பழமொழி கூறும் பாடம்
– தேமொழி.
பழமொழி: கடலுள்ளும் காண்பவே நன்கு
ஒல்லாத வின்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் – இல்லார்க்
கிடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
கடலுள்ளும் காண்பவே நன்கு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
ஒல்லாத இன்றி, உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம்; இல்லார்க்கு
இடரா இயலும்;-இலங்கு நீர்ச் சேர்ப்ப!
கடலுள்ளும் காண்பவே, நன்கு.
பொருள் விளக்கம்:
இயலாமல் போனது என்று (தடையேதும்) இல்லாமல், செல்வந்தரின் காரியங்கள் நல்ல முறையில் இனிதே நடந்தேறும். பொருள் இல்லாதவருடைய செயல்கள் துன்பமாகவே முடியும். சிறந்த நீர்வளம் கொண்ட நாட்டைச் சேர்ந்தவரே, (பொருள் உள்ளவர்) கடல்தாண்டி சென்றாலும் காரியத்தில் நன்கு வெற்றி காண்பார்.
பழமொழி சொல்லும் பாடம்: பொருள் உடையவர் தொடங்கும் காரியங்கள் தடையின்றி நன்கே முடியும். காரியத்தின் வெற்றி தோல்விக்கு பொருளாதார நிலை காரணமாக அமைகிறது. இதனையே வள்ளுவர்,
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. (குறள்: 753)
பொருள் என்ற அணையாவிளக்கைப் பெற்றிருப்பவரால், எந்த தேசத்திற்குச் சென்றாலும் இருள் என்ற துன்பத்தை பொருளால் விரட்டி வெற்றி காண முடியும் என்கிறார்.