மார்கழி மணாளன் 13 திருவனந்தபுரம் – பத்மநாபன்
க. பாலசுப்பிரமணியன்
ஆனந்தன் அனந்தன் அச்சுதன் அரங்கன்
ஆதிசேஷன் மேலுறை அனந்த சயனன்
பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்
பாரினைக் காக்க வந்தான் பத்மநாபன் !
மாமுனி தேடிடவே மறைந்தான் மாயவன்
மாயமாய் இலுப்பையில் இணைந்தான் தூயவன்
மங்கலம் மலர்ந்திடும் மாபெரும் உருவம்
மா தவன் தண்டத்தில் மும்முறை அடக்கம் !
கருவண்ணம் தலை நாகம் கருநீலம் உடல் மின்னும்
அலையாழி பால்வண்ணம் அரங்கன் எழில் குன்றம் !
தலைவாசல் ஒருபக்கம் பொன் திருப்பாதம் மறுபக்கம்
திருமார்போ நேர்நோக்கும் திருவருளோ நம் பக்கம் !
நிலமகள் அலைமகள் பதம் போற்ற
கலைமகள் தலைவனும் நாபியில் சிறக்க
மோனத்தில் யோகத்தில் போகத்தை நிறுத்தி
மோகனன் தியானத்தில் பூமியின் சுழற்சி !
அலையாழி துயின்றாலும் சிலையாகச் சமைந்தாலும்
நிலையாத வாழ்க்கையைக் கலையாகப் படைத்தான்
மரியாத உயிருக்கு மரிக்கின்ற உடல் படைத்த மாயன்
மனத்துள்ளே நிறுத்திட்டால் மார்கழியில் மங்கலமே! ‘
ஊழ்வினையால் ஒருடலில் நான் சிறையிருக்க
ஆழ்கடலில் ஆனந்த சயனத்தில் நீயிருக்க
தாளருகில் திருவாய் திருமகளும் அமர்ந்திருக்க
தந்தருள்வாய் தாளிரண்டும் தாசனுக்கே துணையிருக்க !
வஞ்சமுடை நெஞ்சினில ஆணவமே ஆர்பரிக்க
கொஞ்சிவரும் காற்றோ நாசியிலே நாள் வரைக்கும் !
மிஞ்சியதாய் ஏதொன்றும் மரித்தவுடன் கிடைப்பதில்லை !
மாதவனே ! உனையன்றி உறவேதும் உண்மையில்லை !