செப்டம்பர் 21, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு முனைவர் பத்மாவதி அவர்கள்

Padmavathy-a

வல்லமையின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி ஆனையப்பன் அவர்கள். இவரைக் குறிப்பிடும் செய்திகள் யாவும் “முனைவர் பத்மாவதி, தொல்லியல் ஆய்வாளர் (பணி ஓய்வு), சென்னை” என்றே குறிப்பிடுகின்றன. ஆனால் “தொல்லியல் பணிகளில்” இருந்தோ அல்லது “தொல்லியல் ஆய்வுகளில்” இருந்தோ ஓய்வு பெற்றதாக முனைவர் பத்மாவதியின் செயல்பாடுகள் இதுவரையில் குறிப்பதாக இல்லை. மாறாக இவர், வழக்கமான பணிஓய்வு பெற்றவர் வாழ்க்கைமுறையில் இருந்து வேறுபட்டு தொல்லியல் துறை வளர்ச்சியிலும், வரலாற்று ஆய்வுகளிலும், வரலாற்றுக் கல்வியிலும், தொல்லியல் துறையில் இளையதலைமுறையினரை உருவாக்குவதிலும் ஆர்வம் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஆதலினால், இவரை பணிஓய்வு பெற்றவர் என்று குறிப்பிடுவதும் பொருத்தமற்றதே. செப்டெம்பர் 6, 2015 அன்று ஓசூரில் நடைபெற்ற, “அறம் இலக்கிய அமைப்பு ஓசூர் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம்” இணைந்து நடத்திய “மாமன்னர் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய 1001 ஆவது ஆண்டுவிழாவில்”, தொல்லியல் துறையில் ஆர்வமுடன் செயலாற்றும் இளையதலைமுறை ஆர்வலர்களுக்கு “தொல்லியல் முனைவோர்” விருது வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் பாராட்டிப் பேசியுள்ளார். தொல்லியல்துறையில் பத்மாவதியின் தொடர் பங்களிப்பைப் பாராட்டி அவரை வல்லமையாளர் விருதுக்குப் பரிந்துரைத்தவர் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள், முனைவர் சுபாஷிணிக்கு வல்லமைக்குழுவினரின் நன்றிகள் உரித்தாகிறது.

viruthu

முனைவர் பத்மாவதி தொல்லியல் கல்வி சார்ந்த பயிலரங்குகளையும், கல்வெட்டுகளைப் படிக்க உதவும் கிரந்தம் பயிலரங்கங்களையும் தொடர்ந்து நடத்தி வருபவர். சமீபத்தில் இவர் பங்கேற்ற பயிலரங்கங்கள் குறித்த தகவல்கள் சிலவற்றை கீழே காண்க …

▪தஞ்சை சரஸ்வதி மஹால் நூல் நிலையம் நடத்திய கிரந்தம் பயிலரங்கில் பங்கேற்று, தமிழகக் கல்வெட்டுகளில் கிரந்த எழுத்து பயன்பாடு என்ற தலைப்பில் பல்லவர் கல்வெட்டுகளில் கிரந்தம் பற்றிய வகுப்பு, மாணவர்களுக்கு களப்பயிற்சி அளிக்கும் பொருட்டு தஞ்சை பெரிய கோயிலில் நேரடி கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

   Padmavathy6 Padmavathy5

▪நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி தமிழ்த்துறை நடத்திய பயிலரங்கில் கலந்துகொண்டு மாணவ மாணவியர்க்கு கிரந்தஎழுத்துக்கள் கற்பித்து பயிற்சி

▪காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இலக்கியச் சான்றுகளுடன் “தொண்டைமண்டல வரலாறு” பற்றிய சொற்பொழிவு

▪சென்னை சமூக ஆய்வுவட்டம் கூட்டத்தில் “களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும்” பற்றிய சொற்பொழிவு

Padmavathy-b

▪தமிழக மூதறிஞர்கள் குழு நடத்தும் மாதாந்திர கலந்துரையாடலில் சென்ற ஜூலை மாதக் கூட்டத்தில், “தமிழக வரலாற்றில் கல்வெட்டுகள் கூறும் முக்கியச் செய்திகள்” என்ற தலைப்பில் தமிழக வரலாற்றில் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டு ஆதாரங்கள், தமிழர்களின் சங்ககாலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னரே இருப்பதற்கான தகவல் தரும் மீனாட்சிபுரம் கல்வெட்டு ஆகியன குறித்த சொற்பொழிவு

▪தமிழ் மரபு அறக்கட்டளையின் களஆய்வுகளில் பங்கேற்பு, தமிழ் மரபு அறக்கட்டளையின் வரலாற்றுப் பதிவுகளுக்கு தகவல் அளித்து வரலாற்றுத் தகவல்கள் இணையத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வழி பதிவாக்கம் பெற உதவுதல், தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினராக வழிநடத்துதல் ஆகிய தொடர் பணிகளுடன்…

“பனுவல் புத்தக நிலையம்” நடத்திவரும் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் (Archeological Tour ) பங்கேற்று வரலாறு மற்றும் தொல்லியல் கல்வி பயிற்சி அளிப்பது, கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் படி எடுக்கும் முறை பற்றிய பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு இதுவரை,
பனுவல் ஒருநாள் வரலாற்று தொல்லியல் கல்விப் பயணம் திட்டம் வழியாக (1) மகாபலிபுரம், (2) காஞ்சிபுரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், (3) செஞ்சி ஆகிய இடங்களில் தொல்லியல்துறை கல்வி வளர்ச்சிக்காகப் பயிற்சிகள் அளித்துள்ளார்.

   காஞ்சிபுரம் கல்விச் சுற்றுலாவில்பனுவலின் செஞ்சி வரலாற்று பயணம்

கார்த்திக் புகழேந்தி

அடுத்து வரும் அக்டோபர் 4, 2015 அன்று பனுவல் ஒருநாள் வரலாற்றுத் தொல்லியல் கல்விப் பயணத்தில் திருக்கோவிலூரிலும், திருக்கோவிலூரைச் சுற்றியுள்ள பகுதிகளான திருவெண்ணைநல்லூர், கிராமம், ஜம்பையில் 1981 ல் தொல்பொருள் ஆய்வுக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்ட, கி. பி. 1 ஆம் நூற்றாண்டு சங்க காலத்தமிழ் எழுத்துக் கல்வெட்டு ஆகியவற்றைப் பற்றி மங்கை ராகவன் அவர்களுடன் இணைந்து பயிலரங்கம் வழங்க உள்ளார்.

பணி ஓய்விற்குப் பிறகும் வரலாற்றுக் கல்வி, கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி, தொல்லியல் கல்வி ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்கு வழங்கி அவர்களை ஊக்குவித்துவரும் முனைவர் பத்மாவதி அவர்களின் பணிகளுக்காக அவரை வல்லமையாளர் எனப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

_____________________________________________________________________________________________

கட்டுரைக்கான தகவல்களும் படங்களும் பெறப்பட்ட தளங்கள்:
முனைவர் பத்மாவதியின் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/padmavathy.anaiappan
பனுவல் ஃபேஸ்புக் சமூக வலைத்தளம் – https://www.facebook.com/panuval.thiruvanmiyur
கார்த்திக் புகழேந்தி – https://www.facebook.com/gsrkteam
காற்றில் எழுதியவன்… கார்த்திக் புகழேந்தி வலைப்பூ – http://writterpugal.blogspot.com/2015/05/blog-post.html
தமிழ் மரபு அறக்கட்டளை – http://www.tamilheritage.org/old/ec/ec.html#_pathma

வல்லமையாளர் பற்றிய மேலதிகத் தகவல்கள்:
களப்பிரர் வீழ்ச்சியும் பல்லவர் எழுச்சியும், தொல்லியல் ஆய்வாளர் முனைவர் பத்மாவதி உரை
http://samoogaaaivuvattam.blogspot.in/2014/12/blog-post.html

கல்வி: முதுகலை தமிழ், முதுகலை கல்வெட்டு, தொல்லியல் பட்டயப்படிப்பு, முனைவர் ஆய்வு

நூல்கள்:
– சோழர் ஆட்சியில் அரசும் மதமும்
– சைவத்தின் தோற்றம்
– சோழர்கால சமயம்
– அம்பாசமுத்திரம்

ஆசிரியர்:
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – I
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – II
– நன்னிலம் கல்வெட்டுகள் தொகுதி – III
– திருவிழிமிழலை கல்வெட்டுகள்
– திருவலஞ்சுழி கல்வெட்டுகள்
– தாமரைப் பாக்கம் கல்வெட்டுகள்

துணை ஆசிரியர்:
– தொல்லியல் கருத்தரங்கம் தொகுதி – I
– தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் 2004
– காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள்
– தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள்
– திருவாரூர் மாவட்டக் கல்வெட்டுகள்

மின்னஞ்சல்: padma_tn@hotmail.com
https://www.facebook.com/padmavathy.anaiappan

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வாழ்த்துகள் பத்மாவதி ஆனையப்பன் மேடத்திற்கு. எல்லாவிதத்திலும் தகுதியானவர். சரியான தேர்வு 

Leave a Reply to Geetha Sambasivam

Your email address will not be published. Required fields are marked *