நான் அறிந்த சிலம்பு – 183
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக் காதை
பொற்கொல்லன் தீய எண்ணத்துடன் செல்லுதல்
‘நான் வஞ்சகம் செய்து கவர்ந்த சிலம்பு
என்னிடம்தான் உள்ளது என்று
பிறர் அனைவரும் அறியும் முன்னே
வேறு ஊரிலிருந்து இங்கு வந்த
இவன் மூலம் என் கள்ளத்தனத்தை
நான் மறைப்பேன்’ என்று எண்ணி,
சிறிதும் கவலைப்படாது
பொற்கொல்லன் சென்றான்.
கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கி மன்னவன் செல்லுதல்
கூடல் மகளிர் ஆடும்போது
தோன்றும் தோற்றமும்,
அந்த ஆட்டத்துக்கேற்ற பாட்டு இசைக்கும்போது
எழும் வேறுபாடும்,
யாழிசையின் பயன்களும்,
அரசனின் உள்ளத்தைக் கவர்ந்தது என்று எண்ணி,
தன் ஊடலை உள்ளே வைத்துக் கொண்டு
தலைநோயாகிய வருத்தத்தைத் தன் மீது படரவிட்டு,
உயர்குடிப்பிறப்பையுடைய பெருந்தேவி
தன்னுடன் மேவாது
அந்தப்புரம் சென்றுவிட்டதால்…
காமம் மிகுந்த அரசன்
மந்திரிகளின் கூட்டத்தை விட்டு நீங்கி,
அரி சிதறிய நீண்ட கண்களையுடைய பணிப்பெண்களுடன்
கோப்பெருந்தேவியின் கோவிலை நோக்கிச் சென்றான்.
காவலையுடைய வாயிலின்கண் செல்லும் முன்னே
அவனைப் பலவாகப் புகழ்ந்து ஏத்தி
அவன் கால்களில் விழுந்தான் பொற்கொல்லன்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 127 – 141