இதுதான் வாழ்க்கை. இதுதான் பயணம்…. இவர் போல் வாழ இனி யார் வருவார்?
சுரேஜமீ
எம்.எஸ்.வி. எனும் இசை மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்றிருக்கிறது!
என்ன சொல்ல? எதைச் சொல்ல? வாழ்வில் எத்தனையோ பேருக்கு ஒளி கொடுத்த விளக்கு, இப்போது விண்ணுக்குச் சென்று அங்கிருந்து இந்த அகிலத்திற்கே ஒளி காட்டும் விண்மீனாக பட்டொளி வீசப்போகிறது என்பதில் எள்ளவும் ஐயமில்லை!
சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்ணதாசன் சம்பந்தப்பட்ட விழாவில் பேசுகிறார். அதில் அவருடைய கனவை வெளிப்படுத்துகிறார். ஒரு திரைப்படத்திற்கான கதை விவாதிக்கப்படுகிறது. கவியரசர் மற்றும் பலர் களத்தில் இருக்கிறார்கள். நடிகர், நடிகையர், கதை, திரைக்கதை, இயக்கம், பாடல்கள் எல்லாம் முடிவாகிக் கடைசியில் இசையமைப்பாளர் யார் எனும் கெள்வி எழ,
கவியரசர் தம்பி விசுவைப் போடலாம் என்கிறார். அதற்குப் பதில் உடனே வருகிறது…..அவர் இன்னும் இங்கு வரவில்லை என! உடனே கவியரசர் கேட்டாராம்….அவன் இன்னுமா வரவில்லை? அப்படியென்றால் இந்தப் பணியைத் தள்ளி வையுங்கள்….அவன் வரட்டும் என்று!
அந்த அளவிற்குக் கவியரசரும், மெல்லிசை மன்னரும் இணைபிரியாத இரு உடல்கள் ஊருயிராகத் திகழ்ந்தவர்கள் என்பது திரைத்துறையில் இருந்தவர்கள் அறிவார்கள்!
இதோ…..இன்று அதிகாலை அங்கே ……கவியரசர்…….இரு கரம் நீட்டி அழைக்க…..இசை அரசர்…..இதயம் இணைந்திருக்கிறது!
இறைவா……மண்ணுலகம் என்ன செய்யும் இனி?
இதுதான் வாழ்க்கை …இதுதான் பயணம்………இவர் போல் வாழ இனி யார் வருவார்?