நிர்மலா ராகவன்

மல்லிகையும், தாம்பத்தியமும்

உனையறிந்தால்1-11

குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களானாலும் பிரச்னைகள் எழாமல் இருப்பதில்லை. அப்படி ஒன்று இதோ!

கேள்வி: எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகப்போகின்றன. தினமும் வேலை முடிந்து வருகையில் நான் மல்லிகைச் சரம் வாங்கி வரவேண்டும் என்று மனைவி எதிர்பார்க்கிறாள். மல்லிகைப் பூவிற்கும், தாம்பத்தியத்துக்கும் அப்படி என்ன உறவு?

விளக்கம்: தந்தையோ, தாயோ வேலை நிமித்தம் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டுப் போகிறார்கள். திரும்பி வரும்போது, அவர்கள் தின்பண்டமோ, விளையாட்டுச் சாமானோ வாங்கிக்கொண்டு வந்தால் குழந்தைக்கு ஏற்படும் மகிழ்ச்சியே தனிதான். தான் அருகில் இல்லாதபோதும், தன்னைப்பற்றிய நினைவு வைத்திருக்கிறார்களே!

இதேபோல்தான் ஒரு பெண்ணும். கணவன் அலுவலகத்தில் பல பெண்களுடன் பழகக்கூடும். இருந்தாலும், தன் நினைவாகவே இருந்திருக்கிறார் என்ற அற்ப ஆறுதல்.

இத்தகைய பெண்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள் என்றே தோன்றுகிறது. கணவன்மேல் ஒருவித ஆக்கிரமிப்பு.

என் உறவினர் பெண் வேறு மாதிரி சொன்னாள். எப்பொழுதாவது கணவர் மல்லிகைச் சரம் வாங்கி வந்தால், அன்று அவளை நாடுகிறார் என்று அர்த்தமாம். வாய்விட்டுச் சொல்ல முடியாததை குறிப்பால் உணர்த்துகிறாராம்!

இந்திப் படங்களிலும், சில தமிழ்ப் படங்களிலும், நடனப் பெண்கள் இருக்குமிடத்தில் உட்கார்ந்திருக்கும் வில்லன் தன் கரத்தில் மல்லிகைச் சரம் சுற்றியிருப்பான். அடிக்கடி அதை முகர்ந்து பார்த்துக்கொள்வான். ஒரு இயந்திரியத்தைத் தன் வசப்படுத்தினால், மற்றவைகளும் நன்கு செயல்படும் என்று காட்ட எண்ணினார்களோ பட இயக்குனர்கள்?! (சிலருக்கோ, மல்லிகையின் நறுமணம் தலைவலி உண்டாக்குகிறதே?)

தாம்பத்தியமே சிக்கல்தான்.

கதை 1; ஒரு நண்பர், `உங்களிடம் ஒரு விஷயம் கேக்கணுமே!’ என்று தயங்கித் தயங்கி ஆரம்பித்தார்.
அவருடைய நண்பர் ஒருவர் வருத்தமாக இருந்தாராம். நண்பர்கள் சிலர் என்ன ஆயிற்று என்று கேட்க, மனைவிக்கு தாம்பத்திய சுகத்தில் விருப்பம் போய்விட்டது என்றார்.

நான்: `உங்கள் நண்பருக்கு என்ன வயது? `நாற்பத்து ஐந்து!’
நண்பர்களெல்லாம் தமக்கும் அப்படி ஒரு நிலை வந்துவிடுமோ என்று அஞ்சியவர்களாய், ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு, `கொஞ்சம் அல்வாவும், மல்லிகைப் பூவும் வாங்கிப்போ!’ என்று அறிவுரை கூறியிருக்கிறார்கள்.

மகிழ்ச்சியுடன் போனவர், சிறிது நேரத்தில் திரும்பி வந்துவிட்டார், முகத்தைத் தொங்கப் போட்டபடி.
`ஏங்க பொண்ணுங்க இப்படி, புரிஞ்சுக்க முடியாதபடி, இருக்காங்க?’ என்று என் நண்பர் என்னைக் கேட்டார்.

எல்லாப் பெண்களையும் புகழ்ச்சியாலோ, பரிசுப்பொருட்களாலோ வழிக்குக்கொண்டுவர (வீழ்த்திவிட?) முடியாது.

நாற்பதுக்கு மேல் ஆன பெண்ணிற்கு உடல் உபாதைகள் இருக்கலாம். பெண் மருத்துவரைப் பார்த்தால் விளங்கும். இல்லை, கணவன்மேல் ஏதாவது மனத்தாங்கலாக இருக்கலாம்.

கதை 2: கணவன் தமிழ்ப்படங்களில் `கவர்ச்சி நடனம்’ என்ற பெயரில் அரைகுறை ஆடைகளில் பெண்கள், ஆண்கள் மனத்தைத் தூண்டவேபோல் இடுப்பையும், மார்பையும் ஆட்டும் காட்சிகளைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் வருகிறார். அது தனக்கு வெறுப்பாக இருக்கிறது என்று வலிய வந்து என்னிடம் சொன்னார் ஒரு மாது. `விரதம்,’ என்ற சாக்கில், தனியே பாயில் உறங்குவாராம்.

கணவன் மனைவிக்குள் எந்த காரணத்திலாவது இடைவெளி ஏற்பட்டால், வெளிப்படையாகப் பேசுவதுதான் ஒரே வழி. நிறைய கத்தலும், அழுகையும் தவிர்க்க முடியாதது. ஆனால், பலன் கிடைக்கும்.

கதை 3: கணவன் தன்னை நெருங்குவதைத் தவிர்த்தாள் அந்த இளம்பெண். ஓயாமல் குற்றம் கண்டுபிடிப்பவன் தன்மேல் இன்னும் அதிகமாகக் குற்றம் கண்டுபிடித்து விடுவானோ என்ற பயம்தான் அவளுக்கு.

`இரவு எட்டு மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிடுகிறாள்!’ என்று அக்கணவன் என்னிடம் குறைபட்டுக்கொண்டான். `ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், என்னைக் குறை சொல்லாதே!’ என்று அடிக்கடி மனைவியை மிரட்டுவதாகவும் சொன்னான்.

இருவருக்குமே நிம்மதி இல்லை. இத்தனைக்கும், காதல் திருமணம்!
அப்பெண் பாலியல் வதைக்கு ஆளானவள். ஆண்கள் என்றாலே ஒருவித மிரட்சி. இதைக் கணவரிடம் தெரிவிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள்.

கணவனும் அடிக்கடி, அவளை `முட்டாள்,’ என்று பழிப்பதைக் கண்டேன், அவர்கள் இல்லத்தில் சில தினங்கள் தங்கியிருந்தபோது.

ஏற்கெனவே தான் ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்குகிறவள்! அவளை இன்னும் மட்டம் தட்டினால்?

பழியை அவன்மீது திருப்பினேன். வேண்டுமென்றே அவளுக்குப் புரியாத விதத்தில், பெரிய பெரிய வார்த்தைகளை உபயோகித்து ஆங்கிலம் பேசுவது, பழிப்பது எல்லாவற்றையும் சுட்டிக் காட்டினேன்.
அவனுக்கு என்மேல் காட்டம். தான் ரொம்ப உயர்ந்தவன் என்பதுபோல் மனைவியை ஆட்டுவித்துக்கொண்டிருந்தவன், அல்லவா?

ஆனாலும் அவன் தன்னை மாற்றிக்கொண்டான். அடுத்த ஆண்டே, தனக்குக் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் என்னிடம் தெரிவித்தாள் அப்பெண்.

அவன் மல்லிகைப்பூ வாங்கி வந்து அவளை மயக்கினானா என்று தெரியவில்லை. எது எப்படியோ, தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தாம்பத்தியம் வலுவாயிற்று.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *