மெல்லத் திறந்தது கதவும்

0

கவிஜி.

ஊட்டி.

ஊட்டியில் இருந்து 35 கிலோ மீட்டரில் ஒரு காட்டு பங்களா.

நான், என் அக்கா, தங்கை, தம்பி, மாமா பையன், என் நண்பன் கிரி, அவனின் தங்கை மாயா, மாயாவின் தோழிகள் என்று ஒரு பட்டாளமே பிக்னிக் போயிருந்தோம். ஊட்டிக்குள் நுழையும் நிமிடங்களை மனம் செல்ஃபி எடுத்துக் கொண்டே வந்தது. எடுத்துக் கொண்ட செல்ஃபி நினைவுகளை அசை போட்ட நொடிகளோடு சேர்த்து முகநூலில் ஏற்றிக் கொண்டே இருந்தோம்.

அன்று இரவு அந்தக் காட்டு பங்களாவில் நாங்கள் ஆளுக்கொரு கதைகள் கொண்ட புது புத்தகமாய் விரிந்து கிடந்தோம். இரவின் பனியும், பனியின் குளிரும் ஊட்டியை விரிந்து கிடந்த வெளியில் ஒரு மிதக்கும் காட்டின் சதுரமாய் நாங்கள் தங்கியிருந்த பங்களா நகர்வது போல நின்றிருந்தது. நாங்கள் எல்லாரும் சுற்றி அமர்ந்து கொண்டு ஆளுக்கொரு கதை சொல்லிக் கொண்டும் அந்தக் கதையை ஒருவர் பாதியில் விட அதை அடுத்தவர் தொடர்ந்து அவரும் ஒரு கட்டத்தில் நிறுத்த, அதற்கடுத்தவர் அதிலிருந்து தொடர. என்று இரவின் நீட்சிகள் மணி 11 தாண்டியும் சில்லிட்டுக் கொண்டிருந்தன கதைகளாய்.

டக் … டக் … டக் … டக் … டக் … டக் …

நாங்கள் ஒரு சேர திரும்பிக் கதவைப் பார்த்தோம்.

காட்டுக்குள் நாங்கள் நுழையும் போதே இந்தப் பங்களாவின் உரிமையாளர் ‘எக்காரணத்தைக் கொண்டும் இரவில் கதவை திறந்திட வேண்டாம்’ என்று கூறியது அனைவருக்குமே ஒரு கணம் கருப்பு வெள்ளையில் நினைவின் கவனத்துக்கு வந்து போனது. கதவு தட்டப் படும் சத்தம் மிக மெல்லியதாகத்தான் கேட்டது. இப்போதுதான் ஒன்றைக் கவனித்தோம். உள்ளே ரெஸ்ட் ரூம் போய்விட்டு மாமா பையன் பிரபு வந்து கொண்டிருந்தான் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒருவேளை இவன்தான் உள்ளே போவது போலப் போய் இந்தப் பக்கம் வந்து கதவை தட்டி விட்டு வந்திருக்கிறானோ. என்று அவனைக் கூர்ந்து கவனித்தேன் அவன் எதையும் கண்டு கொள்ளாமல் கதையைக் கவனிப்பதில் கவனமாய் இருந்தான்.

இப்போது மீண்டும் அதே சத்தம், அதே அளவோடு வந்தது.

அனைவரும் திரும்பிப் பார்த்தோம், இம் முறையும் உள்ளே இருந்து வெளியே வந்த பிரபுவை நாங்கள் ஒருசேரப் பார்த்து மெல்லச் சிரித்தோம்.

“டேய் என்ன இப்படிப் போய், அப்படி வந்து கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வந்துட்டா எங்களுக்குத் தெரியாதா. மொக்கையா இருக்குடா” என்று கலாய்த்தோம்.

அவன் சீரியசான முகத்தைக் கொண்டு. “ஹே… நான் தண்ணி குடிக்க உள்ள போனேன்ப்பா நான் தனியா வெளிய போவேனா” என்றான்.

மனதுக்குள் ஒரு வகை திக் தட்டிக் கொண்டே இருப்பதை அனைவருமே மறைக்க முயன்றோம். எனக்குக் கொஞ்சம் வியர்க்கவே ஆரம்பித்து விட்டது.

சற்று நேரத்தில் மீண்டும் அதே டக் … டக்… டக் … சத்தம். அது கதவை தட்டும் சத்தம் தானா என்று சந்தேகிக்கும் அளவுக்குத்தான் சத்தத்தின் வேகம் இருந்ததால் ஒருவேளை பிரமையாகக் கூட இருக்கும் என்று பேசிக் கொண்டோம்.

“இல்ல விஜி. யாரோ கதவைத் தட்றாங்க, நல்லாவே கேக்குது,” என்றாள் என் அக்கா.

“ஆமா எனக்கும்தான் கேட்டுச்சு,” என்று கூறிய தங்கையின் பின்னால் அப்போதுதான் வந்து அமர்ந்தான் மீண்டும் பிரபு.

“டேய் பிரபு விளையாடாதா நீதான் கதவை தட்டிட்டுத் தட்டிட்டு வர்ற. நல்லாவே தெரியுது இது விளையாடற டைமா? பயமா இருக்குடா வேண்டாம்,”என்றபடியே “ஆமா, நீ இப்போ எங்க போன?” என்று எல்லாரும் மொத்தமாகக் கேட்டோம். எங்கள் சத்தத்தில் கொஞ்சம் பயம் கலந்த தடுமாற்றம் இருந்தது. ஒருவேளைத் தட்டுவது பிரபுவாக இல்லாமல் இருந்தால் என்ற கேள்விக்குள் மாட்டிக் கொண்ட பார்வையை ஒருவருக்கொருவர் மறைத்துக் கொண்டோம்.

அவன் மெல்ல சிரித்துக் கொண்டே “சத்தியமா நான் வெளிய போகல. நான் சிப்ஸ் எடுக்கத்தான் உள்ள போனேன்” என்றான் கையில் சிப்ஸ் பாக்கெட் இருந்தது. கொறித்துக் கொண்டிருந்தான்.

அனைவரின் மனதுக்குள்ளும் கதவே நிறைந்திருந்தாலும். கண்டுகொள்ளாதது போல. கதையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம்.

பிரபு வாயைக் கை கொண்டு அடக்கியபடியே ஒவ்வொரு முறை தட்டுவது போலவே கதவைத் தட்டினான். தட்டியபடியே தலையை பின்னோக்கி இழுத்துக் கொண்டு ஒளிந்து கொண்டான். கையை மீறும் சிரிப்பை இன்னும் அழுத்தி அடக்கினான். உள்ளே கதவு தட்டப் பட்ட சத்தம் கேட்டதுமே நான் எழுந்தேன். என்னை இரு என்பது போல எல்லாரும் தடுத்தார்கள். பாருங்க பிரபுவக் காணோம் அவன்தான் இந்த வேலைய பன்றான். இப்போ பிடிச்சிடலாம் என்று மெல்லமாக கூறியபடியே நான் கதவு பக்கம் சென்றேன். என் பின்னால் அனைவரும் கூட்டமாக நின்றார்கள். அனைவர் முகத்திலும் இனம் புரியாத வியர்வைத் துளிகள்.

மீண்டும் தட்டும் சத்தம் கேட்க காத்திருந்தோம்.

வெளியே பிரபுவும், என்னடா, எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள் போல, என்றபடியே மீண்டும் தட்ட முனைந்தான்.

மிகப் பெரிய மௌனம் இடையே கதவாய் நின்று கொண்டிருப்பதை இருபக்கமும் உணர்ந்தார்கள்.

தட்டலாமா, வேண்டாமா, மீண்டும் உள்ளே போய் விட்டு வந்து தட்டலாமா, என்று யோசித்த பிரபு,சரி ஒரு முறைத் தட்டி விட்டு ஓடி விடலாம் என்றே நினைத்தான்.

அடுத்த கணம் …

“டக் டக் டக்” கதவைத் தட்டினான் பிரபு.

“இருடி மாட்ன” என்றபடியே சட்டென்று கதவைத் திறந்தேன்.

வெளியே புகை போல ஒன்று நின்று கொண்டிருந்ததை நாங்கள் கத்திக் கொண்டே கண்டோம்.

வெளியே இருந்த பிரபுவுக்கு வீட்டுக்குள் புகை போல நிறையப் பேர் நின்றிருந்தது தெரிந்ததாம். மயங்கிச் சரிந்தான்.

ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்…..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *