க. பாலசுப்பிரமணியன்

9312761a-f371-4a49-b924-148c711fdcae

அழகுக்கு அழகு சேர்க்கும் கள்ளழகா !

அலைமகளும் நிலமகளும் துணைசேர

குதிரைமேல் பவனிவந்து குறைகேட்டுக்

கூடலுக்கும் அழகு சேர்க்கும் கூடலழகா  !

 

மண்டூகர் தவமேற்று மனமிரங்கி

விண்ணுலகம் காட்டிய மாதவனே !

மலை நடுவே நூபுரகங்கை தந்து

கல்லிலும் நீர்சுரக்கும் கள்ளழகா !!

 

சீர்கொண்டு வந்த தங்கைக்குச்

சிவனோடு மணம் முடிந்ததென்று

சினத்தோடு  சீரெல்லாம் வைகையிலே

சிதறவிட்ட ஸ்ரீமன் நாராயணா !

 

சுந்தரத் தமிழில் சுவையோடு நக்கீரன் பாட

சுவைத்து அருளிட்ட  சுந்தரராஜா !

சோலையிலே சுந்தரவல்லி கைபிடித்து

சோகமெல்லாம் நீக்கிடும் ஸ்ரீதரனே !

 

ஆழ்வார்கள் பலரோடு ஆண்டாள் குரல்கேட்டு

ஆனந்தநிலையிலே அருள்தரும் அமரா !

கருப்பண்ணசாமிக்குக்  கருணை காட்டிக்

கள்ளர் குலம்காத்த கார்மேகப் பெருமானே !

 

மயிலோடு விளையாடும் மருகன் அருகில்

குயில்பாட்டுப் பாடும் குறத்தியர் மலையினில்

குணக்குன்றாய் நீ நின்றாய் குறைதீர்க்க

குரல்கேட்டு உடன் வருவாய் கோவிந்தா !

 

தவமொன்றும் நானறியேன் தரணியில்

தனதாக யாருமில்லை புவியினில் !

தாயாகத் தனயனாக நீ!  தோழனாகத்

தோள் கொடுப்பாய் தூயவனே  தாமோதரா !

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *