பொருளாதாரத்தின், புதிய வளர்ச்சி வங்கி

0

பவள சங்கரி

தலையங்கம்

brics-bankபன்னாட்டு நிதியமான ஐ.எம்.எப், மற்றும் உலக வங்கி ஆகியவைகளுக்கு மாற்று வங்கியாக செயல்படும், ‘புதிய வளர்ச்சி வங்கி’ திறப்பு விழா, சமீபத்தில் சீன வர்த்தக நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகரில் நடந்தேறியது. பிரிக்ஸ் நாடுகளான, பிரேசில், உருசுயா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து இந்த வங்கியை துவக்கியுள்ளது. இவ்விழாவில் காமத் , சீன நிதியமைச்சர் லூ ஜிவெய் மற்றும் ஷாங்காய் மேயர் யாங் சியாங் ஆகியோர் கலந்துகொண்டனர். சென்ற ஆண்டு (2014) ஜூலை மாதம் பிரேசில் நாட்டின் போர்டலிசா நகரில் நடந்த பிரிக்ஸ் நாடுகளின் முதல் நாள் உச்சி மாநாட்டில் இறுதி வடிவம் பெற்ற, வங்கியை உருவாக்கும் இத்தீர்மானத்தின்படி ‘புதிய வளர்ச்சி வங்கி’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் நிர்வாகத்தில் பிரிக்ஸ் நாடுகளான ஐந்து நாடுகளும் சம பங்கு வகித்திருக்கும். உறுப்பினர்களின் கோரிக்கைகளை கவனத்துடன் கேட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவிருக்கும் இந்த வங்கிக்கு சிறந்த முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டி இதன் முதல் தலைவரான இந்தியாவைச் சேர்ந்த, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் உயரதிகாரியான கே.வி.காமத் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிர்வாக முறைகளில் புதிய முறைகளைக் கடைபிடிக்கவுள்ளதாகக் கூறிய சீன நிதியமைச்சர் லூ ஜீவெய் , இந்த புதிய வளர்ச்சி வங்கி ஏற்கெனவே இயங்கி வரும் பன்னாட்டு நிதியமைப்புகளுக்கு ஒரு ஆரோக்கியமான மாற்றாகவும் செயல்படும் என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் தொடக்கத்தில் 50 பில்லியன் டாலர்களுடன் தொடங்கப்படும் இந்த வங்கி அடுத்த 2 ஆண்டுகளில் 100பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப்படும் வகையில், வளரும் நாடுகளில், தேவையுள்ள நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளுக்கு இந்த வங்கி பெரிதும் உதவக்கூடிய வகையில் செயல்படும் என்றார். பிரிக்ஸ் நாடுகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூட்டு நிதித் திட்டத்துக்காக உருவாக்கப்பட்டதே இந்த வங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தங்கள் உள்நாட்டு திட்டங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளுக்காகத் தேவைப்படும் பெரியளவிலான நிதிகளை பன்னாட்டு நிதியம் அல்லது உலக வங்கியிடம்தான் கடன் வாங்கவேண்டி உள்ளது. கடன் பெறுவதில் சில நேரங்களில் அமெரிக்காவின் நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிய இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த வங்கி உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுத்திருக்கிறது. உலக பொருளாதாரத்தில் 2-வது இடத்தில் இருக்கும் சீனா, முதல் 20 ஆண்டுகளுக்கு இந்த வங்கி நிர்வாகத்திற்கு தலைமை ஏற்க விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை முற்றிலும் ஒழிக்க முடியும் என்றும் உலக வங்கி தெரிவித்து உள்ளது.

இந்த வங்கியில் மொத்த மூலதனத்தின் பெரும் பகுதி, சீனா மற்றும் இந்தியா அளித்துள்ளனர். இந்த வங்கி தெற்காசிய நாடுகளை இணைத்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்புவோம். ஐரோப்பிய நாடுகள் இணைந்து யூரோவை உருவாக்கியது போன்று தெற்காசிய நாடுகள் அனைத்தும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த வங்கி மூலமாக பணப்பரிமாற்றத்திற்கு ஒரு பொது காரணியை உருவாக்கினால், தெற்காசிய நாடுகளும், கிழக்காசிய நாடுகளும் மிகுந்த வளர்ச்சியடைந்து ஐரோப்பிய பொருளாதாரத்திற்கு ஒரு மாற்று பொருளாதாரமாக உருவெடுக்கும். சந்தை மதிப்பிலிருந்து டாலர் மற்றும் யூரோவின் மதிப்புகளும் சரியும் வாய்ப்பும் அதிகரிக்கலாம். இந்தியா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் வளர்ச்சியடையும். உலகப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் இவை உருவாகும் வாய்ப்புகளும் அதிகரிக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *