நிர்மலா ராகவன்

ஆரம்பம் எப்போது?

 

உனையறிந்தால்1-11111

கேள்வி: `என் பிள்ளைகளுக்கு அம்மாதான் எல்லாம்!’ என்று சில தந்தைமார்கள், நாற்பது வயதுக்குமேல், குறைப்படுவது ஏன்?

விளக்கம்:
தாயை, அவளுடைய இருதயத்துடிப்பை, எண்ணங்கள், உணர்ச்சிகள், குரல் எல்லாவற்றையும் ஒன்பது மாதங்கள் அதிகமாக அறிந்திருக்கிறார்களே!

1970-லிருந்து கருவின் உளவியல் (FOETAL PSYCHOLOGY) கணிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதன்படி, மனைவி வயிற்றிலிருக்கும் (ஐந்து மாதங்களுக்கு மேற்பட்ட) கருவிடம் தந்தை பேசியோ, பாடியோ செய்தால், அவருடைய குரல் பழகிவிடும் பிறக்கப்போகும் குழந்தைக்கு.

இம்மாதிரிச் செய்த ஒரு தந்தையின் பரவசத்தைக் கேட்போமா?

“என் மகள் பிறந்ததும் நான் ஏதோ பேசினேன். அந்தக் குழந்தை உடனே தலையைத் திருப்பி, என் கண்களை உற்றுப் பார்த்துச் சிரித்தது, `ஓ, நீதானா நான் அடிக்கடி கேட்ட குரல்!’ என்பதுபோல்!”

அப்பா என்பவர் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுப்பவர், அல்லது `ஒழுக்கம்’ என்ற பெயரில் மகன்களைக் காரணமின்றித் தண்டித்து தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்பவர் என்று பிள்ளைகள் மனதில் படியும்படி நடந்துகொள்வது பழங்கால வளர்ப்புமுறை. `நான் கண்டிப்புடன் பிள்ளைகளை வளர்க்கிறேன்!’ என்ற பெருமையுடன் இப்படிச் செய்தால், இருபாலரிடையேயும் அன்பு எப்படி வளரும்? இதனாலேயே கடைசி காலத்தில் பெற்றோரைச் சுமையாகக் கருதுகிறார்கள் பிள்ளைகள். (ஒரு தந்தை இப்படி வளர்த்ததில், மூன்று மகன்களுக்கும் புத்தி பேதலித்துவிட்டது என்று படித்திருக்கிறேன்).

காரணமின்றி அடியும், உதையும் வாங்கி வளர்ந்தவர்கள் தாமே தந்தையாகும்போது, மென்மையான உணர்வுகளை வெளிக்காட்டுவது ஆண்மைக்கு இழுக்கு என்பதுபோல் நடந்துகொள்வர். அவர்கள் வளர்ந்ததுபோலவேதான் மகன்களையும் வளர்ப்பார்கள். (அனேகமாக, பெண் குழந்தைகள் அடி, உதை வாங்குவதில்லை).

தாம் சிறுவயதில் பட்ட துன்பங்களைப் பிள்ளைகளும் படக்கூடாது என்று தீர்மானித்துக்கொள்வது வெகு சிலரே. அதற்காக, மகன்கள் என்ன செய்தாலும் தண்டிக்காமல் (திட்டாமல்) விட்டால், அப்படியும் அவர்கள் உருப்படப் போவதில்லை. குழந்தையின் பரிபூரணமான வளர்ச்சிக்கு சரி எது, தவறு எது என்று உணர்த்தத் தவறுவது எப்படி அன்பாகும்?

ஓயாத தண்டனை பெற்று, அல்லது `எது செய்தாலும் சரிதான்! என்று இவ்வாறு வளர்க்கப்படுபவர்கள் இருவருமே தம்மிடம் ஏதோ குறை இருப்பதாக உணர்வார்கள். உலகில் போட்டி, பொறாமை, அமைதியின்மை எல்லாம் நிலவக் காரணமே பெரும்பான்மையான மனிதர்கள் தங்களைக் குறைவாக எடை போட்டுக்கொண்டு, பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பதால்தான்.

அன்பு என்பதைப் பரிபூரணமாகப் பெறாவிட்டால், நம்முள் மறைந்துகிடக்கும் ஆற்றலை வெளிக்கொணர முடியாது போய்விடுகிறது.

போதாத குறைக்கு, `ஆத்மாவின் நினைவுகள்’ (SOUL MEMORY) என்று, கருவாக இருக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஆழமாகப் பதிந்துபோன உணர்ச்சிபூர்வமான அனுபவங்கள் வேறு!

தாயின் ஓர் அங்கமாக விளங்கும் கரு ஆரம்பித்திலிருந்தே அவளுடைய நினைவோட்டத்தையும், அவ்வப்போது ஏற்படும் அனுபவங்களையும், அதனால் விளையும் உணர்ச்சிகளையும் தனதாக்கிக் கொள்கிறது. இவை ஆயுள் முழுவதும் ஒருவனுடன் இருக்கும், அவனே அறியாமல்.

ஹிப்னாடிச முறையில், ஆழ்மனத்துடன் தொடர்பு கொள்ளவைத்து, ஒருவர் கருவாக இருந்தபோது பெற்ற அனுபவங்களை மீண்டும் பெறச் செய்யலாம். உதாரணமாக, விமானத்தில் பறக்கவோ, அடுக்குமாடி வீட்டு மேல்தளத்துக்குப் போகவோ அதீதமான பயம் கொண்ட ஒருவர் கருவாக இருந்தபோது தாய் மாடியிலிருந்து உருண்டு விழுந்திருக்கலாம். அல்லது, `உன்னைப் பிடித்துத் தள்ளுகிறேன், பார்!’ என்று எவராவது தாயை மிரட்டி, அப்படி நடந்திருக்காவிட்டாலும், அப்போது தாய் அடைந்த பயத்தைக் கருவும் அனுபவித்து, தனதாக்கிக் கொள்கிறது. இதைத்தான் காரணமற்ற பயம் (PHOBIA) என்கிறார்கள். ஆனால், காரணம் என்னவோ இருக்கிறது.

சில பெண்கள் கர்ப்பமடைந்திருக்கும்போது, `இது பெண்ணாக இருந்துவிடக் கூடாது,’ என்று யாராவது சொல்வதைச் செவிமடுத்த கருவினுள் தான் எவருக்கும் வேண்டாதவள் என்ற எண்ணம் பதிந்து விடுகிறது. இம்மாதிரியானவர்கள்தாம் தற்கொலையை நாடுகிறார்களாம்.

ஆகவே, தாம் பெற்றிருக்கிற குழந்தைகளையே காப்பாற்ற முடியாதவர்கள் அன்பையும், பாதுகாப்பையும் பெற முடியாத பிள்ளைகளை உலகிற்குக் கொண்டுவருவதைக் காட்டிலும் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்றுவது உகந்தது.

ஒரு கர்ப்பிணி நிறைமாதமாக இருக்கையில், கனமான பொருள் அவள் வயிற்றில் விழுந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனால் கருவிற்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவர் சொல்லிவிட்டாலும், அவளடைந்த அச்சம் அதைப் பற்றிக்கொள்ளுமே! `இதற்கும் உனக்கும் சம்பந்தமில்லை!’ என்று எண்ணங்கள் அல்லது வார்த்தைகள்வழி கருவிடம் ஆதரவாகத் தெரிவித்தால், பின்விளைவுகள் இருக்காது.

உருவான போதிலிருந்தே தகுந்த அன்புடன், வதைபடாது வளர்க்கப்படும் குழந்தைகள் அன்பு, அறிவு, ஒழுக்கம் ஆகிய தன்மைகளில் சிறந்து விளங்குகிறார்கள்.

`அறிவு’ என்பது புத்தகங்களிலிருந்து கிடைப்பது மட்டுமல்ல. நல்ல இசை மற்றும் நுண்கலைகளும் அறிவை வளர்க்கும். இனிய பேச்சும், இசையும் கேட்டு வளர்ந்தவர்கள் தாம் பெற்ற அன்பையும், அறிவையும் பரப்புவார்கள்.

இம்மாதிரியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க உலகில் கொடுமைகள் குறைந்து, சமரசம் நிலவும். ஆரம்ப காலத்தில் உலகம் அப்படித்தான் இருந்ததாம்.

குறையோ, மனவருத்தமோ இல்லாது, ஒவ்வொருவரும் தமது ஆற்றல்களை அஞ்சாது வெளிப்படுத்தும் சூழ்நிலையை எண்ணிப்பாருங்கள். கற்பனை செய்யும்போதே ஆனந்தமாக இல்லை?

கடந்து போனவைகளை நீங்களேகூட ஆத்திரப்படாது, யாருக்கோ நடந்ததுபோல, பலமுறை நினைத்துப் பார்த்தால், தெளிவு பிறக்கும். தடைகள் விலக, உங்கள் திறமைகள் வெளிப்படும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *