பழமொழி கூறும் பாடம்

0

– தேமொழி.

பழமொழி: பெரிது அகழின் பாம்பு காண்பாரும் உடைத்து

 

உரிமைதனிற் றம்மோ டுழந்தமை கண்டு
பிரிவின்றிப் போற்றப் படுவார் – திரிவின்றித்
தாம்பெற் றதனா லுவவார் பெரிதகழிற்
பாம்புகாண் பாரு முடைத்து.

(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)

 

பதம் பிரித்து:
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு
பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித்
தாம் பெற்றதனால் உவவார்; பெரிது அகழின்,
பாம்பு காண்பாரும் உடைத்து.

பொருள் விளக்கம்:
உரிமையோடு (நண்பர் ஒருவர் தனது துன்பத்திலும்) தன்னோடு வருந்தியதைப் பார்த்து, வேறுபாடு காட்டாது அவரால் பாதுகாக்கப்பட்டவர், நண்பரால் கிடைத்த உதவியை ஏற்று மனவருத்தமின்றி அதனால் நிறைவடைவார். (அவ்வாறு செய்யாமல், அதிக உதவி எதிர்பார்த்தால்) பெரிதும் ஆழமாகத் தோண்டும் பொழுது பாம்பையும் காண நேரலாம் (பேராசையால் பெரும் இழப்பை அடைவது போல, தொல்லை தருவதைத் தாளாது நண்பரும் சீற்றம் அடையக்கூடும்)

பழமொழி சொல்லும் பாடம்: கிடைத்த உதவியில் மனநிறைவு கொள்வது சிறந்த நட்பின் பண்பாகும். பேராசை கொண்டு அதிக உதவி எதிர்பார்த்தால் பெரும் இழப்பினை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனையொத்த வழக்குகளாக, ‘புதையல் விரும்பித் தோண்டும் பொழுது பூதம் புறப்பட்டது’ என்றும், ‘எலி பிடிக்கும் எண்ணத்தில் புற்றினைத் தோண்ட பாம்பு கிளம்பியது’ என்றும் கூறும் வழக்கங்களும் உள்ளன. இக்கருத்தை விளக்கும் குறள்,

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். (குறள்: 700)

பலநாள் பழகிய நட்பு என்று உரிமை எடுத்துக் கொண்டு, முறையற்ற செயலைச் செய்தால், அது அந்த நட்பிற்கு கேடு விளைவிக்கும் என்று கூறுகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *