பவள சங்கரி

கருணை மழை பொழியும் கருகாவூர் கற்பக நாயகி!

11698584_861438480611445_8838361490820937760_n
திருக்கருகாவூர் – திருத்தாண்டகம்

குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. – [திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்
(ஆறாம் திருமுறை)]

முத்தி லங்குமுறு வல்லுமை யஞ்சவே
மத்த யானைமறு கவ்வுரி வாங்கியக்
கத்தை போர்த்தகட வுள்கரு காவூரெம்
அத்தர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.[திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
திருக்கருகாவூர் தேவாரத் திருப்பதிகம் – (மூன்றாம் திருமுறை 46வது திருப்பதிகம்)]

நம் நாட்டில் மூவரின் பாடல் பெற்று சிறப்புற்று விளங்கும் தேவாரத் திருத்தலங்கள் மொத்தம் 275. அவற்றுள் திருக்கருகாவூர் என்ற இத்திருத்தலம் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலம்.

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்

திருக்காருகாவூர் எனும் இத்திருத்தலத்தை, திருக்களாவூர், முல்லை வனம், மாதவி வனம், கர்ப்பபுரி என பல பெயர்களில் நூல்கள் குறிக்கின்றன. முல்லைக்கொடியை தல விருட்சமாகக் கொண்டதால் இத்தலம் முல்லைவனம் என்றும், இறைவன் முல்லை வன நாதர், என்றும் மாதவீவனேசுவரர் என்றும் அழைக்கப்பெறுகிறார்.

நாற்புறமிருந்தும் எளிதாக வந்துபோகும் வகையில், சோழ வள நாட்டின் செழிப்பான தஞ்சை மாவட்டத்தில், பாபநாசம் எனும் ஊரின் தெற்கே ஆறு கிலோமீட்டர், கும்பகோணத்திற்கு தென்மேற்கில், வடக்கில் 20 கிலோ மீட்டர் மற்றும் சாலியமங்கலத்திற்கு வடக்கில் 10 கிலோமீட்டரில் இத்திருத்தலம் அமையப் பெற்றுள்ளது. தஞ்சாவூருக்கு வடக்கில் 20 கிலோமீட்டரில், வெட்டாற்றின் தென்கரையில் இக்கோவில் உள்ளது.

இக்கோவிலில் சிவபெருமான், கற்பக விநாயகர் என அழைக்கப்பெறும் தல விநாயகர் , நந்தி என மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும், சுவாமி ஆலயத்தின் பின்புறம் இருக்கும், லிங்கோத்பவரின் குடவரையில் அர்த்தநாரீசுவரர், அமைந்திருப்பது சிறப்பு. முல்லை வனத்தில் சுயம்புவாக, புற்றுருவில் தோன்றியதால் இலிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்து, வடுவை ஏற்படுத்தியிருப்பதை இன்றும் காணலாம். இறைவன் இன்றும் புற்றுருவிலேயே காட்சியளிப்பதால், வழமையான அபிடேகங்கள் ஏதுமின்றி, புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.

10665717_861438130611480_5514288486832340212_n

இம்மண்ணில் தோன்றும் அனைத்துயிர்களின் ஆதியாய், கருவைக் காத்தருளும் கர்ப்பரட்சகியாய், கருகாத்த நாயகியாய், கரும்பானையாள் எனும் அன்னையாய் அழகே உருவாய் எழுந்தருளியிருக்கிறார். பிள்ளைப்பேறு வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருளுபவள் அன்னை. அன்னையின் திருவடியில் வைத்து பூசித்து வழங்கப்படும் பசு நெய் உண்டவர்களுக்கு பிள்ளை வரம் கிடைப்பதாக பக்தர்கள் தீவிர நம்பிக்கை கொண்டுள்ளனர். எண்ணெய் வைத்து பூசை செய்து, அதை கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் பூசிவர சுகப்பிரசவம் ஆகிறது என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.

இங்கு உள்ள மூலவராகிய முல்லைவனநாதர் சந்நதி, கர்ப்பகரட்சகி அம்மன், இடையில் அமைந்துள்ள ஆறுமுகர் சந்நதி ஆகிய மூன்றும் ஒரே வரிசையில் உள்ளபோது தரிசிப்பது பெரும் பேறு என்கின்றனர். அதாவது, சோமாசுகந்தர் அமைப்பில் இருக்கும் மூன்று சந்நதிகளையும் ஒரு சேர வலம் வந்து தரிசிப்பவர்களுக்கு. புத்திரப் பேறும், கருவை நன் முறையில் காத்து அருளும் பேறும் வாய்க்கப் பெறுவது உறுதி. அதற்கான அமைப்பில் சுற்றுப் பிரகாரம் இருப்பதும் சிறப்பு. கோவிலுக்கு முன்னால் அமைந்துள்ள பாற்குளம் காமதேனு என்ற தெய்வப் பசு தம் காலால் உருவாக்கிய குளம் என்றும் சிவராத்திரிக் காலங்களில் பெருமான் இங்கு தீர்த்தம் அருளுவதாகவும் நம்பிக்கை உள்ளது.

11692672_861439787277981_6858674562650678376_n

கோவில் அமைப்பு : மிகப் பழமையான இக்கோவில் நான்கு வீதிகளுக்கு இடையில் அழகான வடிவமைப்பில் அமைந்துள்ளது. 460 அடி நீளமும், 284 அடி அகலமும் உடையது. கோவிலின் தென்புறம் நுழைவு வாயிலும், கிழக்கு புறம் இராசகோபுரமும் அமைந்துள்ளது. ஆலயத்தினுள் நுழைந்தவுடன் வடக்குபுறம் வசந்த மண்டபம் உள்ளது. அடுத்து முதலில் உள்ள பெரிய பிரகாரத்தில் முல்லைவனநாதரும், இடப்பக்கம் கர்ப்பகரட்சாம்பிகை கோவிலும் தனித்தனி பிரகாரத்தில் உள்ளது.

ஈசனின் ஆலயத்தின் முன்னால் கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவையும், தென்கிழக்கில் மடப்பள்ளி, அறுபத்து மூன்று நாயன்மார்களும், வட கிழக்கில் நடராசர் சபா முன் மண்டபமும், யாக சாலையும் இருக்கின்றன. மேற்புறம் சுவாமிக்கு வடகிழக்கில் நடராசர் சந்நதியும், நவக்கிரகங்களும், தென்பக்கம் சோமாசுகந்தர் சந்நதியும், அருகில் தென்கிழக்கில் தல விநாயகர் கற்பகப் பிள்ளையார் சந்நதியும் உள்ளன. உட்பிரகாரத்தில் நடராசருக்கு எதிரில் சேக்கிழார், சந்தனாச்சாரியார், நால்வர் சந்நதிகளும், தென்புறம் தட்சிணாமூர்த்தி, நிருதிவிநாயகர் சந்நதிகளும், மேல்புறம் அர்த்தநாரீசுவரர், மகாலட்சுமி சந்நதிகளும், வடபுறம் ஆறுமுகர், பிரம்மன், துர்க்கை, சண்டேசுவரர் மற்றும் தல விருட்சமாகிய முல்லைக்கொடியும் அமைந்துள்ளன.

துலாபாரப் பிரார்த்தனை மற்றும் தங்கத்தொட்டில் பிரார்த்தனை ஆகியவை இங்கு பிரசித்தம்.

இத்திருக்கோவில் கல்வெட்டில், திருக்கருகாவூர் , மகாதேவர் திருக்கருகாவூர் ஆழ்வார், திருமுல்லைவனமுடைய மகாதேவர் என்று குறிக்கப் பெற்றுள்ளது.

திருக்கருகாவூர் கல்வெட்டுகள் குறித்து குடவாயில் பாலசுப்பிரமணியன் எம்.ஏ., எம்.பில். அவர்களின் தொகுப்பு:

இத்திருக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இதுவரை 31 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவை முதல் பராந்தக சோழன் காலத்திலிருந்து பிற்காலச் சோழர் ஆட்சிக்காலம் முடியும் வரை உள்ள கால எல்லையில் வெட்டுவிக்கப் பெற்றவையாகும். இத்திருக்கோயில் முதல் பராந்தக சோழனின் காலத்தில் (கி.பி. 907 – 953) கற்றளியாக புதுப்பிக்கப் பெற்றதோடு அப்பெருவேந்தனின் 17 கல்வெட்டுகளும் அங்கு சாசனமாக இடம் பெற்றுள்ளன. இவற்றை அடுத்து உத்தம சோழனின் கல்வெட்டு ஒன்றும், இராச இராச சோழனின் கல்வெட்டுகள் இரண்டும், விக்கிரம சோழனின் கல்வெட்டு ஒன்றும் இராஜகேசரி என்ற பட்டப் பெயர் பொறிக்கப்பட்ட சோழன் கல்வெட்டுகள் நான்கும், பரகேசரி என்ற பட்டத்துடன் உள்ள கல்வெட்டுகள் மூன்றும் உள்ளன.

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் – கருகாவூர் என்று பெயர் பெற்றது என்பது போன்று புராணக் கதைகள் அதிகம் இருந்தாலும், தட்ச சாபத்தால் இன்னலுற்ற சந்திரன் ஒரு பங்குனி மாத பௌர்ணமியில் இத்தலத்தில் சிவபூசை செய்து நற்கதி அடைந்ததன் விளைவாக, ஒவ்வொரு பங்குனி பௌர்ணமி நாளிலும் நிலவொளி இறைவன் திருமேனியில் பிரகாசிப்பதைக் காணலாம் என்பது ஆதாரமாக விளங்குகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் பெற்று நன்மக்கட்பேறு பெற, கீழ்கண்ட இந்த சுலோகத்தை 108 முறை பாராயணம் செய்வது நலம்.

ஹிமவத்யுத்தரே பார்ஸ்வே சுரதா நாம யலிஷீனி
தஸ்யா ஸ்மர்ண மாத்ரேணா விசல்யா
கர்ப்பிணிபவேது

திருமணம் கூடிவர, குழந்தை உண்டாக பிரார்த்தனை சுலோகம்:

தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரியபாமினி
விவாக பாக்யம் ஆரோக்யம்
புத்ரலாபம்ச தேஹிமே
பதிம் தேஹி சுதம் தேஹி
சௌபாக்யம் தேஹிமே சுபே
சௌமாங்கல்யம் சுபம் ஞானம்
தேஹிமே கர்ப்பரஷகே
காத்யாயிணி மஹாமாயே
மஹாயோகின்யதீஸ்வரி
நந்த கோப சுதம் தேவி
பதிம் மே குருதே நம

சுகப்பிரசவம் வேண்டி

ஹே சங்கர ஸ்மரஹர பிரமதாதி நாதரி
மன்னாத சாம்ப சசிசூட
ஹரதிரிசூலின் சம்போஸூகபிரசவ க்ருத்பவமே
தயாளோ ஹேமாதவி வனேச பாளையமாம் நமஸ்தே.

ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி
ஓம் கர்ப்ப ரக்‌ஷாம்பிகையே போற்றி
ஓம் கருகாவூர்தேவியே போற்றி
ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “திருக்கருகாவூர் – தல புராணம்

  1. அன்பிற்கினிய சகோதரி பவளா அவர்களுக்கு,

    வணக்கம்.  கருணையே வடிவான அம்பாளின் தலபுராணம் பற்றிய பதிவுக்கு நன்றி.

    அம்பாளின் கனிவினைப் பதிய ஒரு பதிகத்தோடு வருகிறேன்.

    அன்புடன்
    சுரேஜமீ

  2. காப்பு

    தான்தோன்றித் தானாகித் தாயோடு தானேகித்
    தாய்சேயைக் காக்கும் தயாளா – கருகாவூர்
    தாயவளைத் தேடிவந்து தாழ்பணிவர் வாழ்வினிலே
    தான்வேண்டும் யாவையும் தா!

  3. வெகு அருகில் நாங்கள் பல வருடங்கள் இருந்திருந்த போதிலும்

    பலருக்கு அங்கு சென்று வழி படுங்கள் என்று சொல்லியிருந்த போதிலும்

    நாங்கள் இதுவரை இந்த கோவிலுக்கு சென்றதில்லை.

    இந்தக்கோவிலின் சிறப்பு பற்றி விளக்கியமைக்கு நன்றி.

    இதை நான் எனது வலையில் பகிர்கிறேன்.

    சுப்பு தாத்தா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *