எங்கள் கண்ணன் பிறந்தான்!

0

-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

அகிலத்தையே அன்னைக்கு வாய்வழி காட்டியவனே
ஆயர்குலக் கொழுந்தாய் விளங்கும் நல் அச்சுதனே
இரந்துபின் கர்ணனுக்கு மோட்சம்தனைத் தந்தவனே
ஈதலினால் சபையில் திரௌபதியின் மானம் காத்தவனே!  krishnan images.jpg (6)

உலகம் உய்ய கீதோபதேசம் அருளிய நாயகனே – நீ
ஊதும் குழலால் மெய்ம்மறந்த கோபியர்தான் எத்தனை பேர்?
எட்டாவது மழலையாய் இன்று அஷ்டமியில் வந்தவனே
ஏற்ற தசாவதாரத்தில் உந்தன் ஆற்றலினால் சிறந்தவனே!

ஐ! கண்டதுமே திருஷ்டிபடும் அழகு செல்லக் கண்ணனே
ஒருத்திக்கு ஒருவனெனும் உயர்வழி நின்ற சீதாராமனே
ஓங்கி உலகளந்த உத்தமனே தூயவனே வாமனனே
தேவி நாராயணியை மார்பில் தாங்கிய மாலவனே!

நின் பிஞ்சுமலர்க் காலடி மெல்லத்தான் எடுத்து வைத்துச்
சகத்தில் உள்ளோர் இல்லமெல்லாம் அருளைப் பொழிய
சடுதியில் வந்திடுவாய் சிரித்த குழந்தையாய் பூபாலனே
பாரதத்தில் பார்த்தனுக்குத் துணைநின்ற பார்த்தசாரதியே
காத்தருள வேண்டுமய்யா அடைந்தோம் சரணாகதியே!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *