விருந்தும் மருந்தும்..
விருந்தும் மருந்தும்…(குறள் வெண்பா)
வாராரோ என்றேதான் வாசலிற்க்கண் வைத்தீதல்
சாராம்சம் பக்கமென்றும் சாய்!
வந்தபின்னே இன்முகத்தில் வாவென்று வாசலில்நேர்
சந்திப்பைக் காத்தலன்றோ சால்பு!
வாசலிலே வந்தவரை வாயார வாழ்த்தியவர்
பாசத்தின் ஊற்றென்றுப் பாடு!
வந்தவரை ஆதரித்து வாழ்வுக்குப் பாலமாகி
இந்தமண்ணில் சேர்ந்தொருமை ஈந்து!
வாய்திறந்து கேட்டுநிற்கும் வாட்டமுடன் வாழுகின்ற
சேய்களுக்கே பாலன்னம் சேர்!
வாவென்று அன்பொழுக வாய்திறந்துக் கூப்பிடாமல்
ஆவென்று நோக்காதீர் ஆழ்ந்து!
வாவென்று உள்ளார்ந்து வாய்மொழியா இல்லத்தில்
தாவென்று கேட்டிடாதீர் தாழ்ந்து!
வாழ்த்துதலை நோக்கியெதிர் வாசலிலே நிற்காதோர்
தாழ்விலுமே மானஸ்தர் தான்!
வாஞ்சையாய் காப்போரின் வாசலைதான் எவரும்தம்
ஊஞ்சலாய் ஏறிடுவார் ஊர்ந்து!
வந்தாரை வாழ்விக்கும் வளமான வாழ்வதுதான்
நொந்தாலும் ஈரநெஞ்சோர் நோக்கு!
… நாகினி
அருமை .. !!
க.பாலசுப்ரமணியன்
மிக்க நன்றி