விடாது வந்த வினையெலாம் (பாடல்)
இசைக்கவி ரமணன்
விடாது வந்த வினையெலாம்
தொடாமல் எங்கு சென்றன?
தொடாத அந்த உயர்வெலாம்
விடாமல் என்னைத் தொடர்ந்தன
படாமல் பட்ட பாடெலாம்
அவன் கை பட்டு நின்றன (விடாது)
மனத்தில் இன்று வரையிலும்
இலாத மெளனம் வந்தது
நினைப்பு நின்ற போதிலும்
நில்லாமல் இன்பம் நீண்டது
வனத்திலே சுனைக்குளே
இனித்திடும் தனிமை வந்தது
நினைப்பிலே நிஜத்திலே
நிழலில்கூட இனிமை வந்தது
எனக்குளே எனக்குளே எனக்குளே எல்லாம் நின்றது (விடாது)
நினைத்ததே நடந்ததால்
நெஞ்சம் வேர்த்தது
நிழல்களும் நிஜங்களும்
கொஞ்சிப் பார்த்தது
வனத்திலே தனித்தவோர்
கணத்திலே யாவும் நேர்ந்தது
தனித்தவோர் கணத்திலே
வளைக்கரம் வழிமறித்தது
கடலொடுங்கி மலையெழுந்து
மரம்விளைந்து மலர்சிரித்தது
(விடாது)