மார்கழி மணாளன் -19 பத்ரிநாத் – ஸ்ரீ பத்ரி நாராயணர்
க. பாலசுப்பிரமணியன்
பனிமலையைத் திருமலையாய் கொண்டே
அருள் மழையால் கலி தீர்க்கும் நவநீதா !
ஊனுருக நினைத்தோரைத் தன்னருகில் வைத்தே
வானுயர்ந்த வளம் தருகின்ற குணசீலா !
பாதங்கள் ஆயிரம் நான் போற்றினாலும்
பத்ரிவாசா ! புகல் பாதம் உனதன்றோ ?
பத்மாசனத்தில் அமர்ந்தோனே ! பரந்தாமா!
பால்வண்ணப் பனிமலையில் கார்வண்ணா !
பனிகாத்தாள் பொற்செல்வி பத்ரிமரமாய்
புவிகாக்க நீ அமர்ந்தாய் புனிதனாய் !
புகழ்பாடும் நாரதனும் புகல் கேட்டான்
புண்ணியனே ! போற்றியதே மண்ணினமே !
ஆன்மாவிற்குப் பொருள் சொன்ன பரமாத்மா
ஆனந்தா ! அலர்மேல் மன்னா ! அச்சுதா!
மோனத்தில் தியானத்தில் அமர்ந்த முகுந்தா !
வானத்தில் இருப்போரும் வணங்கும் வைகுந்தா !
வேதத்தில் நாதத்தில் விளைந்தோனே விஸ்வரூபா !
தேகத்தில் உயிராய் திகழ்வோனே தாமோதரா !
பாசத்தில் அழைத்தோர் அன்பினிலே ஆதிமூலா!
பாசத்தின் வேடங்கள் உடலென்ற பத்ரிநாராயணா !!
காலங்கள் அனைத்திற்கும் பாலம் நீயன்றோ !
கடமைகள் முடிந்திடவே காட்சியும் உனதன்றோ !
கற்பனையில் கண்டாலும் கணத்தினிலே வந்திடுவாய் !
கண்ணா! மணிவண்ணா! காலமெல்லாம் நீயே காப்பு !