பழைய வீதி
சந்தர் சுப்பிரமணியன்
பாதி திறந்த சன்னலில்
சதாசர்வ காலமும்
தெரியும் கிழவியின் முகம்:
‘பாட்டி, பூக்காரன் போய்ட்டானா?’
‘இல்லை, இன்னும் போகலைம்மா’
‘பாட்டி, பால்காரன் வந்தா எங்க வீட்டிலே பால் ஊத்தச்சொல்லுங்க’
‘அவன் போயி அரை மணிநேரம் ஆவுது தாயி’
‘பாட்டி, கோவில் தேர் இந்த பக்கம் வந்தாச்சா?’
‘இல்லைம்மா, அதுக்காகத்தான் காத்திட்டு இருக்கேன்’
‘பாட்டி எங்க வீட்டுச்சுவரிலே யார் போஸ்டர் ஒட்டினாங்க தெரியுமா?’
‘கூழ் ஊத்தற பசங்க தாயி’
பாட்டிக்குத் தெரியாமல்
ஒருவரும் அந்தத் தெருவைக் கடந்ததில்லை –
அவள் சாவுஊர்வலத்தைத் தவிர.