மார்கழி மணாளன் 22 திரு அன்பில் – வடிவழகிய நம்பி
க. பாலசுப்பிரமணியன்
நீர்பாதி நிலம்பாதி தன்னில் தவமாக உடல் நிறுத்தி
நிலையில்லா மனம்தன்னை இறை நினைவில் நிறுத்தி
நினைவின் கருவாய் நீர்வண்ணன் உருவம் நிறுத்தி
நினைவிழந்த தவத்தோனாய் நின்றான் சுதபனுமே !
சுடுசொல்லில் சுவைகண்ட துர்வாசர் நிலையிழந்து
உருமாற்றி உருக்குலைந்த தவளையாய் உருவாக்க
உள்ளத்திலே தவமாகத் தாமோதரன் மட்டுமிருக்க
உளம்கனிந்த வடிவழகன் சுதபனுக்குக் காட்சி அன்பில் !
தன்னழகில் நிலைகுலைந்த தவத்தோன் நான்முகனும்
விண்ணுலகில் வேறில்லையென்ற மமதையில் நிற்க
வடிவழகன் கண்டதுமே விழிநிறுத்தி வியந்தான் அன்பில்
கண்ணமுது தேடியவன் விண்ணமுது கிடைத்திடவே !
கண்ணழகு காலழகு கையழகு கண்ணா !
காண்கின்ற திசையெல்லாம் உன்னழகு !
கோலாட்ட நடையழகு கைகளிலே குழலழகு
குசேலன் நட்பழகு நீ குறைவில்லா வடிவழகு !
வாமன வடிவழகு! வளர்ந்திட்ட விஸ்வரூபம் அழகு !
வராஹ வடிவழகு! வீரனே! வில்லுந்தன் கையழகு !
தாழம்பூ மணமழகு! உன்னருகே தாயாரின் துணையழகு !
தாளாத அன்பழகு ! தூயவனே, உன் திருவுள்ளம் அழகு!