-மேகலா இராமமூர்த்தி

இந்த வாரத்தின் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிஓவியம் திரு. ராகுலுடையது. அதனைத் தேர்வு செய்தவர் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் வல்லமை இதழின் நன்றிக்கு உரியவர்கள்.

a guy with a fire cracker

கையிலே பூத்திரியிருந்தும் முகம் பூத்திருக்கவில்லையே இந்தச் சிறுவனுக்கு.  ஏன்?

இதுகுறித்துச் சிந்திப்பதற்குத்தான் நம் கவிஞர் பெருமக்கள் இருக்கின்றார்களே…எனவே இவ்வேலையை அவர்களிடம் விட்டுவிடுகின்றேன்!

எமக்குத் தொழில் அவர்களின் கவிதையை வாசித்து மகிழ்தலும், மதிப்பீடு செய்தலுமே அல்லவா? இதோ அப்பணியில் இறங்குகின்றேன்!

புகையிலே மனத்திற்கு மகிழ்வளிக்கும் நல்ல புகை எது வாழ்விற்கே பகையாகும் தீய புகை எது என்று அழகாய்ப் பட்டியலிட்டுள்ளார் திருமிகு. வனிதா.

தாயோ மனைவியோ
சமைக்கும்போது
புகை வந்தால்
புகை நல்லது 

தேவை இல்லாத
குப்பைகளை ஏறிக்கும்
வரும் புகை
வீடையும் நாட்டை
சுத்தமாக்கும் புகை 

தீபாவளிக்கு  வெடிக்கும்
பட்டாசின் புகை
அனைவருக்கும் தருவது
மகிழ்ச்சியின் புன்னகை   

ஆனால்
நீ  உன் வாயில்
புகைக்கும் புகை
உனக்கும்
உன் வீட்டுக்கும் நாட்டுக்கும்
கேடு  புகை
அப்புகை
உன்  உயிரையும்
உன் உடலையும்
சுடுகாட்டில் எரிக்கும் புகையாக
மாறிடக்கூடாது.

***

வெளிச்சத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அடையாளப்படுத்துகின்றனர். அவ்வகையில், இரவுக்குள் ஓர் இரவு திரைவிலக்கிக் காட்டுவதில்தான் தெரிகின்றது என் வெளிச்சம் என்கிறார் திரு. கவிஜி. 

நினைக்காத போதும்
மறக்கத்தான்
முடியவில்லை
மனநிலை பிறழ்ந்தவன்
சூட்சுமம்

தொடர்ந்து
பேசிக் கொண்டேயிருக்கும்
மொழிக்குள்
மௌனமாய் நிர்வாணம்
சுமக்கிறது நிழல்

சுற்றும் முற்றும்
பார்க்க முடியாத தருணத்தை
வேலிக்குள் தவழவிடும்
குதர்க்கம் தாக்கும்
தர்க்கம்

காற்றேயில்லாத போதும்
தூற்றிக் கொள்ளும்
ஜடங்களின் இருண்மைக்குள்
இயலாத சக்கரமாய்
புது ஏக்கம்

இதோடு முடிகிறதாய்
நினைக்கும் இரவுக்குள்
ஓர் இரவு
திரை விலக்கி
காட்டுவதில் தெரிகிறது
என் வெளிச்சம்…!

*** 

’இருளில் இருளைத் தேடும் காற்றாயிராதே! உன் மனவானில் நம்பிக்கைக் கதிர்கள் எழும்வரை வாழ்க்கை விடியாதே!’ என்கிறார் திரு. சிவசங்கர்.

உறங்கிடும்
இரவுக்கும்
பகலுக்கும்
இடையினில்
நடந்திடும்
திகம்பரக்
காட்சிகள்
எதையுமே
நம்மால்
வெளிச்சங்கள்
இன்றிக் 
கண்டிடத்
தெரியாதே! 

தெரியாக்
குழப்பங்கள்
மனதினில்
சூழ்ந்திட
விளக்கங்கள்
தேடித்
திரிபவன்
போலே
இருளினில் 
இருளைத் 
தேடி நீ
காற்றாய்
அலையாதே!

[…]

முடிவிலாத்
துன்பங்கள்
தாங்கிடும்
உனக்குள்
இருக்கும்
பிரபஞ்ச
வானில்
துளிர்விடத்
தொடங்கிடும்
நம்பிக்கைக்
கதிர்கள்
எழும்வரை
விடியாதே!

[…]

தவறிடும்
காரியம்
நிகழ்ந்திடும்
போதிலும்
சுடரொளி
போலே
இயங்கிடு
வாழ்வின்
இருளதை
வென்றிடு
அதுவரை
இரவினில்
உறங்காதே!…

*** 

பசி போக்கும் புகை; பகையாகும் புகை; அலறவைக்கும் புகை; வாழ்க்கையை அறியவைக்கும் புகை எனப் புகையின் பல்வேறு அவதாரங்களை நமக்கு அறிமுகப்படுத்துகின்றார் திரு. கொ. வை. அரங்கநாதன். 

புகை பகையாகி
புற்று நோயாகும்
பூரித்து நீ இழுத்தால்!

புகைப் பசிபோக்கும்
பூனைத் தூங்கிய
அடுப்பிலிருந்து
வெளிவரும்போது

புகை அலறவைக்கும்
கூறையிலிருந்து
கூப்பிடும்போது!

புகை ஆசானாகி
நிலையாமை போதிக்கும்
மயானத்திலிருந்து
மூண்டெழும்போது!

புகை மகிழ்வாக்கும்
தன்னுள் புதைந்த
ஏழைச் சிறாரின்
உழைப்பைப் பூத்தெறியாய்
உமிழும்போது!

நெருப்பின்றி புகையாது
நேற்றையப் பழமொழி
பகையாலேயேப் புகையும்
நெஞ்சங்களின் காலமிது

புகை
நல்லதா கெட்டதா
புலப்படும்
இடத்தை வைத்தேத்
தீர்மானிக்கப்படுகிறது!

*** 

மத்தாப்பை விலைகொடுத்து வாங்கும் பணம்படைத்தவனைவிட, வழியில் கண்டெடுத்து எரியவிடும் எளியவன் அதிக மகிழ்ச்சியடைகின்றான் என்பது திரு. செண்பக ஜெகதீசனின் எண்ணம். 

விலைகொடுத்து வாங்கி
வெடிப்பவனுக்கு
வராத மகிழ்ச்சி
வந்துவிடுகிறது,
வழியில் கிடைத்த
பாதி எரிந்த மத்தாப்பை
எரியவிடும் ஏழைக்கு…!

*** 

’வறுமையில் நீ வாடினாலும், மத்தாப்புக் கொளுத்தும் உன் கண்களில் தெரியும் ஒளி, உன் ஒளிமயமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது!’ என்று இச்சிறுவன் குறித்து மதிப்பீடு செய்கின்றார் திரு. க. கமலகண்ணன். 

புகையின் மேகங்களுக்கு நடுவே நீ
வறுமையின் வாழ்க்கைக்கு நடுவே நீ
எண்ணங்களிலும் செயல்களிலும் தீர்க்கம்
மாறப்போகும் உன் வாழ்க்கையே சொர்க்கம்
உடம்புக்
களைத்த போதும்
உழைப்புச் சளைத்த போதும்
விழாக் கோலத்தில் உருக்கமாய்
ஒளிர்வது மத்தாப்பு மட்டுல்ல
அசராமல் பார்க்கும் உன் கண்களும்தான்!

*** 

’ஊரெல்லாம் கேட்கும் வெடிச்சத்தத்தில் எங்கள் வயிறுபோடும் பசிச் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை; இருள் மண்டிக்கிடக்கும் எங்கள் இல்லம் தற்காலிகமாய் ஒளிபெறுவது யாரோ கிழித்துப்போட்ட மத்தாப்பின் கணநேர வெளிச்சத்தில் மட்டுமே!’ என, கல்விக்கனவுகளைச் சுமந்து திரியும் ஏழைச்சிறுவன் ஒருவனின் ஏக்கத்தை ஆழமாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

எங்கள் அவதரிப்பு
புவியில் போராடத்தான்
உயிரைப்பணயம் வைத்து
உழைக்கிறோம்
கந்தகத்தையும் பாஸ்பரஸையும்
கையில்பூசிக்கொண்டு
சிறார்களைவேலைக்குப்
பயன் படுத்தக்கூடாதென்று
சட்டம் இருந்தாலும்
சட்டத்தை சட்டை செய்யாதவர்கள்
இருக்கும் வரை எங்கள்
குடும்ப வண்டிக்கு பழுதில்லை
[…]
ஊரெங்கும் கேட்கும் வெடிச் சத்தத்தில்
எங்கள் வெறும் வயிறு
போடும் சத்தம் காணாமல் போகும்
இருள் மண்டி கிடக்கும் எங்கள்
இல்லத்தில் யாரோ எறித்துப்போட்ட
மீதமான கம்பி மத்தாப்பின்
ஒளியில் ஏற்படும்
தற்காலிக வெளிச்சம் மட்டுமே
மீதி நேரம் வீடும் வயிறும்
புகைச்சலில் போராடும்
என் போன்ற சிறார்கள்
நன் முறையில் பள்ளிபோக
நான் மட்டும் வெடிக்கிடங்கில்
என் பள்ளிக்கனவுகள்
எப்போது விடியும்?

*** 

’கருகும் கந்தகப் பூக்களால் எங்கள் வாழ்வும் அவ்வப்போது கருகினாலும், தன்னம்பிக்கை எனும் ஒளியை நாங்கள் என்றும் இழக்கவில்லை’ எனும் நம்பிக்கை நாயகனை நம்கண்முன் நிறுத்துகின்றார் திரு. இளவல் ஹரிஹரன். 

ஒற்றைக் கம்பியில்
ஒளிரும் சுடரில்
ஒருநாள் பசியோ
தீர்ந்திருக்கும்……..

கலையும் புகையில்
தெரியும் கனவுகள்
மெல்ல….மெல்லக்
கலைந்திருக்கும்……

கந்தகப் பூக்கள்
கருகும் வாடையில்
அகால மரணம் திடீரென
வாழ்வை ஒழித்திருக்கும்……..

இருந்தும் என்ன……
இழக்கா தன்னம்பிக்கை
இருக்கும் வாழ்வை
சுடராய் வெளிச்ச ஒளிகொடுக்கும்

***

கவிதை மத்தாப்புக் கொளுத்திக் கருத்துக்களை அழகான ஒளிச்சிதறல்களாய்த் தந்திருக்கும் கவிஞர் பெருமக்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்.

அடுத்து நாம் காணவிருப்பது இவ்வாரத்தின் சிறந்த கவிஞரை! 

”உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்கிறது புறநானூறு. ஆனால் கல்விச்செல்வத்தை உறுபொருள் கொடுத்துப் பெறுவதென்பது ஏழை எளியோர்க்குச் சாத்தியப்படுவதாய் இல்லையே…என் செய்வது? அதனால்தான் அவர் வீட்டுப் பிள்ளைகள் மத்தாப்பாய்ச் சிரித்துக்கொண்டு மகிழ்வோடு கல்விகற்கும் வயதில் கந்தகத் தொழிற்சாலைகளில் வேலைசெய்து கருகிப் போகின்றனர். ’அச்சிறார்களின் இருண்ட வாழ்க்கையில் விளைவதே வெளிச்சம் தரும் வண்ண மத்தாப்புக்கள்’ எனும் கவிதையொன்றில் என் நெஞ்சம் நெகிழ்ந்தது! 

உன் மத்தாப்பு சிரிக்கும் ஒவ்வொரு பொழுதும்
பட்டாசுத் தொழிற்சாலைகளில் புகைந்து
கொண்டுதானிருக்கிறது
குழந்தைத் தொழிலாளர்களின்
எதிர்காலம் .

ஒருசிலரின்
வண்ணமயமான வேடிக்கைகளுக்கு
பல சிறுவர்களின் இருண்ட வாழ்க்கை
துணை போகின்றன என்பது கண்கூடு.

நமது புன்னகைக்கு
அவர்களின் கண்ணீரே
அடித்தளமிடுகிறது 

மத்தாப்புக்களின்
தலையில் தீ வைக்கும்போது
அது பல ஏழை சிறார்களின்
எதிர்காலத்தின் மேல் வைக்கப்படும்
கொள்ளி என்பதை உணர்ந்தால் போதும்
வெளியே புகையும் அதுஇனி
உன் உள்ளே புகையும் 

வாண வேடிக்கைக்குள் காணாமல்போகும் இளஞ்சிறாரின் வாழ்க்கையை இதயபூர்வமாய்ப் பதிவுசெய்திருக்கும் திரு. மெய்யன் நடராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞரே!

*** 

மத்தாப்பைக் கையிலேந்தி அதனுள் ஒளிந்திருக்கும் வேதனையான வாழ்வியல் உண்மைகளைச் சிந்தித்துச் சிந்தை நைந்துகொண்டிருக்கும் சிறுவன் ஒருவனைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. தாரமங்கலம் வளவன்.

எரியும் இந்த மத்தாப்பை யார் செய்திருப்பார்..
என்னைப் போல் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும்
மற்றுமொரு சிறுவனா

எரிவது என்ன.. மத்தாப்பா..
இல்லை.. என் அம்மாவைப் போன்ற தாய்களின் வயிறா..

ஓடித் திரிந்து பாடம் கற்கும் வயதில்
நான் உழைத்து தினம் கொண்டு வரும் சொற்ப கூலி,
டாஸ்மாக்கில் கரைந்து போகும்
என் அப்பாவின் கூலிக்கு பதிலாகுமா..

நாளெல்லாம் உழைத்து
பணத்துடன் வீட்டுக்கு வரவேண்டிய அப்பா
போதையுடன் வரும் போது
நான் என்ன செய்ய வேண்டும்..
யோசிக்கிறேன்..

தொலைத்தது என்ன
எங்களைப் போன்றோரின் எதிர்காலமா..
அது இந்த மத்தாப்பு வெளிச்சத்தில் கிடைக்குமா..

இன்று மட்டும் தான் எனக்கு
விடுமுறை..
நாளைக்கு நான் வேலைக்கு
போயாக வேண்டும் என்பதால்
எல்லாவற்றையும் மறந்து விட்டு
இன்று தீபாவளியை மகிழ்ச்சியாய்
கொண்டாடுவதா..
யோசிக்கிறேன் நான்.. 

இக்கவிதையைப் பாராட்டுக்குரியதாய்த் தெரிவிக்கின்றேன். 

கவிஞர்கள் அனைவருக்கும் மீண்டும் என் வாழ்த்தும் பாராட்டும்!  

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 39-இன் முடிவுகள்

  1. மிகச் சரியான தேர்வு ஒவ்வொன்றிற்கும் தந்திருக்கின்ற திருக்குரலைப் போல மிக சுருக்கமாய் 1 லட்டர் பாலை 100 மிலியாய் சுண்ட காய்ச்சியது போன்ற உணர்வை தந்திருக்கிறீர்கள் மேகலா இராமமூர்த்தி 

    நன்றிகளும் பாராட்டுக்களும்

    திரு. மெய்யன் நடராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  2. எனது கவிதையை பாராட்டுக்கு உரிய கவிதையாக தேர்வு செய்தமைக்கு நனறி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *