செவ்வாயில் நீரோட்டம்!
ஒரு அரிசோனன்
செவ்வாய்-ஆய்வு விண்கலம் அனுப்பி, நாசா[NASA], ஜே.பி.எல்[JPL], யுனிவர்சிட்டி ஆஃப் அரிசோனா இணைந்து அசோசியேடட் பிரஸ் மூலமாக வெளியிடப்பட்ட, தேதி குறிப்பிடப்படாத புகைப்படத்தில் காணப்பட்ட கருமையான கோடுகள் உவர்நீர் ஓட்டத்தினால் ஏற்பட்ட தடங்களே என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
பதினான்கு கோடிமைல்கள் தொலைவிலுள்ள செவ்வாய்க்கோளின் கடுங்குளிரால் உறைந்துபோன தரையில் இப்பொழுது தண்ணீர் நிறைகிறது. அந்த கிரகத்தில் உவர்நீர் ஓடுவதற்கான வலுவான சான்று இருக்கிறது என்று விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள். செவ்வாயில் உயிரினங்கள் இருக்கலாமோ என்று ஆராய்ந்தறிய இது ஒரு முக்கியமான அடிப்படையாக அமைகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட நேச்சர் ஜியோசயின்ஸ்[Nature Geoscience] என்னும் விஞ்ஞான இதழில் லுஜென்ர ஓஜ்ஹாவும், மேரிபெத் வில்ஹெல்மும், “நமக்குத்தெரிந்த உயிரினங்கள் வாழத் தண்ணீர் மிகவும் தேவையான ஒன்று. செவ்வாயில் நீர் இருப்பதனால் வானுயிரியல், கனிம, நீரியல் விளைவுகள் ஏற்படுத்தும்; எதிர்கால மனித ஆய்வுப் பயணங்களின் நிலமை மாறுதல் ஏற்படவும் வழிவகுக்கும்,” என்று எழுதியுள்ளார்கள்.
மாபெரும் அறிவிப்பாக நாசாவினால் முழங்கப்படும் இது முற்றிலும் புதிதல்ல. ஏனெனில் செவ்வாயில் தண்ணீரைப் பற்றிய ஆராய்ச்சி பல்லாண்டுகளாக விஞ்ஞானிகளின் கவனத்தைப் ஈர்த்திருக்கிறது. பனி எரிமலைகளின் கண்டுபிடிப்பும் இவ்வாறே அவர்களை குதூகலப்படுத்தியுள்ளது.
தொன்மையான் ஆற்றுப்படுகைகளில் உள்ள தடங்கள் மூலம் செவ்வாயில் ஒருகாலத்தில் தண்ணீர் நிறைந்திருக்கலாம் என்று வானுயிர் வல்லுனர்கள் ஊகித்துவந்திருக்கிறார்கள். நூறுகோடி ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சேறும் சகதியுமான, பழமையான பெருங்கடல்கள் அங்கு இருந்திருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
செவ்வாயில் மேற்பரப்பில் வளைந்து நெளிந்து காணப்படும் அமைப்புகள் அங்கு மிகமிகப் பழங்காலத்தில், நெடுங்காலமாகத் தண்ணீர் ஓடியிருக்கலாம் என்பதையே ஊகிக்கவைக்கிறது. குறைந்தபட்சம் பாக்டீரியா, இன்னும் எளிமையான உயிரினங்கள் வாழும் அளவுக்குத் தண்ணீர் இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.
தண்ணீர் ஏதோ ஒரு வடிவத்தில் செவ்வாயில் இன்னும் இருக்கிறது என்பது கடந்த சில ஆண்டுகளில் தெளிவாகியது. அது அதிக அளவில், நிலத்தில் பனிப்படிமங்களாகவோ, துருவங்களுக்கருகே பெரிய பனிக்கட்டி ஆறாகவோ [glacier], விண்கல் பள்ளங்களிலும், மலை இடுக்குகளிலும் பெரிய பனிக்கட்டிப் பாளங்களாகவோ இருக்கலாம் என்றே எண்ணப்பட்டது. உயிரனமில்லாத, ஒன்றுமே நடக்காத, வரண்டதொரு கோள் செவ்வாய் என்று இதுகாறும் நினைக்கப்பட்டுவந்த முன்னுதாரணம், “செவ்வாய் இன்னும் நீரினால் மாற்றியமைக்கப்பட்டுவரும் ஓர் உலகமே,” என்ற மாற்றத்தை அடைந்தததற்குக் காரணம், அங்கு தண்ணீர் இருக்கிறது என்ற அறிவே.
செவ்வாயில் உயிர் தோன்றியிருந்தால், அது இன்னும் பிழைத்து வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்ற கருத்தை செவ்வாய் ஆய்வுத் திட்டப் பகுப்பாய்வுக் குழு [Mars Exploration Program Analysis Group] முன்வைக்கிறது.
இரண்டாண்டுகளுக்கு முன்னர், 2013ல் நேச்சர் ஜியோசயின்ஸ் என்ற விஞ்ஞானப் பத்திர்கையில் வெளிவந்த கட்டுரையில் செவ்வாயின் நில வடிவமைப்பு கோள்நடுக்கோட்டின் அருகில் வியப்புக்கும் அதிகமான அளவு உவர்நீர் இருக்கிறது என்ற கருத்தை விஞ்ஞானிகள் முன்வைத்தனர். செப்டெம்பர், 2015ல் விடப்பட்ட அறிக்கையும் அதையே உறுதிசெய்கிறது.
நாசா தலைமையகத்தில் நடந்த ஒரு செய்திக் கருத்தரங்கில், அதன் கோள் அறிவியல் இயக்குனர் [director of planetary science] ஜிம் கிரீன், “கடந்த காலத்தில் நாம் நினைத்துவந்ததைப்போல செவ்வாய் ஒரு வரண்ட கோள் அல்ல,” என்றார்.
இதற்குமுன்னர் செவ்வாயில் நீரோட்டம் இருக்கிறது என்பது சூழ்நிலைச் சான்றாகவே {based on circumstancial evidence}வரையறுக்கப்பட்டது.
புதிதாகக் கிடைத்த நிலவடிமைப்பை நிறப்பிறிகைத் தரவுகள்மூலம் ஆராய்ந்து, செவ்வாயில் நீருள்ள உப்புகள் இருப்பதைக் கண்டார்கள். இது பருவகால நீரோட்டமாகவிருக்கலாமென்று எண்ணவைத்தது.
கடந்த அறிக்கையில், “நிறப்பிரிவு உள்வாங்குமுறையுடன் மிகவும் ஒத்துப்போகும் — எங்களால் கண்டுபிடிக்கப்பட நீருள்ள உப்புகள் — மக்னீசியம் பெர்குளோரேட், மக்னீசியம் குளோரேட், சோடியம் பெர்குளோரெட் ஆகும்,” என்ற விஞ்ஞானிகள், “செவ்வாயில் காணப்படும் சாய்வுகொடுகள், அங்கு ஒரேகாலத்தில் நடக்கும் நீரோட்டத்தின் விளைவே என்பதை எங்களுடைய கண்டுபிடிப்புகள் உறுதிசெய்கின்றன,” என்றும் எழுதியுள்ளார்கள்.
அங்கு காணப்படுவது உவர்நீர், நல்நீர் அல்ல என்று நம்பப்படுவதும் ஒரு உற்சாகத்தைத் தரும் ஒன்றேயாகும். அந்த உவர்நீர் உயிரினம் இருக்கக் கிட்டத்தட்ட துணையாகும் என்றே சுட்டுகிறது.
“இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் இந்த தன்னிகரில்லாத பகுதியில் ஆய்வுப்பயணம் மேற்கொள்ளவேண்டியதும் மேலும் வானஉயிரினவியல் இயல்பாய்வு செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது,” என்று அந்த அறிக்கை சொல்லுகிறது.
எனவே, இக்கண்டுபிடிப்பு செவ்வாயைப் பற்றிய பெரிய கேள்வி ஒன்றுக்கு விடையளித்தாலும், மற்றபல கேள்விகளுக்கு வழிவகுக்கிறது.
ஒருகாலத்தில் செவ்வாயில் மேகங்கள், பனிப்போர்வையால் மூடப்பட்ட மலைத்தொடர்கள், நல்நீர் ஏரிகள் இவற்றுடன் ஒரு பெருங்கடலும் இருந்தது. அத்தனை தண்ணீரும் செவ்வாயின் காற்றுமண்டலம் மெலிந்தவுடன் காலம் செல்லச்செல்ல சிதறடிக்கப்பட்டது. அது ஏன் நிகழ்ந்தது என்று விஞ்ஞானிகள் பலவிதமான விளக்கம் அளித்துவருகிறார்கள்.
அங்கிருக்கும் உவர்நீரில் எந்த அளவு உப்பு இருக்கிறது, அது எவ்வளவு குளிர்ந்ததாக இருக்கிறது என்று ஆராயவும், அத்தண்ணீர் செவ்வாயின் உயிரினங்களை மட்டும் வாழவைக்கிறதா என்பதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அங்கு பயணிக்கும் மனிதர்களுக்கு ஒரு நீராதாரமாக அமையுமா என்றும் உறுதிசெய்யவும் விரும்புகிறார்கள்.
ஜான் மேசி கிரன்ஸ்ஃபெல்டு என்ற இயற்பியல்துறை வல்லுநர் [physicist] சமீபத்தில் நடந்த செய்தியாளர் கருத்தரங்கில் இவ்வாறு கூறினார்: “பூமியிலிருந்து வேறொரு இடத்திலுள்ள இன்னும் இருந்துவருகின்ற இயற்பியல் வளமுள்ள இருப்பிடமாகவே செவ்வாய் தோன்றுகிறது. அங்கு அதற்கான வளங்கள் உள்ளன.”
***
கட்டுரை/படங்கள் உதவி:
Water in Mars, by Adiranne La France, The Atlantic Magazine, September 28, 2015
http://www.msn.com/en-us/news/technology/water-is-flowing-on-mars/ar-AAeSOCo?ocid=spartandhp