பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
சத்தியமணி
கணபதி நின்பொற் தாளடி சரணம்
ரிதிசித்தி நிம்மதி தா
ஆழ்வார் அடிபற்றி அருட்பக்தி பெற்றாரும்
தாழ்வாரோ இவ்வையகத்தே
சக்தியை தந்துநல் சாந்தமும் தந்து
பக்தியை தந்துதிரு மகளுடன்சேர்
யுக்தியை தருமுன் அருள்கொண்டபின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
நிறைவுடை மனதும் குறைவிலா தனமும்
மறைதரு நாவும் நவின்றிடும் குணமும்
இறையென தினமுன் தரிசனம் தந்தபின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
ஜாதகம் ராசிகள் கோள்களும் காலமும்
சாதகம் ஆக்கிடும் சங்கதி அறிந்தவன்
காதகம் மந்திரம் நாமமாய் ஓதியும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
அலையிலா ஆழியில் அரண்மடி யோகமும்
மலையதன் ஏழினில் நின்றருங் கோலமும்
நிலையிது எனதினம் எழிலதை காட்டினாய்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
அருவியாய் அனுதினம் அருள்தர விழைந்து
கருவியாய் இயங்கி நேரலைத் தருவித்து
மருவியான் மகிழவே திருவிழா காணவைத்தும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
மாதவா கோவிந்தா கோபாலா திரு
மாலவா அச்சுதா அனந்தா கிருஷ்ணா
கேசவா நாராயணா எனக்கொஞ்சியபின்னும்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
திருமகள் உடன்மகிழ் திருநிவாசா என்றன்
இருதய மலர்வளர் அலர்மங்கை நாதா
ஒருமுக மாயெனது உள்ளே கொலுவிருக்க
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
செப்பியதும் நீயாவாய் செபிப்பதும் நீயாவாய்
தப்பியதும் நீயாவாய் தவிப்பதும் நீயாவாய்
அப்பியதும் களபமாய் ஆக்கியதும் நீயாயின்
பிறவிகள் தொடருமோ சொல் வேங்கடேசா !
அழகானக் கண்களில் அலங்காரம் நீயானாய்
பழகாத நாவினிலோ பைந்தமிழ் நீயானாய்
நிழலாக வந்தெனக்கு உயிரானாய் உறவானாய்
குழலாக என்னை இசை
(இதை எழுதிய மூன்றாம் நாள் ஒரு அதிசயம் நிகழ்ந்தது ! வேங்கடன் தில்லிக்கு வந்து தரிசனம் தரும் செய்தி ..எட்டு நாட்கள் வைபவம் அவனுக்கும் எனக்கும் தான்..ஸ்ரீ வேங்கடேசாய நம:)