செண்பக ஜெகதீசன்

ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.    (திருக்குறள் -656: வினைத்தூய்மை)

புதுக் கவிதையில்…

பெற்ற தாயைப்
பசியில் தவிக்கவிடுதல்
பெரும் பாவம்…

தாயவள் பசியில்
தவிக்கக் காணினும்,
என்றுமே செய்யாதே
அறிவுடைச் சான்றோர்கள்
பழித்துச்சொல்லும் செயலை…!

குறும்பாவில்… 

தாயவள் தவித்தாலும் பசியில்,
தொடங்காதே
தூய சான்றோர் வெறுக்கும் செயலை!

மரபுக் கவிதையில்… 

முன்னறி தெய்வம் இரண்டினிலே
  –முதலாம் தெய்வம் நமைப்பெற்ற
அன்னை பசியில் வாடிநிற்கும்
  –அவல நிலையே வந்தாலும்,
முன்னைப் பெரியோர் சான்றோர்கள்
  –முழுதாய்ப் பழிக்கும் செயலதைத்தான்
என்ன காரணம் காட்டியுமே
  –என்றும் நீதான் செய்திடாதே!

லிமரைக்கூ… 

கொடிய பசிதனில் வாடிடும் அன்னை
துயர்கண்டும், பெரியோர் பழிக்கும்
செயலது செய்ய மாற்றிடாதே உன்னை!

கிராமிய பாணியில்… 

செய்யாத செய்யாத
கொடுஞ்செயலச் செய்யாத… 

செய்யாத செய்யாத
பெரியவங்க விரும்பாததச்
செய்யாத செய்யாத,
பெரியவங்க பழிக்கிறதச்
செய்யாத செய்யாத… 

பெத்தவளே பசியோட
பட்டினியாக் கெடந்தாலும்
அதச்
செய்யாத செய்யாத… 

செய்யாத செய்யாத
கொடுஞ்செயலச் செய்யாத! 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *