மார்கழி மணாளன் – 23 திருச்சேறை – சாரநாதன்
க. பாலசுப்பிரமணியன்
ஊழியிலிருந்து வேதங்கள் காத்திட வந்த மண்ணன்றோ
உலகத்தை மீண்டும் உய்வித்தது திருச்சேறை நிலமன்றோ !
பிரளயமும் கடந்திட புதுயுகமொன்று பிரம்மனும் படைத்திட
பரந்தாமன் அருளாலே வந்த திருச்சேறை திருவருளே !
புள்ளினமும் பூவினமும் காயோடு கனியினமும்
புல்லினமும் கொடியினமும் மண்ணூறும் உயிரினமும்
புவிசார்ந்த கோளினமும் புரியாத அசைவினமும்
புன்னைமர மாலனின் புல்லாங்குழல் இசைவந்தது !
யோகத்தில் உறங்கியும் கோளங்கள் காத்து
உறவுக்குப் பாலங்கள் உணர்வாலே வைத்து
உயிருக்கு உடலும் உடலுக்கு உணர்வும்
உறவாடும் கலைகொடுத்த உத்தமன் நீயன்றோ !
கங்கையோ உன் கால்கழுவி களிப்புற்றாள்
காவிரியோ கருணை வேண்டித் தவமிருந்தாள்
தவழ்கின்ற குழந்தையாய் தாய்பாசம் பெற்றே
தந்தாய் அவதாரத்தின் அருள் தரிசனமே !
கல்லொன்று வண்டியில் நித்தம் பூபாலன் களவாட
காரிருளில் ஓரிரவில் கோயில் கொண்டோய் !
காத்திடும் அபயக்கரத்தில் தாமரை எடுத்தாய்
காத்திடுவாய் கண்ணா ! மலர் போலக் காசினியை !
அஞ்சுகின்ற உள்ளமெல்லாம் காக்கும் அருளாளா !
ஐந்துதேவியர் கூடநின்று அருள்கின்ற பெருமாளே !
அண்டங்களின் சாரமான சத்வமே சாரநாதா !
அகிலமெல்லாம் அமைதியை அருள்வாயே ஆதிமூலா !