விதையொன்றுபோட….
சரஸ்வதி ராசேந்திரன்
சந்தானமும் ,காஞ்சனாவும் ஊரை எதிர்த்து,உறவை பகைத்து திருமணம் செய்துகொண்டவர்கள் ,அதனால் ஒன்றும் பாதகமில்லை சந்தானம் ரியல் எஸ்டேட் பிஸினெஸ் பண்ணி லட்சம் லட்சமாய் சம்பாதித்து வீடு ,கார் என சமூக அந்தஸ்தோடு இருக்கிறான்.
அவர்களுக்கு ஒரே மகள். ஊரே வியக்கும் வண்ணம் நூறு பவுன் போட்டு விமர்சையாக திருமணம் செய்ய ஆசைபட்டான் சந்தானம் .
மனைவியிடம் தன் விருப்பத்தை சொன்னபோது,
‘’இப்ப என்ன அவசரம் அவளுக்கு?’’
‘’உனக்குத் தெரியாது காஞ்சனா ,பெண்ணும் ,கீரைத்தண்டும் முற்றினால் விலை போகாது இதுதான் சரியான வயது ’’
‘’இல்லை அவள் ..வேலைக்குபோகனும்னு ..’’
‘’அதுக்கெல்லாம் அவசியமில்லை ..போற இடத்திலே நல்ல வசதி’’
கேட்டுக்கொண்டே வந்த அகிலா ’’ யாருக்கப்பா திருமணம் ?’’கேட்டாள்
‘’உனக்குத்தான் அகிலா ‘’
‘’ எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம் ‘’
‘’ நான் என் நண்பனிடம் வாக்கு கொடுத்திட்டேன் அகிலா’’
‘’சாரி ப்பா ‘,பெற்றவர்களை நான் மதிப்பவள் தான் ஆனால்..அதுக்காக நான் சுயத்தை இழக்க முடியாது ‘’
‘’’’சுயமா அதென்ன ?’’
‘’ நீங்க உங்க மனசுக்கேத்த பெண்ணைத்தானே எல்லா தடைகளையும் மீறி பண்ணிகிட்டீங்க,உஙளுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா?
‘’அப்ப நீ யாரையாவது லவ் பண்றியா?சொல்லு ‘’
‘’இது வரை யாரையும் காதலிக்கலே அந்த நேரம் வரும்போது சொல்றேன், அது வரை பொறுமையா இருங்க ‘’ சொல்லி விட்டு போனாள்.
வாயடைத்து நின்றார் சந்தானம் .விதையொன்று போட சுரைஒன்றா முளைக்கும்?