நிர்மலா ராகவன்

அறிவுத்திறன் வளர

உனையறிந்தால்1-11
கேள்வி: அரைகுறையான கல்வித்திறனுள்ள குடும்பத்தினர் குழந்தைகளின் அறிவுத்திறன் வளர பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதுமா?

விளக்கம்: மனிதனின் மூளை கருவிலிருக்கும்போதே வளர ஆரம்பிக்கிறது. நான்கு வயதுக்குள் 80% வளர்ந்துவிடுகிறது.

கருவிலிருக்கும் குழந்தை எப்படி, எல்லாவிதத்திலும் சிறந்து விளங்க முடியும் என்பதை ஆராய, ஒரு விஞ்ஞானப்பகுதியே இருக்கிறது, FETOLOGY என்ற பெயரில்.

கருவிற்கு நன்கு அறிமுகமான ஒரு ஒலி தாயின் இருதயத் துடிப்பு. ஆகவே, பயம், அதிர்ச்சி, கோபம் முதலிய எதிர்மறை உணர்ச்சிகளுக்குத் தாய் ஆளாகும்போது, அவளது நாடித் துடிப்பு அதிகரிக்க, கருவும் அதே நிலைக்குத் தள்ளப்படுகிறது. அவ்வளவு ஏன், தந்தை தாயுடன் உடலுறவு கொள்ளும்போது வன்முறையைப் பிரயோகித்தால், கருவுக்குள் உண்டாகும் அதிர்ச்சி ஆயுள் பூராவும் அதன் குணத்தைப் பாதிக்கும்.

வன்முறையில் ஈடுபடும் குற்றவாளிகள் இம்மாதிரி, பிறக்குமுன்னரே அதைத் தாயின்வழி தாமும் அனுபவித்திருப்பார்களாம்.

கதை: அனாதை ஆசிரமத்தில் இருந்த ஒரு குழந்தையை எவ்வளவோ அன்புடன் ஓர் ஏழைத் தாய் வளர்த்தும், குண்டர் கும்பலில் சேர்ந்து, `நான் பிறரைக் கொல்லுமுன் அவர்கள் கண்ணில் தோன்றும் பயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது!’ என்று என்னிடம் கூற அதிர்ந்தேன். அவன் தாய் அவனை அடித்ததே கிடையாது என்றான். அவனுக்குள் பின் எப்படி இவ்வளவு குரூரமான புத்தி வந்தது என்று யோசித்தேன். `கருவே கதையானால்’ என்ற சிறுகதை பிறந்தது.

ஒரு குழந்தையின் மூளையும் பிற பாகங்களும் கருவிலேயே வளர ஆரம்பித்து விடுகின்றன. அதாவது, எதையும் புரிந்து கொள்ளக்கூடிய திறன், உணர்வுகள் யாவும் குழந்தை தனி உருப்பெற்று பிறக்குமுன்னரே அதற்கு உண்டு.

கேட்கும் திறன் இருப்பதால், ஒரு கர்ப்பிணி நிறையப் புத்தகங்கள் படிக்கும்போது, புத்தகத்தின் பக்கங்கள் திருப்பப்படும் ஓசை கருவிற்கும் பழகிப்போவதால் அது விரும்பத்தக்க ஒலியாக ஆகிவிடும்.

சிறுவருக்கான கதையை தாய் திரும்பத் திரும்ப உரக்கப் படித்தால், அது கருவின் மனதில் படியும். பிறந்தபின், அதே கதை திரும்பப் படிக்கப்படும்போது, குழந்தை அதை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப பால் குடிப்பதை உணர முடியும் என்கிறார் டேவிட் சேம்பர்லின் (1994) என்கிற கரு மனோதத்துவ நிபுணர். வேறு புதிய கதைகளில் இக்குழந்தை ஆர்வம் காட்டுவதில்லையாம்.

ஆறு மாதங்களாவது தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும். வியாதிகளும் எளிதில் அண்டாது. (பால் அதிகம் சுரக்க, கர்ப்பிணிப்பெண்கள் பூண்டை வதக்கிச் சாப்பிடலாம். அந்த வாசனை பிடிக்காதவர்கள் பாதம்பருப்பை ஊற வைத்து, தோலை நீக்கிச் சாப்பிடலாம்).

மூளைக்குப் போதிய உந்துதல் கிடைக்காதபோது சிறு குழந்தைகள் அழுதபடி இருப்பார்கள். இது தாயின் கவனத்தைக் கவர, அல்லது பொழுதுபோக. `ஏன் இந்த அசட்டு அழுகை?’ என்று அவர்களைத் திட்டி என்ன பயன்?
எந்த சூழ்நிலையாக இருந்தாலும், அதை அவர்களுக்கு விளக்கலாம்.

கதைகள்: என் பேரனுக்கு இரண்டு மாதங்களாக இருந்தபோது, ஒரு பேரங்காடியில் தள்ளு வண்டியுடன் லிஃப்டுக்காகக் காத்திருந்தேன். புதிய அனுபவம் எவருக்குமே சற்று அச்சத்தை விளைவிக்கும், இல்லையா? அதனால், `இப்போ உள்ளே போகப்போறோம். கொஞ்சம் குலுங்கும். பயப்படாதே!’ என்று கண்ணை மூடிக்கொண்டிருந்த குழந்தையிடம் சொன்னேன்.

நான் தானே பேசிக்கொள்வதாக நினைத்து ஒருவர் என்னைப் பார்த்தார். பிறகு குழந்தையைப் பார்த்தார். `இதனுடன் என்ன பேசுகிறாய்? பைத்தியமோ?’ என்று என்னை மீண்டும் அருவருப்புடன் கூடிய பார்வை! நான் லட்சியமே செய்யவில்லை.

வேறொரு முறை நாங்கள் வெளியூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தோம். என் மாப்பிள்ளை தன் எட்டு மாத மகனைத் தூக்கிக்கொண்டிருந்தார். நான் குழந்தையிடம், `நிறைய பேர் அங்கேயே தங்கப்போறா. அதுக்காகத்தான் படுக்கை, பெட்டியெல்லாம் தூக்கிண்டு போறா, பாரு!’ என்று விளக்கினேன். அப்பாவின் கையிலிருந்து என்னிடம் தாவினான் பேரன்.

குழந்தைக்குப் புரியுமா என்ற சந்தேகமே இருக்கவில்லை. என் குழந்தைகளுடன் அப்படித்தான் பேசினேன். உடனுக்குடனே பதில் சொல்லத் தெரியாவிட்டாலும், மூன்று வருடங்கள் கழித்து, பேசும் திறன் வந்ததும், `அன்னிக்கு நீலப்புடவை கட்டிண்டு இருக்கறச்சே சொன்னியே..?’ என்று ஏதாவது சந்தேகம் கேட்பார்கள்.

எத்தனை நாட்களுக்குத்தான் வீட்டிலுள்ளவர்களே அறிவைப் போதிக்க முடியும்? தம் வயதையொத்த பிற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும்போது எளிதில் புரியும், சுவாரசியமாகவம் இருக்கும்.

ஆணோ, பெண்ணோ, படித்தால்தான் வாழ்வில் முன்னேற முடியும், மாற்றங்களை ஏற்கும் மனப்பக்குவம் வரும், ஏமாற்றத்தினால் விளையும் அதிருப்தி மற்றும் குற்றங்களைத் தவிர்க்கலாம் என்றெல்லாம் அனேகமாக எல்லா நாடுகளும் இப்போது புரிந்து கொண்டிருக்கின்றன.

வட அமெரிக்காவில் ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொள்ளாத குடும்பங்களில் பிறக்கும் பிள்ளைகள் படிப்பிலும், சமூகத்திலும் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் என்று இவர்களை முன்னுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஒரு மாநிலம் தாய்மார்களுக்கு ஆங்கிலப் புத்தகங்களை இலவசமாக வழங்கியது.

எட்டு மாதங்களுக்குப்பின், குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு, தாய்மார்கள் அப்புத்தகங்களைப் புரட்டுவார்கள். (அவர்களுக்கு ஆங்கில மொழி தெரியாது).

வீட்டிலுள்ள பிறர் என்ன செய்தாலும், அதை அப்படியே பிடித்துக்கொள்ளும் குழந்தை தானும் புத்தகத்தைத் தொடுகிறது. வாயிலும் வைத்துக்கொள்கிறது, அது தின்னத் தகுந்ததுதானா என்று. எதையும் வாயில் போட்டுப்பார்ப்பது குழந்தைகளின் பிறவிக் குணம்! ஓரிரு மாதங்களில் தானே புத்தகத்தைக் கையில் எடுத்து, ஏதாவது ஒரு படத்தையே உற்றுப் பார்க்கிறது.

இதற்காக, அமெரிக்காவில் `தலையணைப் புத்தகம்’ என்று பருமனாக, துணியால் புத்தகங்கள் செய்கிறார்கள். காகிதத்தைப்போல் எளிதில் கிழியாது. அழுக்கானால் துவைக்கலாம். பூ, பழவகைகள், மிருகக் காட்சிசாலை, குட்டி மிருகங்கள் என்று, குழந்தைகளுக்குப் பிடித்த படங்கள் பெரிய அளவில். அவற்றின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.

படிக்காத பெண்களின் குழந்தைகள்கூட புத்திசாலிகளாக வளர வழிகள் இருக்கையில், படித்த நாமும் ஒவ்வொரு குழந்தையின் திறன்களையும் முழுமையாக வளர்க்க வேண்டாமா?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *