மார்கழி மணாளன் – 27 திருக்கண்ணபுரம் – சௌரிராஜப் பெருமாள்
க. பாலசுப்பிரமணியன்
கண்ணனின் கண்ணசைவில் கனிந்துவரும் பூபாளம்
குழலூதும் கையசைவில் காற்றிசைக்கும் மோகனமே
காலிரண்டும் தாளமிட கண்சிமிட்டும் கல்யாணி
கார்மேகன் கண்ணபுரம் காலமெல்லாம் ஆனந்தபைரவி !
கண்ணனின் கோவிலுக்கு மன்னவனும் மலரனுப்ப
கள்ளமாய் பட்டரும் அதை காசுக்கு விற்றார் !
கண்டறிந்த மன்னனுக்கு அளித்த மாலையிலே
கரியதோர் மயிர் கண்டு கலக்கமுற்றான் வேந்தனுமே !
கள்வனுக்குத் துணைவந்தான் கள்வன் கண்ணனுமே
கரியதோர் சிகை கண்டு கண்டோரும் வியந்தனரே
கண்ணனும் பெயர் கொண்டான் சௌரிராஜன்
கணநேரம் நினைத்தாலும் காத்திடும் கண்ணபுரமே !
மனமுடைந்து நின்றான் பக்தியுடன் முனயோதரன்
மங்கலமாய் பொங்கலிட காலம் கடந்ததேன்றே !
மனம்கசிந்து மாதவனும் மணியோசை ஒலித்திடவே
பொங்கல்மணம் பொங்கிடவே அருள் செய்தான் !
கண்ணபுரத்தான் கைப்பிடித்தான் மீனவப் பெண்ணை
காசினியில் சாதி பேதம் நீக்கி சமத்துவம் படைத்திடவே !
பாருள்ள படைப்பெல்லாம் பரந்தாமன் பார்வையில் ஒன்றே
பாதைகள் வேறானாலும் போகுமிடம் பரமபதம் ஒன்றே !