பாரதி – ஒரு நினைவாஞ்சலி
பாரதி!
உனக்கும் எனக்கும் தான் எத்தனை ஒற்றுமை !
நீ பிறந்த அதே நெல்லைச்சீமையிலே
நான் பிறந்தேன் !
உன் வீட்டுக்கும் என் வீட்டுக்கும்
எட்டுக்(ம்) கல் தூரம்!
நீ பிறந்த அதே நட்சத்திரத்தில்
நான் பிறந்தேனாம் !
ஜோதிடர்கள் சொல்லுகிறார்கள் !
நீ வாழ்ந்த அல்லிக்கேணியிலே
நானும் வளர்ந்தேன் !
உன் பெயரை
என் பெயர் கடன் வாங்கிக்கொண்டது!
கூடலிலே நீ தமிழ் ஊட்டி வளர்த்த
பள்ளியிலே நான் மாணவன்!
ஆனால், பாரதி,
நீயோ ஒரு கான மயில்!
நானோ ஒரு வான்கோழி :
சிறகடிக்கிறேன், சிந்திக்காதே,
என்னை மன்னித்துவிடு!
பாரதி!
பராசக்தியைத் தவிர
யாருக்கும் தலை வணங்க மறுத்த
தலையை நிறுத்தும் ஒரு முண்டாசு!
பறங்கியர் நெஞ்சம் பதைபதைக்க
‘நெற்றி அடி’ கொடுக்கும்
ஓர் பரந்த நெற்றி !
பாற்கடலில் அமுதம் தேடுவதுபோல்
பாலுண்ட கண்களில் மேருவினைப்போல்
இரு கரு விழிகள் !
எரிமலை மூச்சு விட்டாற்போல்
தகிக்கும் மூச்சுக்காற்று – அது
மீசையில் மோதி “மாகாளி, மாகாளி ” யென
மோனத்தில் சொல்லும் மந்திரம் !
உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்
உதட்டினை முத்தமிடப்
பிறந்த தமிழ்க் கவிதை!
காக்கை குருவி யெங்கள் ஜாதியென
கருணை கொண்ட உள்ளம் !
கருப்பு அங்கியில்
வெள்ளை நெஞ்சம்!
பூமியைத் தட்டிய அவன் தடிகள்
பூதேவிக்குப் பூபாளம் பாடின!
மண்ணை முரசாக்கி அவன்தன்
தடியால் தட்டியபோது
“யாமிக்கப் பயமேனென்று”
பாரதத் தாய்க்கு பலம் கொடுத்தது !
துடிக்கும் மீசையைக் கண்டு
துவண்ட பரங்கியர்
தங்களைத் தாங்களே கொட்டிக் கொண்டனர்!
வீசு நடையைக்கண்டு
ஆசை கொண்ட தோள்கள்
கைவீச்சுக் தோள் கொடுத்தன !
பாஞ்சாலிக்கு சபதம் கொடுத்தவனின்
அஞ்சாத தேச மதம் கண்ட
யானை கூட அச்சத்தில் மதம் கொண்டது !
காலடியில் வீழ்ந்தாலும்
கலங்கிடாத பாரதி
காந்திக்கும் குருவானான் !!
நல்ல கவிதை.
மீ.வி.