நான் அறிந்த சிலம்பு – 173
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 05: அடைக்கலக் காதை
காவல் காடும் அகழியும்
வளைந்த இயந்திர வில்லும்
கரிய விரல் கொண்ட
குரங்கு போன்ற தோற்றத்தில்
வந்தவரைக் கடிக்கும் பொறியும்
கல்வீசும் கவணும்
மதில்வழி வரும் பகைவர் மீது ஊற்றச்
சூடாக வைக்கப்பட்டிருந்த நெய்யும்
செம்பை உருக்கும் கலன்களும்
இரும்பைக் காய்ச்ச வைக்கப்பட்ட உலைகளும்
கல் இட்டு வைத்துள்ள கூடைகளும்
அகழியில் ஏறவருபவர்களைப் பிடிக்கும்
தூண்டில் வடிவக் கருவிகளும்
எதிரியின் கழுத்தை முறிக்கும் சங்கிலிகளும்
ஆண்டலைப் பறவை வடிவில்
அமைக்கப்பட்டுள்ள அடுப்புகளும்
அம்புகளை ஏவும் அறைகளும்
எதிர்ப்பவர் தலையைத் திருகி எறியும் பொறிகளும்
மதில் உச்சிக்கு வருபவரின் கையைத் துளைக்கும்
ஊசிப் பொறிகளும்
பகைவர் கண்ணைப் பறிக்கும்
மீன்கொத்தி போன்ற பொறிகளும்
உடல் சிதைக்கும் பன்றிப் பொறிகளும்
மூங்கில் போன்ற பொறிகளும்
கதவுக்கு வலிமை சேர்க்க
உள்வாயிலில் இடும் மரங்களும்
கதவுக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட
கணைய மரங்களும்
எறிகோல் குத்துக்கோல் ஈட்டி
இன்னும் சில கருவிகளும் அமைந்திருந்தன.
நாள்தோறும் பகைவரை வென்று
உயர்ந்த கொடிகள் அசையும்
பலதரப்பட்ட பொறிகள் அமைந்த
அம்மதிலின் வாயிலைக் கடந்து
இடைக்குலப்பெண் மாதரி
தன் அடைக்கலத்தைப் பாதுகாத்திட வேண்டும்
என்ற கொள்கையுடையவளாய்த்
தன் மனையை அடைந்தாள்.
(அடைக்கலக் காதை முற்றியது; அடுத்து வருவது கொலைக்களக் காதை)
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 206 – 219