கும் கண்ணால் புரிந்தான் கருணையே !
நல்லுரையே நாரணன் ஞானமாய் எல்லோர்க்கும்
வில்லடித்தான் கோபுர மீதேறி என்பதன்றோ
கல்லில் பதிந்த கவி. (115) 24.04.2015
(இன்று ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி தினம்)

கோடை மழைபோல் கொடுக்கும் குணம்வரவும்
ஆடை அணிகலனில் ஆசை உடைபடவும்
ஓடுகிற எண்ணம் ஒடுங்கி அடைபடவும்
கூடுகிற நாளே குறி. (116) 25.04.2015

திருவிழாக் கொண்டாட்டம் தேரோட்ட மெல்லாம்
ஒருவராய் எல்லோரும் ஊரில் பெருமையாய்
வாழத்தான் வைத்தார்கள் ! மாறுபா டெல்லாமே
பாழ்மனத் தீமைப் பசி. (117) 26.04.2015

பூகம்பம் வந்து பொலபொலெனப் போனதே
வேகமாய்க் கட்டிடங்கள் ! வீடிழந்து பாவமாய்
மக்கள் தவிக்க மதமாற்றக் கூட்டமோ
இக்கணமும் செய்யுதே ஏய்ப்பு . (118) 27.04.2015

முடிந்தவரை நல்ல முறையில், தமிழைக்
கடித்துக் குதறாமல் கற்றுப் படித்தாலே
காலமெலாம் வாழுமே கற்பூரச் செந்தமிழ்!
ஞாலத்தில் தாய்மொழியே நன்று. (119) 28.04.2015

கூட்டைத் திறந்து குதித்துப் பறக்கின்ற
காட்டுக் குருவிக்குக் கட்டளைகள் போட்டே
அடக்க நினைக்கிறாய் ! ஆசை மனமோ
மடக்க நிமிரும்நாய் வால். (120) 29.04.2015

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *