’மழை’ புத்தகம்!
-கவிஜி
திறக்காத ஜன்னலுக்குள்ளும்
கசிந்துருகும் துளிகளின்
வட்டங்களில் வளைதல்
திரும்புதலென
மழையின் மாயங்கள்…!
கவ்விய போர்வைக்குள்
பட்டுத் தெறிக்கும்
புது வாசமென
அப்பிக் கொண்ட கருமேகப்
பிழிதலாக மழையின் வேகங்கள்…!
விரட்டி வரும்
தாகங்களின் நூலிடை வெளிகளாகத்
தொட்டுத் தொட்டுப் பட்டுப் படரும்
பூமியின்
சாயமென மழை சாட்சிகள்…!
இதுவரைக் கேட்காத
சத்தத்தில் இன்றைய
மதிய மழைச்
சாரலே அல்லாத
நெடுந்தொடர் எனச்
சில்லிட்ட நினைவுகளை
உணர்ந்த போது
வாசித்து முடித்திருந்தேன்
“மழை’ புத்தகத்தை…!