மார்கழி மணாளன் 29 – ஸ்ரீ வைகுண்டம் – கள்ளபிரான்
க. பாலசுப்பிரமணியன்
வேதங்களைக் காத்திடவே வேண்டி நின்றான் நான்முகனும்
வைகுண்டம் விட்டுவந்த மாதவனும் மனமிரங்கிக் காத்தான்
வானில் மட்டுமின்றி மண்ணிலோர் வைகுண்டம் படைத்தான்
வந்தவர்கள் நலம் காத்து வாழ்க்கைக்குப் பொருள் கொடுத்தான் !
கல்லுக்கும் பால் பொழிந்து கருணைகண்ட பசுவிடம்
குறை கண்ட மன்னவனும் பசுவைப் பழித்தே தொடர
குறைவில்லா கோபாலனை மண்ணுக்குள் கண்டான்
குலம் வாழ நல்லதோர் கோவில் கட்டி மகிழ்ந்தான் !
கள்ளனும் கொண்டான் கண்ணனிடம் காதல் நெஞ்சம்
காத்திட வேண்டியே நின்றான் கோகுலன் முன்னம்
கண்ணனே கள்வனாய்ச் சென்றான் காவலில் தஞ்சம்
கருணையின் வடிவே என்றும் கள்ளபிரான் மஞ்சம் !
கொஞ்சுபவர்க்குக் குழந்தையாய் வரும் கண்ணன்
கோலாகல வாழ்க்கைக்கு குழலூதும் அன்பன்
கோடித்துயர் வந்தாலும் கூட நிற்கும் நண்பன்
கோசங்கள் அழிந்ததுமே அணைக்கும் வைகுந்தன் !
வேண்டியவர்க்கு வேண்டியதைத் தந்துவிடும் வைகுண்டம்
வேண்டாதவர்க்கும் உடல் வினை முடிய வீடு தரும் !
வீதியில் வாழ்ந்தாலும் வீடு பணம் சேர்த்து உயர்ந்தாலும்
விதி முடிவில் விரும்பிச் செல்லும் வாசல் வைகுண்டம் !
மனம்விரும்பி மாதவனைத் தேடும் நேரம்
மாதங்கள் பன்னிரண்டில் மார்கழியைச் சேரும் !
மங்கலங்கள் பொங்கிவர வழிவிடும் மார்கழி
மாதவன் அருளோடு வருவாய் மீண்டும் வீடுதேடி !