க. பாலசுப்பிரமணியன்

 

மார்கழி மணாளன் திருக்காப்பு

 

வாழிய வாழிய வலக்கை சக்கரம்

வாழிய வாழிய மலர்க்கை சங்கம்

வாழிய வாழிய துளசி மோகனன்

வாழிய வாழிய மார்கழி மணாளன் !

 

வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்

கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்

விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்

வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும் !

 

திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்

பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்

கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்

கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !

 

பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி

பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !

போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்

போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !

 

அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை

ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !

மார்கழிக் காலையில் மாதவன் போற்றி

மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !

 

மார்கழி மணாளன்  (1)

திருவரங்கம்  -ஸ்ரீ ரங்கநாதர்

 

அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்

அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !

அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்

அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !

 

ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க

அங்கமெல்லாம் புதுநிலவாய்ப்  பொலிந்திருக்க

அரக்கன்தம்பி ஆள்திசைக்கும்  அருள்கிடைக்க

அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !

 

விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க

வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில்  ஒலித்திருக்க

விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க

விழிமூடி விளையாடும் வைகுந்தன்  அருள்காப்பு !

 

துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்

துயர்துடைக்கச்  சென்றதுவோ அகிலமெல்லாம்?

தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்

துளசி மாலையணி  துவாரகையான் திருக்காப்பு! !

 

ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்

அமர்ந்திடவே  ஆசனங்கள் ஏற்கவில்லை !

காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்

காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !

 

நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே

நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே

நீர்மேகக் கண்ணனவன்  பாதத்தையே

நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மார்கழி மணாளன்

  1. வைகறை பொழுதில் எழுந்தால் வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும் கோடான கோடி நல்லெண்ணங்களும் நம் மனங்களில் உதயமாகி வெகு எளிதாக வெற்றியை அடையலாம். . மார்கழி மணாளனின் கவிதை மாலையாக திருவரங்கம் -ஸ்ரீ ரங்கநாதருக்கு நண்பர் திரு க. பாலசுப்ரமணியன் மாலையிட்ட விதம் அருமையிலும் அருமை. நண்பர் திரு க. பாலசுப்ரமணியன்அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பாராட்டுக்கள் நன்றி வணக்கம்

  2. நண்பர் திரு ராமலிங்கத்தின் அன்பார்ந்த பாராட்டுதல்களுக்கு மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *