வள்ளுவ மாலை
-சுரேஜமீ
வேலையும் நல்ல வேளையும் கூடிவரும்
மேலவன் தானெழுதி வையகம் தந்திட்டத்
தூயநூல் வள்ளுவம் பற்றிடக் காண்பீர்
மெய்யென வாழும் உலகு!
எதுவரின் வந்தது நல்லவை நிற்கும்
கொடுசெய் நீக்கும் திருக்குறள் வல்லமை
தானறிவர் அவ்வழிசெல் ஆன்றோர் – மற்றார்
தான்தேடித் தாள்பணி வர்!
தெளிவுநற் சிந்தனைக்குத் தேடுதினம் வள்ளுவம்
சேர்க்கும் அறிவுடை நெஞ்சம் – சிறந்திடும்
வாழ்வும் போற்றிநல் மூத்தோர் விளங்கச்
செய்திடும் நன்னூல் குறள்!
தன்வலி தானறிய மாற்றான் வலியுணரத்
தேற்றிடும் வாழ்வைத் திருக்குறள் – சேயுயிர்த்தாய்
போல அணைக்கும் மந்திரம் சொல்லப்
பொசுக்கும் துன்பம் அழித்து!
பல்லுயிர் பேணும் மனதில் தெய்வமும்
தங்கித் தடைகளை ஓட்டித் – திருக்குறள்
ஓதும் பழக்கத்தைக் காட்டித் தினமும்
ஒற்றுமை ஓங்கிடக் காண்!