அழகு தாங்க முடியவில்லை (பாடல்)
இசைக்கவி ரமணன்
அழகு தாங்க முடியவில்லை
அபலை தவிக்கிறேன், உன்
அன்பு தாங்க முடியவில்லை
அடிமை துடிக்கிறேன்
பழகத் தெரியவில்லை அம்மா
பாடு படுகிறேன், நான்
பாமரன் நீ பராசக்தி
பரிதவிக்கிறேன். (அழகு)
விழலுக்கிறைத்த நீரைப்போல
விழிகள் அழுதன, காற்றில்
விழுதுகள்போல் ஊசலாடிக்
கைகள் தொழுதன
அழுத கண்ணில் அமிழ்தமாக
நீ எழுந்தனை, என்னை
அழைத்துவந்து பிள்ளை என்று
தழுவிக் கொண்டனை (அழகு)
என்னசெய்தும் எந்தன் துன்பம்
விலகவில்லையே! இந்த
ஏழை வார்த்தை அம்பலத்தில்
ஏறவில்லையே!
முன்னம் செய்த வினையின் கோலம்
முடியவில்லையே! நான்
முட்டி மோதிப் பார்த்தும் இருள்
விடியவில்லையே!
அன்னை உந்தன் கண்ணில் கருணை
ஊறிவிட்டதே! விழி
அசைவில் எந்தன் விதியும் மதியும்
மாறிவிட்டதே!
புன்மை யாவும் ஒருகணத்தில்
புனிதமானதே! இந்த
புஷ்டி தேவி சந்நிதியில்
பொழுது புலர்ந்ததே! (அழகு)
அடடா!