சு.கோதண்டராமன்

அப்பரும் ஆளுடைய பிள்ளையும்

vallavan-kanavu

வளவன் கனவு – பகுதி 22

அப்பர்தாம் எங்குற்றார் இப்பொழுதென் றருள்செய்யச்
செப்பரிய புகழ்த்திருநாவுக்கரசர் செப்புவார்
ஒப்பரிய தவஞ்செய்தேன் ஆதலினால் உம்மடிகள்
இப்பொழுது தாங்கிவரப் பெற்றுய்ந்தேன் யான்என்றார்.

                              -சேக்கிழார்

 

இவர் பால் மணம் மாறாப் பச்சிளம் பாலகர். அவர் பழுத்து முதிர்ந்தவர்.

இவர் வேதியர் குலத்தவர். அவர் வேறு குலத்தவர்.

இவர் தந்தையின் தோள் மீதும் பல்லக்கிலும் அமர்ந்தே பயணம் செய்தவர். அவர் கால்நடையாகவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசித்தவர்.

இவர் வேத வேதாங்கங்களை ஓதாது உணர்ந்தவர். அவர் வேறு சமயத்து நூல்களை ஓதி அவற்றின் பயனின்மையை உணர்ந்து துறந்தவர்.

இவர் பிறக்கும்போதே சமணத்தை ஒழிப்பதே எனது குறிக்கோள் என முழங்கியவர். அவர் குறிக்கோள் இல்லாது வாழ்ந்து கெட்டேனே என்று வருந்தியவர்.

இவர் இளமைக்கே உரிய துடிப்பும் பதட்டமும் கொண்டவர். அவர் அனுபவத்தால் பெற்ற பணிவும் கனிவும் கொண்டவர்.

இவர் ஆனந்தமே வடிவானவர். அவர் தன் கடந்த கால வாழ்க்கையை நினைந்து கழிவிரக்கம் கொள்பவர்.

இவர் குழந்தைக்கே உரிய இயல்புடன் ஓடும் நதி, பாடும் குயில், முரலும் வண்டு, துள்ளும் மீன் என்று எல்லாவற்றிலும் உள்ள இன்பத்தை ரசிப்பவர். அவர் மனிதப் பிறவி துன்ப மயமானது என்ற கொள்கையில் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்துவிட்டுக் கடைசியில் இவ்வுலகம் இன்பமானது, இறைவனின் திருவுருவைக் காணப் பெற்றால் எத்தனை பிறவி வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று உணர்ந்தவர்.

இவர் இறைவனின் உருவத்தைப் பலவாறாக வர்ணித்துக் கேட்பவர் மனதில் அந்த வடிவத்தைப் பதியச் செய்தவர். அவர் நீரிலும் நிலத்திலும் விண்ணிலும் தீயிலும் காற்றிலும் இறைவனைக் கண்டு மகிழ்ந்து மற்றவர்க்கும் காட்டியவர்.

சிவனடியாரை எந்தக் கோளும் நாளும் துன்புறுத்த முடியாது என்னும் அசைக்க முடியாத சிவபக்தி உடையவர் இவர். கோள்கள் மனிதனுக்குத் தீங்கிழைக்க வல்லன என்ற சராசரி மானிடரின் நம்பிக்கைகளை ஏற்றவர் அவர்.

இருவரையும் இணைத்தது சிவம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வதால் பரகதி கெடாது என்பதில் இருவரும் ஒன்றுபட்டனர். ஊர் ஊராகச் சென்று வேத நெறியைப் பரப்புவதில் ஒன்றுபட்டனர். சிவனைப் போற்றும் தமிழோடு பாடல் இசைத்து மக்களைக் கவர்வதில்  இருவரும் ஒன்றுபட்டனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் காண விரும்பினர்.

இடம் – பூந்துருத்தி.

அப்பர் அங்கு வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட ஆளுடைய பிள்ளை, பல்லக்கில் இருந்தபடியே “அப்பர் எங்கு இருக்கிறார்?” என்று வினவ, பல்லக்கின் அடியிலிருந்து குரல் கொடுத்தார் அப்பர், “தங்களைத் தாங்கும் பேறு பெற்று இங்கு உள்ளேன்.”

“அடடா, என்ன அபசாரம்! இவ்வளவு பெரிய சிவத் தொண்டர் என்னைச் சுமப்பதா?” என்று இளையவர் கீழே குதித்துப் பெரியவர் காலில் விழ, அதற்கு முன், “இறைவனால் ஞானப்பால் ஊட்டப் பெற்றவர் முன் நான் மிக மிகத் தாழ்ந்தவன்” என்று கூறி அவர் இவர் காலில் விழ எங்கும் உணர்ச்சி மயம். கூடியிருந்த அன்பர்கள் கண்ணீர் வழிய அவர்களது அன்பைப் போற்றினர்.

அங்கு வயது கரைந்தது. சாதி மறைந்தது. செல்வத்திற்கு மதிப்பில்லை. கல்வியைக் கவனிப்பார் இல்லை. எங்கும் சிவம் ஒன்றே நிறைந்தது.

இருவரும் சேர்ந்தே மறைக்காடு என்னும் தலத்திற்குப் போனார்கள். வேதங்கள் இறைவனைப் பூசித்த பெருமை உடைய பழம்பதி. வேதியராகப் பிறக்காவிடினும் வேத நெறியில் பற்றுக் கொண்ட அப்பர் அவ்வூர்க் கோவிலில் வேதங்களால் அடைக்கப்பட்டிருந்த கதவைத் திறக்குமாறு ஒரு பதிகம் பாடினார். கதவு திறந்தது. ஞான சம்பந்தர் பார்த்தார். வேதங்களை ஓதி அவ்வழியே முத்தி அடைதல் எல்லோர்க்கும் எளிதல்ல. எல்லோர்க்கும் எளிதான வழியான நமச்சிவாய மந்திரம் இருக்க, கடுமையான வழிகளைத் திறந்து விடுவதால் மக்கள் சமயத்தைக் கண்டு அஞ்சி ஓட ஏதுவாகும் என்று கருதி அக்கதவு மூடுமாறு பாடினார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *